‘இந்திரஜித் ‘ விமர்சனம்

கிராமங்களில் அசகாய சூர வேலைகள் செய்பவனை  இந்திரஜித் என்பார்கள்.அப்படி ஒருவனின் கதைதான் இது.

சரி படத்தின் கதை என்ன?

நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒரு பின்னணிக்காட்சியில் தொடங்குகிறது படம். அக்காலத்தில் சூரியனில் இருந்து தெறித்து வரும் துகள் பூமியில் விழுகிறது. மனிதர்களின் காயங்களையும், நோய்களையும் குணப்படுத்தும் சக்தி கொண்ட அந்த துகளை சித்தர்கள் பாதுகாப்பான இடத்தில் வைக்கின்றனர்.

அவர்களுக்குப் பிறகு அந்தத் துகள் பற்றி யாருக்கும், எதுவும் தெரியாமல் போகிறது. தொல்பொருள் ஆராய்ச்சித்துறையின் பேராசிரியர் சச்சின் கேதகர், அந்த துகளை பற்றி அறிந்து, அதை தேடிச் செல்கிறார். அவருடன் நாயகன் கெளதம் கார்த்திக்கும் செல்கிறார். அதே நேரத்தில் இந்திய தொல்லியல் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவரும் அந்தப் பொருளைத் தேடுகிறார். இறுதியில் அந்த துகள் யாரிடம் கிடைத்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும்  கௌதம் கார்த்திக், தனக்கெரிய உரிய துறுதுறுப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார். கரடு முரடான இடங்களில் சகட்டுமேனிக்கு விழுந்து புரளும் அவர், இந்த படத்திற்காக அதிகமாகவே உழைத்திருக்கிறார். அது  திரையில் தெரிகிறது. படத்தில் சொனாரிகா பதோரியா, அஷ்ரிதா ஷெட்டி இரண்டு கதாநாயகிகள் இருந்தாலும் அவர்கள்கதையின் தேவைக்கும், கமர்ஷியல்தேவைக்கும் என அளவாகப் பயன்பட்டிருக்கிறார்கள்.

புதையல் தேடிப் புறப்படும் பல கதைகள் தமிழில் வெளிவந்திருந்தாலும், ‘இந்திரஜித்’ படம் சிறந்த ஆக்ஷன் அட்வென்ச்சர் படமாக உருவாகியிருக்கிறது. புதையல் தேடும் கதையை அறிவியல் ரீதியாக மாற்றி சொல்லியிருக்கிறார் இயக்குநர் கலா பிரபு. கிராபிக்ஸ் காட்சிகள் ரசிக்கும் படி உள்ளன. பல காட்சிகள் பார்க்கும் போது பிரமிப்பாக உள்ளன.இந்த படத்தில் காட்சிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுகாமல் கதைக்கும் இயக்குநர் முக்கியத்துவம் கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது.

இயக்குநர் கலாபிரபு நல்ல இயற்கை ரசிகராகவும் இருப்பார் போலும் . அதை இப்படத்தின் பல காட்சிகளும் நமக்கு உணர்த்திவிடும். படத்தில் இடம்பெறும் இடங்களில் எது நிஜம், எது கிராபிக்ஸ் என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு கிரபிக்ஸும், ஒளிப்பதிவும் அமைந்துள்ளன.

ராசாமதியின் கேமரா, இயக்குநர் கலாபிரபு கேட்பதையெல்லாம் கொடுத்துள்ளது வியப்பு.
காட்டுக்குள் நடக்கும்  துரத்தல்  காட்சிகளையும், அடர்ந்த காட்டின்   எழிலையும் அழகாகப் படம் பிடித்திருக்கிறார் . கே.பி. இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை, கதையின் ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

வானத்துக்கே வெள்ளயடிப்பவரான தயாரிப்பாளர் தாணு பிரம்மாண்டம் என்பதை  அறிவார். இதிலும் அதை  நன்றாகவே உணர்ந்திருக்கிறார் என்பதை காட்சிகள் நமக்குப் புரிய வைக்கின்றன.

படத்தில் இப்படி ஏகப்பட்ட பாராட்டுதலுக்குரிய விஷயங்கள் இருந்தாலும், திரைக்கதை அமைப்பு சற்று பலவீனமாக உள்ளது. இருந்தாலும், அதை தனது  திறமையால் சமன் செய்துவிடும் இயக்குநர் கலாபிரபு, சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட குடும்பத்தோடு பார்க்கும்படி காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.

ஆக்‌ஷன், பேய் , காமெடி, மிகை நாயகர்கள் கதை என சோர்வடைந்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு புது அனுபத்தை கொடுக்கும் விதத்தில், இப்படி ஒரு படத்தைஇயக்குநர் கலாபிரபு நம்பிக்கை தருகிறார்.

குறிப்பாக அடர்ந்த காட்டில் நடக்கும் சேஸிங் காட்சி இளைஞர்களை சீட் நுனியில் உட்கார வைத்தால், அந்த புலி காட்சி சிறுவர்களைக் கவரும் விதத்தில் உள்ளது. இப்படி படம் முழுவதும் ரசிகளை பிரமிக்க வைக்கும் இந்த ‘இந்திரஜித்’ வித்தியாசமான சினிமா விரும்பிகளும், சிறுவர்களும் கொண்டாடும் படமாக உள்ளது.

தமிழ் சினிமா வரலாற்றில் அட்வெஞ்சர் படம் என்றால், ‘இந்திரஜித்’ நினைவுக்கு வரும்.அப்படி ஒரு தொழில்நுட்ப மாயாஜாலம்..