எந்த வித சினிமா பின்புலமும் இல்லாதவள் நான் : ‘ரிச்சி’ நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் !

 
நல்ல கதையையும், கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து தனது நடிப்பு திறமையை படத்துக்கு படம் நிரூபிக்கும் எந்த ஒரு நடிகரும் வேகமாக வளர்வதை யாராலும் தடுக்கமுடியாது. நிவின் பாலி கதாநாயகனாக நடிக்கும் ‘ரிச்சி’ படம் டிசம்பர் 8 ஆம் தேதி ரிலீஸாகியுள்ளது.
 
இப்படத்தில்  நிவினுடன் நட்ராஜும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . இப்படத்தில் நிவினுக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். சமீபகாலமாக தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் தனது வசீகர புன்னகையாலும், திறமையான நடிப்பாலும் தடம் பதித்துக்கொண்டிருக்கும் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். 
 
‘ரிச்சி’ குறித்து ஷ்ரத்தா ஸ்ரீநாத் பேசுகையில், ” தமிழிற்கும் , தமிழ் நாட்டிற்கும் இதற்கு முன்பு எந்த தொடர்பும் இல்லாத, எந்த வித சினிமா பின்புலமும் இல்லாத எனக்கு இதுவரை அமைந்துள்ள சினிமா பயணம் திருப்திகரமாக அமைந்துள்ளது. இயக்குனர் கவுதமிற்காகதான் ‘ரிச்சி’ படத்தை முதலில் ஒப்புக்கொண்டேன். அவரது தொழில் அணுகுமுறை எனக்கு பிடித்திருந்தது. நான் சந்தித்துள்ள நடிகர்களில், மிகவும் அர்ப்பணிப்போடும், எந்த வித பந்தாவும் இல்லாமல் மிக எளிமையாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் நிவின் பாலி. சக நடிகராகவும், நண்பராகவும் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் மறுபடியும்  பணிபுரிய ஆவலோடுள்ளேன். இப்படத்தின் எனது கதாபாத்திரத்தின் பெயர் ‘மேகா’. ஒரு பத்திரிக்கையாளர் கதாபாத்திரம் இது. தனது கருத்துக்களில் உறுதியாகவும், தான் நம்பும் விஷயங்களுக்கு போராடும் குணமுள்ள கதாபாத்திரம் இது. ‘ரிச்சி’ படத்தின் கதை சொல்லும் முறை மிகவும் வித்யாசமாக இருக்கும். இது ஒரு புது வித சினிமாவாக நிச்சயம் இருக்கும். ” என்றார்.