அழகு மனதில்தான் இருக்கிறது. உடம்பில் அல்ல: அனுஷ்கா பேச்சு

IMG_0138‘இஞ்சி இடுப்பழகி ‘படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது. ஆர்யா-அனுஷ்கா ஜோடியாக நடித்து விரைவில் திரைக்கு வர இருக்கும்  இந்தப் படத்தை பி.வி.பி. நிறுவனம் தயாரித்து இருக்கிறது. பிரபல தெலுங்கு இயக்குநர் ராகவேந்திரராவின் மகன் கே.எஸ்.பிரகாஷ்ராவ்  இயக்கி இருக்கிறார்.

பாடல்கள் வெளியீட்டுவிழாவில் நடிகை அனுஷ்கா பேசிய போது:- ‘‘ஒவ்வொரு பெண்ணும் குண்டாக இருக்கிறோமே அல்லது ஒல்லியாக இருக்கிறோமே என்று கவலைப்படுகிறார்கள்.அப்படி யாரும் கவலைப்பட வேண்டாம். அழகு மனதில்தான் இருக்கிறது. உடம்பில் அல்ல. அதனால் அழகாக இல்லையே என்று எந்த பெண்ணும் கவலைப்பட தேவையில்லை. சின்ன வயதில் என்னை அழகாக இருப்பதாக பலர் சொல்லியிருக்கிறார்கள்.

அதைக்கேட்டு கேட்டு பழகி விட்டது. எனவேதான் இந்தப் படத்தில் குண்டுப் பெண்ணாக வரவேண்டும் என்று டைரக்டர் சொன்னதும், உடனே நடிக்க சம்மதித்தேன். கதாபாத்திரத்துக்காக நிறைய சாப்பிட்டு உடலை குண்டாக்கிக்கொண்டேன். ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் நல்ல கதையும் இருக்கிறது. நல்ல கருத்தும் இருக்கிறது.’’

இவ்வாறு அனுஷ்கா பேசினார்.

முன்னதாக ‘இஞ்சி இடுப்பழகி ‘பாடல்களை, தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் வெளியிட்டு பேசினார். அவர் பேசும்போது:-

‘‘நான் ஒரு நடிகர் என்ற முறையிலோ அல்லது நடிகர் சங்கத்தின் தலைவர் என்ற முறையிலோ விழாவுக்கு வரவில்லை. என் மகள் அனுஷ்காவுக்காக விழாவில் கலந்துகொண்டேன். இந்த படத்தில், என் மகள் வித்தியாசமாக நடித்து இருக்கிறார். நான், அனுஷ்காவை என் மகளாக சுவீகாரம் எடுத்துக்கொண்டேன். படத்துக்காக அனுஷ்கா தன்னை குண்டு பெண்ணாக மாற்றிக் கொண்டார். கதாபாத்திரத்துக்காக தன் உருவத்தை மாற்றிக் கொள்வது சுலபம் அல்ல. இந்த படத்துக்காக அவர் கடுமையாக உழைத்து இருக்கிறார்.’’

இவ்வாறு நாசர் பாராட்டிப் பேசினார்.

இவ்விழாவில் நடிகர்கள் ஆர்யா, கிருஷ்ணா, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் டி.சிவா, இந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் ரவி கொட்டாரக்கரா, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை செயலாளர் காட்ரகட்ட பிரசாத், முன்னாள் செயலாளர் எல்.சுரேஷ், பட அதிபர்கள் கே.ஈ.ஞானவேல்ராஜா, ஏ.எல்.அழகப்பன், தனஞ்செயன், கே.எஸ்.சிவா, இயக்குநர்கள் மோகன் ராஜா, மகிழ் திருமேனி, இசையமைப்பாளர் மரகதமணி, பாடல் ஆசிரியர் மதன் கார்க்கி ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார் கள். பட அதிபர் பி.வி.பொட்லூரி நன்றி கூறினார்.