எனக்கு முதலில் உதவ வருபவர் விஷால்தான் : விஷ்ணு விஷால்

IMG_8854இயக்குநர் சுசீந்திரனால் ‘வெண்ணிலா கபடிக்குழு’ படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு. இப்படம் வெற்றியடைந்ததால் இவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது. இப்படத்தையடுத்து ‘பலே பாண்டியா’, ‘துரோகி’ ஆகிய படங்கள் சரியாக ஓடாவிட்டாலும், சமீபத்தில் வெளியான ‘முண்டாசுப்பட்டி’, ‘ஜீவா’, ‘இன்று நேற்று நாளை’ படங்கள் தொடர் வெற்றியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

தொடர் வெற்றியை பெற்றமகிழ்ச்சியில் இருக்கும் விஷ்ணுவிஷால் நேற்று பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறார். மேலும் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டியும் அளித்தார்.

அதில், “என்னுடைய இயற்பெயர் விஷால். நான் சினிமாவில் வரும்போது, விஷால் பெரிய நடிகராக உருவாகி வருகிறார். இதனால் என் பெயரை மாற்ற வேண்டும் என்று நினைத்தேன். அதனால் விஷ்ணு என்று மாற்றிக் கொண்டேன்.

என்னுடைய இயற்பெயரும் இணைந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினேன். அதனால் விஷாலும் கோபித்துக் கொள்ளமாட்டார் என்பதால் என் பெயரை விஷ்ணு விஷால் என்று தற்போது மாற்றிக் கொண்டுள்ளேன்.

எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு இந்த சமயத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன். எனது நண்பர்களான விஷால், ஆர்யா, விக்ராந்த், உதயநிதி ஆகியோர் எனக்கு தக்க சமயத்தில் நல்ல உதவி செய்திருக்கிறார்கள். அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். விஷால் என்னுடைய அண்ணன் மாதிரி. எனக்கு ஒரு பிரச்சனை வந்தால் முதலில் உதவி செய்யும் அளவிற்கு என்னுடன் பழகி வருகிறார்” என்றார்.