எனது படங்களிலேயே பெரிய படம் ‘காப்பான்’ தான்! – சூர்யா பெருமிதம்!

 மிக பிரம்மாண்டமான முறையில் லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருக்கும் படம் ’காப்பான்’ .கே.வி.ஆனந்த் இயக்கத்தில் மூன்றாவது முறையாக  இப்படத்தில் சூர்யா நடித்திருக்கிறார். எஸ்பிஜி வீரர்களை மையப்படுத்திய இப்படத்தில், தற்போது நடைபெற்ற காஷ்மீர் விவகாரம் குறித்து பேசப்பட்டிருப்பதால் படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

 ’காப்பான்’படம் தான், சூர்யா இதுவரை நடித்த படங்களிலேயே மிகப்பெரிய பட்ஜெட் படமாக உருவாகியுள்ளது.

இது குறித்து நேற்று சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சூர்யா, “மூன்றாவது முறையாக கேவி சாருடன் இணைந்தது மகிழ்ச்சி. பிற ஹீரோக்களுக்காக உருவாக்கப்படும் கதை, ஏதோ காரணத்திற்காக என்னிடம் வந்து சேரும். அப்படி வரும் படங்களில் நான் நடித்தால் அந்த படம் பெரிய வெற்றி தான். இது என் வாழ்க்கையில் இருக்கும் ஒரு அதிஷ்ட்டம் என்றே சொல்வேன். காப்பான் இதுவரை நான் நடிக்காத ஒரு வேடம். எஸ்.பி.ஜி வீரர்கள் குறித்த ஒரு படம், இதுவரை அவர்கள் பற்றி வெளி உலகத்திற்கு எந்த தகவலும் தெரியாது. தலைவர்களின் உயிரை பாதுகாக்கும் பணியை செய்யும் அவர்கள், எதாவது பிரச்சினை என்றால், தங்களது உயிரை விட ரெடியாக இருப்பார்கள், அப்படிப்பட்டவர்கள் குறித்த கதையில் நடிப்பது மகிழ்ச்சி. இப்படத்திற்காக நான்கு நாட்கள் எஸ்பிஜி வீரர்களுடன் தங்கியிருந்தேன். அப்போது அவர்கள் அனைவரும் என்னை அவர்களில் ஒருவனாக பார்த்துக் கொண்டார்கள்.

இந்த கதை என்னை சுற்றி மட்டுமே நகராது. ஆர்யா, சாயீஷா, மோகன்லால் சார் என அனைத்து கதாபாத்திரங்கள் மீதும் நகரும். மோகன்லால் சாருடன் நடித்த மகிழ்ச்சி. அவர் பெரிய லெஜண்ட். சாதாரணமாக இருக்கிறார், ஆனால் நடிப்பு என்று வந்துவிட்டால் அந்த வேடமாக இருக்கிறார். அது பார்த்து கற்றுக்கொள்ள கூடிய விஷயமில்லை. மூளையில் நிகழும் ஒரு மேஜி. அதை தான் அவர் செய்கிறார்.

லைகா நிறுவனம் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறது. இதுவரை நான் நடித்த படக்களிலேயே காப்பான் தான் மிகப்பெரிய படம் என்று சொல்வதில் மகிழ்ச்சி. சுபாஷ்கரன் சார் படக்குழுவினரை நன்றாக பார்த்துக்கொண்டார். லண்டனில் படப்பிடிப்பு நடந்த போது அவரே சமைத்து கொடுத்தார். காப்பான் நிச்சயம் ரசிகர்களுக்கும், அதே சமயம் பொது  மக்களுக்கும் பிடித்த படமாக இருக்கும்.” என்றார்.