அப்பா ரஜினி பற்றி மகள் ஐஸ்வர்யா எழுதிய புத்தகம்!

aishwarya-rajiniஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ் முதன் முதலாக எழுதியிருக்கும் ‘ஓர் ஆப்பிள் பெட்டி மீது நின்றுகொண்டு.. ‘என்று ஆங்கிலத்தில் அழகாக எழுதப்பட்டுள்ள புத்தகத்தை உலகம் முழுவதும் வெளியிடும் உரிமையை ஹார்பர் காலின்ஸ் பதிப்பகம் பெற்றிருக்கிறது. இந்த புத்தகத்தில் தன்னுடைய நினைவுகளையும் எதிர்பாராமல் நடைபெற்ற சம்பவங்களின் அனுபவத் துளிகளையும் பதிவு செய்திருக்கிறார்.

ஒரு சூப்பர் ஸ்டாரின் மகளாக இருந்தும்,பெண்ணானவள் வீட்டிலும், வெளியிலும் எம்மாதிரியான விஷயங்களை எப்படி எதிர் கொள்கிறாள் என்பதை நேர்மையான முறையிலும் நெஞ்சை நெகிழச் செய்யும் வகையிலும்  இந்நூலில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

அத்துடன் வெளியுலகத்தில் எங்கு சென்றாலும் தன்னைத் பின்தொடரும் கேமராக்கள், உற்றுப்பார்க்கும் கண்கள், தன்னையே கண்காணிக்கும்  மற்றவர்கள் என  பலவற்றின் மத்தியிலும் தனக்கான சுய அடையாளத்தை எப்படி மீட்டு எடுத்தார் என்பதையும் இதில் கூறியிருக்கிறார்.

ஐஸ்வர்யா ஆர் தனுஷ்  அறியப்பட்ட ஒரு திரைப்பட இயக்குநராக இருந்தாலும் தொடக்கத்தில் இவர்  ஒரு தொழில்முனைவோராக இருந்தவர். அத்துடன் இவர் நன்கு தேர்ச்சியடைந்த பரதநாட்டிய கலைஞர் மற்றும் சிறந்த படைப்புகளை வாசிக்கும் பழக்கமுடையவரும் கூட.

2015 ஆம் ஆண்டில் இவர் ‘டென் எண்டர்டெயின்மெண்ட்’ என்கிற நிறுவனத்தைத் தொடங்கி, குறும்படங்களையும், அதற்கான உள்ளடக்கங்களையும் டிஜிட்டல் மீடியத்தில் பிரபலமடையச் செய்யும் முயற்சியில் இறங்கினார். அத்துடன் கூடுதல் பொறுப்பாக தன்னுடைய கணவரும் நடிகருமான தனுஷின் சொந்த திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் என்கிற நிறுவனத்தின் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

‘ஓர் ஆப்பிள் பெட்டி மீது நின்றுகொண்டு.. ‘ என்கிற இந்த புத்தகம் சூப்பர் ஸ்டாரும், இவரின் தந்தையுமான ரஜினிகாந்தின் பிறந்த நாளான டிசம்பர் 12 ஆம் தேதியன்று வெளியாகவுள்ளது.

இது குறித்து ஐஸ்வர்யா பேசும் போது “ ஒரு நாள் இதுபோன்றதொரு புத்தகத்தை எழுதவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. உடனே அதற்கான தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டேன். என்னுடைய நினைவுகளில் இருந்த விசயங்களைப் பற்றிக் குறிப்புகளை எழுதினேன்.  என்னுடைய பசுமையான நினைவுகளை மீட்டெடுத்து வார்த்தைகளால் சேகரித்தேன்.

என்னுடைய வாழ்க்கையில் என்னுடைய அப்பாவின் தாக்கம் எப்படியிருந்தது என்பது குறித்து  யோசித்த போது ஏராளமானவை கிடைத்தன. அவரிடமிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் ,அவர் கடைபிடித்தவை, எனக்கு சொல்லிக் கொடுத்தவை என பலவற்றையும் இதில் தொகுத்திருக்கிறேன்.

இதனை ஒரு சிறிய கதையின் மூலமாக என்னுடைய வாழ்க்கையின் ஏற்றங்களையும், இறக்கங்களையும் என்னுடைய பார்வையில் சொல்லியிருக்கிறேன். இந்த அனுபவம் எளிமையாகத் தொடங்கி சிக்கலான ஒன்றிற்குள் சென்றிருக்கும். இதனையும் நீங்கள் காணத்தான் போகிறீர்கள்.

ஹார்பர் காலின்ஸ் பதிப்பக நிறுவனத்தாருடன் இணைந்து பணியாற்றியது சிறந்த அனுபவமாக இருந்தது. அவர்களுடன் தொடர்ந்து மகிழ்ச்சியான நல்லுறவை எதிர்காலத்திலும் தொடர்வேன் என்று நம்புகிறேன். இந்த பதிப்பக நிறுவனத்தின் தலைமை ஆசிரியரான திருமதி வி கே கார்த்திகா  இதன் முதல் சில அத்தியாயங்களை படித்துவிட்டு பெரிய அளவில்  தான் வசீகரிக்கப்பட்டதாகச்சொன்னார். அதனால் இந்த புத்தகத்தை உடனே வெளியிடவேண்டும் என்றும்  ஆர்வமாக இருந்தார். ‘ ஓர் ஆப்பிள் பெட்டி மீது நின்றுகொண்டு.. ‘என்கிற இந்த புத்தகத்தில் சினிமாக் களத்தில் இருந்து கொண்டு மகிழ்ச்சிகரமான கதைகளையும், நினைவுகளையும் பதிவு செய்திருக்கிறேன். இது எனக்கு மட்டுமே சொந்தமான அனுபவமாக இருந்தாலும் இதிலிருந்து பெண்களுக்குத் தேவையான பல முன்னுதாரணங்கள் பிரதிபலித்திருப்பதாகவே கருதுகிறேன். அத்துடன் ஒவ்வொரு பெண்ணின் சந்தோஷங்களையும், துக்கங்களையும் எப்படி சீர்தூக்கி பார்க்கவேண்டும் என்பதும் இடம்பெற்றிருக்கும்.” இவ்வாறு ஐஸ்வர்யா கூறியுள்ளார்.