இசைஞானி இளையராஜா இசையில் கு.கணேசன் இயக்கும் படம் ‘18.05.2009’ !

குருநாத் சலசானி தயாரித்திருக்கும் படம் “ 18.05.2009 “

சுபாஷ் சந்திர போஸ், பிர  பாகரன். நாகிநீடு, தான்யா, ஜேக்கப், ஸ்ரீராம், பாலாஜி ஆகியோர் நடிக்கிறார்கள்.

எழுத்து – இயக்கம்: கு.கணேசன் ( இவர் ஏற்கனவே தமிழ் ஈழம் பற்றி “ போர்க்களத்தில் ஒரு பூ “ என்ற படத்தை இயக்கியவர் )

இசை: இசைஞானி இளையராஜா

ஒளிப்பதிவு: பார்த்திபன், சுப்பிரமணியன்

 

கதை…

தமிழின வரலாற்றில் மறக்க முடியாத நாள்

2008ம் ஆண்டு இலங்கை அரசால் திட்டமிட்டுத் தொடங்கப்பட்ட தமிழினப் படுகொலை, 18.05.2009 வரை நீடித்தது. சுமார் ஆறு மாதங்களில் ஒன்றரை லட்சம் அப்பாவி ஈழத் தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் கொன்று குவிக்கப்பட்டதையும்,  கடைசி நாளில் மட்டும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் உள்பட  40,000 தமிழ் உறவுகள் கொல்லப்பட்டதையும் நாம் மறந்துவிட முடியாது.

.தமிழினத்தில் பிறந்த ஒரே குற்றத்துக்காக அப்பாவிப் பெண்களைக் கூட வெறிபிடித்தமாதிரி வேட்டையாடியது சிங்கள ராணுவம்….. நீதி கேட்டுக் கதறிய அந்த அபலைகளின் குரல் ஈழத்தின் காற்றுவெளிகளில் கரைந்து  விட்டது……!

தமிழின வரலாற்றில் ரத்தக்கறை படிந்த அந்த நாளை, எந்த சமரசத்துக்கும் இடம் கொடுத்துவிடாமல், ரத்தமும் சதையுமாகச் சித்தரித்திருக்கிறது 18.05.2009.

அந்த மண்ணில் விடுதலைக்காகப் போராடிய மாவீரர்கள், ராணுவத்தின் துப்பாக்கி முனையிலிருந்து அப்பாவி மக்களைக் காப்பதற்காகவே ஆயுதம் ஏந்தினர்….. தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல், தங்கள்  மக்களுக்கு பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தனர்…… மரணத்தைத் தழுவும் நிலையிலும் தங்களது விடுதலை வேட்கையை வெளிப்படுத்த  அவர்கள் தயங்கவில்லை….. தமிழினத்தைத் தலைநிமிரச் செய்கிற அந்த வீர வரலாற்றை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்திருக்கிறது 18.05.2009.

18.05.2009  தமிழரின் குருதியால் எழுதப்பட்டிருக்கும் துயர வரலாறு…….

தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்கும் குரலை வலுப்படுத்துகிற வரலாறு….

இதுவரை தமிழ்த் திரை மொழியில் எழுதப்படாத வரலாறு…..

 படம் வருகிற 18 ம் தேதி வெளியாக உள்ளது.

வரலாற்றுக்குத் திரைவடிவம் தருவதில் பங்கேற்றோர்.

இயக்குநர் கு.கணேசன்….. சில குறிப்புகள்

கர்நாடகத் தமிழர்.

முதல் திரைப்படமான ‘ஆஷா ஜோதி’ (கன்னடம்) மூலம் கன்னடத் திரையுலகின் கவனம் கவர்ந்தவர்.

‘சவி நிலையா’ திரைப்படத்தின் மூலம் குழந்தை உளவியலைப் படம்பிடித்தவர்.

நானே சத்யா, மானவியத்தே, நவபாரதி, மன்னின மக்களு, யாரே நீ மோகினி, நம்ம மகு, அம்மடு (தெலுங்கு), மனிதம் (தமிழ்), தடைசெய்யப்பட்டிருக்கும் ‘போர்க்களத்தில் ஒரு பூ’ ஆகிய படைப்புகளின் மூலம் தென்னிந்திய மொழிகளில் தடம்பதித்தவர்.

2009ல், ஈழத்தில் இனப்படுகொலை நடந்துகொண்டிருந்த சமயத்தில் பல்லாயிரக்கணக்கான கர்நாடகத் தமிழர்களை ஒருங்கிணைத்துப் போராடுவதில் பின்னணியாய் இருந்தவர்…

இனப்படுகொலைக்கு நீதி கேட்கும் ‘பொங்குதமிழ்’ மாநாட்டை பெங்களூரில்  பிரமாண்டமாக நடத்தி, எடியூரப்பா போன்ற கன்னடத் தலைவர்களைக் கூட தமிழர்களுக்காகக் குரலெழுப்ப வைத்தவர்.

தமிழினப்படுகொலைக்கு நீதிகேட்டு  கர்நாடகத்தில் நடத்தப்பட்ட கையெழுத்து இயக்கத்தின்போது வாங்கிய  பல்லாயிரம் கையெழுத்துப் படிவங்களை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் (ஜெனிவா) நேரடியாக ஒப்படைத்தவர் .