ஆண்ட்ரியாவுடன் பணிபுரிந்த அனுபவம் புதுமை : வசந்த் ரவி

ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீசாக உள்ள ‘தரமணி’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகும் வசந்த் ரவி வெளியீடு பதற்றத்தில் உள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், ” என் வாழ்வில் மறக்கமுடியாத ஒரு அனுபவம் ‘தரமணி’. இயக்குநர் ராம் சார் எனக்கு பல வருடங்களாக பழக்கம். ‘தரமணி’ படக்கதையை என்னிடம் கூறி இக்கதைக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என அவர் கூறியபொழுது சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்க ஆரம்பித்துவிட்டேன். அதன் பிறகு நான் இந்த கதாபாத்திரத்திற்கு எந்த மாதிரியான பயிற்சிகள் எடுக்க வேண்டும் என அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் , எந்த பயிற்சியும் இல்லாமல் திறந்த புத்தகம் போல படப்பிடிப்புக்கு வந்தால் போதும் என்றார்.

இப்படத்தின் மூலம் சினிமா பற்றியும் நடிப்பு பற்றியும் எனக்கு அவர் நிறைய கற்றுக்கொடுத்தார். ஒரு call centre ஊழியராக ‘தரமணி’யில் நடித்துள்ளேன். ஆண்ட்ரியாவுடன் பணி புரிந்தது எனக்கு ஒரு நல்ல அனுபவம். அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகச்சிறப்பாக செய்துள்ளார். இப்படத்தின் டீசர்கள் மாபெரும் வெற்றி பெற்றதிற்கு அதில் வரும் வசனங்களுடன் ரசிகர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள முடிவதனால் மட்டுமே.

படம் முழுக்கவே இவ்வாறான காட்சிகளும் வசனங்களும் இருக்கும். ‘தரமணி’ படத்தின் கதாநாயகனாக நடித்ததில், இயக்குநர் ராம் சார் மூலம் தமிழ் சினிமாவில் கால் எடுத்துவைப்பதாலும் எனக்கு பெரும் மகிழ்ச்சி. இப்படத்தின் மேல் பெரும் நம்பிக்கை வைத்து தயாரித்து, ஒரு நட்சத்திரத்தின் படம் போல் விளம்பர யுக்திகளை கையாண்டு வருவத்திற்காக தயாரிப்பாளர் JSK சதிஷ் குமாருக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். ஆகஸ்ட் 11 ஆம் தேதிக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்” என உற்சாகமாகக் கூறினார் வசந்த் ரவி.