உலக பார்க்கின்சன்ஸ் தினத்தையொட்டி மெரினாவில் நடிகர் ஜெயம்ரவி நடைப்பயணம் !

IMG_3085உலக பார்க்கின்சன்ஸ் தினத்தையொட்டி மெரினா கடற்கரையில் விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெற்றது. நடிகர் ஜெயம்ரவி நடைப்பயணத்தைத் தொடங்கி வைத்து நடந்தார். நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் முன்னிலை வகித்து நடந்தார்.

இன்று உலகை அச்சுறுத்தி வரும் ஒரு நோய் பார்க்கின்சன்ஸ் நோய்.  இதனால் பாதிக்கப்பட்டவருக்கு முதலில் கை நடுக்கம் என்று தொடங்கி படிப்படியாக உடல் செயலிழப்பு வரை ஏற்படும். இந்தியாவில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர் 7.1மில்லியன் பேர் உள்ளனர். ஆனால் இது பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதால்தான் இந்த நடைப்பயண  ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நியூ ஹோப் ப்ரெய்ன் அண்ட் ஸ்பைன் சென்டர் மற்றும் ஆண்டனி பவுண்டேஷன் ஆகியவை இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.

நிகழ்வைத் தொடங்கி வைத்த நடிகர் ஜெயம்ரவி பேசும்போது “இந்த நடைப்பயணத்தை ஏற்பாடு செய்திருக்கும் டாக்டர் குழுவினரைப் பாராட்டுகிறேன்.அவர்களின் இம்முயற்சி வெற்றியடைய வாழ்த்துகிறேன். ” என்றார்.

நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் பேசும்போது ” நல்ல நோக்கத்தில் நடத்தப்படுகிற இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் . இந்தியாவில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர் 7.1மில்லியன் பேர்  என்கிற விவரம் அறிந்து அதிர்ச்சியடைந்தேன். இது பற்றிமேலும்  விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். ” என்றார்.

இந்நோயால் முதலில் பாதிக்கப்பட்ட நபரான பார்க்கின்சன் பெயரையே இந்நோய்க்கு வைத்துள்ளனர். அதைக் கண்டுபிடித்தவரும் அவரே.

பார்க்கின்சன்ஸ் நாளையொட்டி நரம்பியல் நிபுணர் டாக்டர் ராம் நாராயணன் பேசும்போது “பிரபல குத்துச் சண்டை வீரர் இந்த நோயால் பாதிக்கப் பட்டார். அதன் பின்னர்தான் இது வெளியே பிரபலமானது. இந்நோய் பற்றிய விழிப்புணர்வும் ஏற்பட ஆரம்பித்தது.

சர்க்கரை நோய்வருவதற்குப் பல காரணங்கள் இருப்பது போல பார்க்கின்சன்ஸ்நோய் வரவும் பல காரணங்கள்உள்ளன. இதனால்தான் வருகிறது என்று வரையறுத்துக் கூற முடியாது.

மூளையில் செயல்களைச் செய்யத்தூண்டும் டோபமீன் என்கிற வேதிப் பொருளின் அளவு குறைவதால் இது ஏற்படுகிறது.

அசதி, மந்தம், தடுமாற்றம், பேச்சு குளறுதல், உணர்ச்சியை வெளிப்படுத்தாத முகம், நடுக்கம் என்று இதில்  பல நிலைகள் உண்டு.

ஆரம்பத்தில் கண்டறிந்தால் மருந்துகள் மூலம் கட்டுப்படுத்த முடியும். முற்றினால் அறுவை சிகிச்சை தேவைப்படும். இதைச் செய்ய எங்கள் மருத்துவமனையில் சிறப்பு நிபுணர் குழு உள்ளனர்.

முதலில் பார்க்கின்சன்ஸ் நோய் பற்றிய விழிப்புணார்வே மக்களிடம் இல்லை. அதனால்தான் இதை நடத்துகிறோம். ” என்றார்.

டாக்டர்கள் சைமன் ஹெர்குலிஸ், எம். அருண் மொழிராஜன், சேகர், எஸ்.ஈ.பி.தம்பி, சையது, ஆனந்த் நேசமணி  ஆகியோர் கலந்து கொண்டனர். ஏராளமான இளைஞர்களும் இளைஞிகளும்இந்த நடைப்பயணத்தில் பங்கு பெற்று நடந்தனர்.

இந்த நடைப்பயணம் மெரினா கடற்கரை கலங்கரை விளக்கத்திலிருந்து விவேகானந்தர் இல்லம் வரை அடைந்து நிறைவு பெற்றது.