ஆணழகன் போட்டியில் வென்ற இயக்குநர் !

இயக்குநர் ஒருவர் ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெற்று இருக்கிறார். அவர் பெயர் விஜய் பரமசிவம். 
இவரது  அப்பா ஓர் ஒளிப்பதிவாளர் மட்டுமல்ல  ‘கொலுசு ‘ என்ற படத்தை தயாரித்த தயாரிப்பாளரும்  கூட.
 
 இரண்டு முதுகலைப் பட்டம் பெற்ற விஜய் பரமசிவம் , யாரிடமும்  உதவியாளராகப்  பணியாற்றவில்லை.  
 
 இருபது குறும்படங்கள் இயக்கியிருக்கிறார். இவரது ‘ரூம் நம்பர் 76’ திரைப்பட விழாவில் சிறந்த  குறும்படமாகத் தேர்வானதுடன்  சிறந்த இயக்குநர் விருதையும்  பெற்றுத் தந்தது. 
 
பாலிமர் டிவிக்காக பல நிகழ்ச்சிகளையும்  இயக்கியுள்ளார்.
 
 ஒய்.ஜி.மகேந்திரன் , நிழல்கள் ரவி நடிப்பில் ‘ஒன்பது திருடர்கள்’ என்கிற 
ஒரு திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.
 
இவரது இலக்கு திரைப்பட இயக்கம் தான் என்றாலும் அதற்கான தேடல் ஒரு பக்கம் இருந்தாலும் திறமை காட்டும்  வகையில்  வரும் பிற  வாய்ப்புகளையும் பயன்படுத்தத் தவறவில்லை .
 
 
அவ்வகையில்  இவர் பல நாடுகளுக்காக சுற்றுலா வளர்ச்சிக்காகப் படமெடுத்துள்ளார். இவர் சிங்கப்பூர்,மலேஷியா, சீனா , இந்தோனேஷியா , தாய்லாந்து , ஹாங்காங்க் , வியட்னாம் .பிலிப்பைன்ஸ்  , கம்போடியா என பல நாடுகளுக்கு இயக்கியுள்ளார். அதில் உலகளவில்  பெரிய தொழில்நுட்பக்  கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர். 
 
இப்படி உலகம் சுற்றி வந்த விஜய் பரமசிவம் உள்நாடு வந்திருக்கிறார். எதில் ஈடுபட்டாலும் அதன் அடியாழம் வரை சென்று ஈடுபாடு காட்டுவது இவரது இயல்பு. ஆவணப்படங்கள்  , விளம்பரப் படங்கள்  எடுத்துக் கொடுத்து பல நாடுகளிலிருந்து பாராட்டுகளைப் பெற்றவர் , அடுத்து ஒரு முழு நீளத் திரைப்படத்துக்கான தேடுதலைத் தொடங்கியிருக்கிறார் .
 
 எப்போதும் மனதை உற்சாகமாக வைத்துள்ள இவர் உடற்கட்டிலும்  கவனம் செலுத்துபவர். அதற்காக உடற்பயிற்சிக் கூடம் சென்றிருக்கிறார்.
இவரது ஆர்வத்தை அறிந்த கமல் என்பவர் நீங்கள் ஏன் மிஸ்டர் தென்னிந்தியா போட்டிக்குத் தயாராகக் கூடாது? என்று தூண்டியிருக்கிறார். ஊக்கமும் தந்திருக்கிறார். ஒரு கணம் யோசித்தவர் அதிலும்  இறங்கிப் பார்ப்பது என்று முடிவெடுத்திருக்கிறார்
 
 இவருக்கு பிரபாகர் , நெளஷத் என இரு பயிற்றுநர்கள் பயிற்சி அளித்துள்ளனர்.  மளமளவென பயிற்சிகள்   , பரபரவென உணவுத் திட்டங்கள் எனத் தொடர்ந்திருக்கின்றன.
நான்கே மாதத்தில் சுமார்   25 கிலோ எடை குறைந்து தயாராகியுள்ளார்.போட்டியில் பங்கேற்பது குறித்த நடைமுறைகளை ஏற்கெனவே மிஸ் சவுத் இந்தியா பட்டம் பெற்ற பிரதிக்ஷா அளித்துள்ளார்.
 
கடந்த டிசம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் நேரு உள்விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற தென்னிந்திய ஆணழகன் போட்டியில் ரன்னர் பரிசு பெற்றுள்ளார்.
 
அது மட்டுமல்ல ஆண் மாடல்களுக்கான  போட்டியிலும் மூன்றாம் இடம் பெற்று பதக்கம் பெற்றுள்ளார்.இவ்விழாவில் இயக்குநர்  அமீர் கலந்து  கொண்டார்.  இவர் ஓர் இயக்குநர் என்பதை அறிந்த அமீர் மகிழ்வுடன்  இவரைத் தட்டிக் கொடுத்துப் பாராட்டியதை  எண்ணிப் பெருமைப்  படுகிறார். 
 
எதிலும் தீவிர ஈடுபாடு காட்டினால் புதிய துறையானாலும்  அதில் முத்திரை பதிக்க முடியும் என்பதற்கு இந்தப் போட்டி முடிவுகள் உதாரணம் எனலாம். 
இப்போட்டிக்காக தன்னைத் தூண்டிய கமல் , பயிற்சியளித்த பிரபாகர் ,நெளஷத் , பிரதிக்ஷா ஆகியோரை  மட்டுமல்ல  போட்டியை ஏற்பாடு செய்த மோகன் பாடி பில்டிங் சார்ந்த கூட்டமைப்பில் பொறுப்பிலுள்ள  பி .வேலு ஆகியோரையும் நன்றியுடன் நினைவு கூர்கிறார் விஜய் பரமசிவம் .
 
திரைப்படக் கனவில் இருப்பவருக்கு இது ஏன் என்று நினைக்கலாம். முழு ஈடுபாடு காட்டி அதில் தன் அடையாளத்தைப் பதிப்பது விஜய் பரமசிவத்தின் இயல்பு. அடுத்து திரைப்படத்தில் இறங்கி விட்டார்.
கதாநாயகர்களிடம்  கதை சொல்லி சம்மதம் பெற்றுள்ளவர் விரைவில் அதற்கான அறிவிப்பை வெளியிடவுள்ளார்.
 
 ஏற்கெனவே  ஒரு படம்  இயக்கியிருந்தாலும் அது மற்றவர்  ஒருவரின் கதை, சின்ன பட்ஜெட் என இருந்ததால்  அது ஒரு முன்னோட்டம் மட்டுமே  முழுமையான படம் தன் கதையில் உருவாகவிருக்கும்  அடுத்த  படம் தான்  என்று கூறுகிறார் நம்பிக்கையுடன் . 
 
தொட்டது எதிலும் முத்திரைத் தடம் பதிக்கும் விஜய் பரமசிவம் பட இயக்கத்திலும் முத்திரை  பதிப்பார் என நம்பலாம்.