‘அகடு’ விமர்சனம்

மகிழ்ச்சியான மனநிலையில் கொடைக்கானலுக்கு சிறுவயதில் இருந்தே ஒன்றாக படித்து வளர்ந்த நான்கு இளைஞர்கள் சுற்றுலா வருகின்றனர். அதேபோல் ஒரு டாக்டர் குடும்பமும் அங்கே சுற்றுலா வருகிறது. டாக்டர் தன் மனைவி , 12 வயது மகளுடன் இளைஞர்கள் தங்கும் விடுதிக்கு அருகில் தங்குகிறார் .

குடும்பத்துடன் ஊரைச் சுற்றிப் பார்க்க டாக்டர் காரில் செல்கிறார். போகிற வழியில் கார் மக்கர் செய்து நின்று விடுகிறது.அவ்வழியே செல்லும் இளைஞர்கள் உதவிக்கு வருகிறார்கள். டாக்டர் குடும்பத்தை தங்களது காரில் அழைத்து செல்கிறார்கள். இளைஞர்களும் டாக்டர் குடும்பமும் நட்பாகி விடுகின்றனர்.

இளைஞர்களின் நட்பினால் அன்றிரவு அவர்களுடன் டாக்டர் ஒன்றாக மது அருந்துகிறார் .மறுநாள் காலையில் இளைஞர்களில் ஒருவரும் ,டாக்டர் மகளும் காணாமல் போகிறார்கள். கொதிப்படைந்த டாக்டர் காணாமல் போன இளைஞன்தான் தன் மகளைச் கடத்தியிருப்பான் என சந்தேகப்பட்டுப் போலீசில் புகார் கொடுக்கிறார் .

போலீஸும் இளைஞனின் நண்பர்களை அடித்து விசாரித்து ,டாக்டர் மகளையும் அந்த இளைஞனையும் தேடிக்கொண்டு இருக்கும் நிலையில்,ஒரு புதரில் கொலை செய்யப்பட்ட இளைஞனின் உடல் கண்டெடுக்கப்படுகிறது .

போலீஸ் அதிகாரி ஜான் விஜய்க்கு ‘செக் போஸ்ட்’டில் இருக்கும் வன பாதுகாவலர் மீதும், காட்டுக்குள் கஞ்சா கடத்தும் 3 பேர் மீதும் சந்தேகம் ஏற்படுகிறது. விசாரணையில் அவர்கள் நிரபராதிகள் என்பது தெரிய வருகிறது. உண்மையான கொலையாளி யார் என்பதைக் கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

இளைஞர்களாக சித்தார்த் ,ஸ்ரீராம் ,கார்த்திக் , டாக்டராக விஜய் ஆனந்த் ,மனைவியாக அஞ்சலி நாயர் என நடிப்பில் அனைவரது பங்களிப்பும் நன்று .
காவல் ஆய்வாளராக வரும் ஜான் விஜய் தனது வழக்கமான சேஷ்டைகள் இல்லாமல் கேரட் செடியை வாயில் கடித்துக் கொண்டே வருகிறார்.

க்ரைம் திரில்லர் கதையை மையமாக வைத்து , டாக்டர் மகளை கடத்தியவர்கள் வன காவலாளியா , காணாமல் போன இளைஞனா, கஞ்சா விற்கும் கும்பலா என ரசிகர்களைக் குழப்பி, கடைசியில் திரைக்கதை அமைப்பில் யாருமே யூகிக்க முடியாத வகையில் எதிர்பாராத கிளைமாக்ஸ் என சிறிய பட்ஜெட்டில் தன் உயரத்திற்குப் பூபறித்திருக்கிறார் இயக்குநர்.

ஜான் சிவநேசனின் இசையும் , சாம்ராட்டின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .கதை முழுவதும் காட்டுக்குள் முடங்கிப்போனது, படத்தின் ஒரே பலவீனம். குறிப்பாக, ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகர்கின்றன.

போதையால் ஏற்படும் விளைவுகளை மையமாக வைத்து சிறிய பட்ஜெட்டில் இப்படத்தை இயக்கியுள்ள இயக்குநர் சுரேஷ் குமாரைத் தயாரிப்பாளரின் இயக்குநர் என்று பாராட்டலாம்!