ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு மதிப்பளித்த சீயான்!

சீயான் விக்ரம் அவர்களின் மகள் அக்‌ஷிதாவிற்கும், திமுகவின் தலைவர் கருணாநிதியின் மகன் மு. க. முத்துவின் மகள் வயிற்று பேரனும், கெவின் கேர் நிறுவனத்தலைவர் சி கே ரங்கநாதன் அவர்களின் மகன் மனு ரஞ்சித்திற்கும் சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் திருமணம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து புதுச்சேரியில் திருமண வரவேற்பு நடைபெற்றது.
 
 
புதுச்சேரி அருகே உள்ள பட்டானூரில் அமைந்திருக்கும் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் வரவேற்பு நடைபெற்றது. இதில் தொழிலதிபர்கள், அரசியல் கட்சியின் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள், கெவின் கேர் குழும ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் திரு, ச ராமதாஸ், திமுகவின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான திரு. எம் ஆர் கே பன்னீர் செல்வம், தி மு க வின் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான திரு க. பொன்முடி, உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். இவர்களுடன் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா என பல பகுதியிலிருந்து வந்திருந்த மூவாயிரத்திற்கும் அதிகமான விக்ரமின் ரசிகர்களும் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
 
வந்திருந்த சீயான் விக்ரமின் ரசிகர்கள் அனைவரும் மேடையேறி தங்கள் தலைவரின் மகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிகழ்ச்சி அனைவரையும் ஆச்சரியப்படவைத்தது. 
 
ஏனைய நட்சத்திரங்கள் தங்களது ரசிகர்களை இது போன்ற வைபவங்களுக்கு அழைப்பு விடுப்பார்கள். அவர்களும் ஆயிரக்கணக்கில் கலந்துகொள்வார்கள். அவர்களில் சிலருக்கு மட்டுமே மேடையேறி வாழ்த்து சொல்லும் பாக்கியம் கிடைக்கும். ஆனால் சீயான், தன்னுடைய ரசிகர்கள் அனைவரையும் மேடையேற்றி, வாழ்த்து சொல்ல அனுமதித்தார். இதன் மூலம் ரசிகர்கள் உற்சாகமடைந்து, வரிசையில் நின்று மண்மக்களைச் சந்தித்து, வாழ்த்து தெரிவித்து சந்தோஷமடைந்தனர். 
அத்துடன் தங்களின் இந்த கனவை நிறைவேற்றியதற்காகவும், தங்களையும்  பிரபலமான நட்சத்திரங்களைப் போல் மதிப்பளித்ததற்காகவும், இதற்கான ஏற்பாடுகளை விரிவாக செய்ததற்காகவும், சீயான் விக்ரம் அவர்களையும், கெவின் கேர் நிறுவனத்தலைவர் சி கே ரங்கநாதன் அவர்களையும் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா என பல இடங்களிலிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மனதார பாராட்டினர்.
 
ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பலத்த ஆரவாரங்களுக்கிடையே ஓ பட்டர்ஃப்ளை பாடலைப் பாடினார் சீயான் விக்ரம்
‘தமிழ் திரையுலகில் சீயான் விக்ரமின் நடிப்பு எப்படி தனித்துவம் மிக்கதோ, அதே போல் அவருடைய மகளின் திருமண வரவேற்பில் ரசிகர்களையும் வரவழைத்து, அவர்களையும் கௌரவித்ததன் மூலம் சொந்த வாழ்க்கையில் சீயான் தனித்தன்மையுடைய மனிதநேய பண்பாளர் என்பதை நிரூபித்துவிட்டார் ’ என்று தங்களது இணையப்பக்கத்தில் மகிழ்ச்சியுடன் இதனை பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.