அடுத்த ‘தரமணி’யாக வருகிறது ‘ஹௌரா பிரிட்ஜ்’

 சினிமாவில் பெண் கதாபாத்திரங்களை மையமாக கொண்டு வெற்றி படங்கள் என்றுமே வந்த வண்ணமுள்ளன. ‘தரமணி’ படத்தின் மூலம் தரமான வெற்றியை தந்த JSK Film Corporation நிறுவனம் தனது அடுத்த படமான ‘ஹௌரா பிரிட்ஜ்’ படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது ஒரு திரில்லர் படமாகும். தமிழ் மற்றும் கன்னடத்தில் உருவாக இருக்கும்   இப்படத்தை லோஹித் இயக்கவுள்ளார். JSK Film Corporation தயாரிப்பில் பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து தயாரிக்கப்படவுள்ள மற்றொரு சுவாரஸ்யமான கதை இது. இப்படத்தின் வசனத்தையும் பாடல்களையும் கபிலன் வைரமுத்து எழுதியுள்ளார். பிரியங்கா உபேந்திரா இப்படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.நடிகை ஐஸ்வர்யா, ப்ரியங்காவின் மகளாக நடிக்கவுள்ளார். கொல்கத்தாவை மையமாக வைத்து இக்கதை பின்னப்பட்டுள்ளது.

” ‘தரமணி’ படத்தை தயாரித்த பெருமையும் அதன் வெற்றியும் என்னை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி, திரை உலகில் மேலும் தலை நிமிர்ந்து நடக்க செய்துள்ளது. வணிகரீதியான வெற்றி மட்டுமில்லாமல் எனது தயாரிப்பு நிறுவனத்திற்கும் பெரும் அடையாளத்தை தந்துள்ளது ‘தரமணி’. ‘ஹௌரா பிரிட்ஜ்’ எனது அடுத்த தயாரிப்பாகும். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து பின்னப்பட்டுள்ள திரில்லர் கதை இது.

செப்டம்பர் 4 ஆம் தேதி தொடங்கி ஒரு மாதம் இப்படப்பிடிப்பு நடக்கவுள்ளது. இக்கதையோட்டத்திற்கு கொல்கத்தா நகரம் மிக பொருத்தமான நகராக இருப்பதால் படப்பிடிப்பை அங்கு நடத்தவுள்ளோம். இப்படம் எனது தயாரிப்பு நிறுவனத்திற்கு மேலும் மதிப்பை கூட்டும் என உறுதியாக நம்புகிறேன். எங்களது ‘புரியாத புதிர்’ படம் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. மேலும் பல தரமான படங்களை தர என் நிறுவனத்தின் சார்பில் முனைப்போடு உள்ளேன் ” என்றார் JSK சதிஷ் குமார்.