ஒரு நல்லவர் இருந்தாரு. இப்ப அவரும் இப்படி மாறிட்டாரே?-இயக்குநர் தங்கர் பச்சான் நேர்காணல்

டக்கு முக்கு டிக்கு தாளம்” இயக்குநர் தங்கர் பச்சான் நேர்காணல்

மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு தன் மகனை ஹீரோவாக்கி காமெடி படம் இயக்கியிருக்கிறார் இயக்குநர் தங்கர்பச்சான் அவருடன் உரையாடியதிலிருந்து…

இப்படி ஒரு படத்தில பையன ஹிரோவா அறிமுகப்படுத்தனும்னு எந்த ஒரு திட்டமும் கிடையாது. இது தானா அமைஞ்சது. பையனோட அனுபவத்த அவர் சொல்வாரு. என்னைப் பொறுத்தவரைக்கும் இத நான் என்னோட முதல் படம் மாதிரி தான் செஞ்சிருக்கேன். இது வரை எடுத்த படங்கள்ல தங்கர்பச்சான் படத்தில என்னென்ன இருக்குமோ அது எதுவுமே இதுல இருக்காது. இது என்னோட படம் மாதிரி இருக்காது. சொல்லக்கூச்சமா தான் இருக்கு 13 நாள் வெறும் சண்டைக்காட்சிய மட்டும் எடுத்துருக்கேன். போலீஸே என் படங்கள்ல வந்ததில்ல ஆனா இந்தப்படத்துல போலீஸ், கொலை,போதைப்பொருள் கடத்தல், துரத்தல், டப்பாங்குத்து எல்லாம் இருக்கு ஆனா அதில ஒரு தனித்துவம் இருக்கு. எடுக்கப்படும் முறைனு ஒன்ணு இருக்கு அதில தங்கர்பாச்சான் முத்திரை இருக்கும்.

உங்க பாணில இருந்து மாறி எடுக்க என்ன காரணம் ?

ரொம்ப நாளா எல்லோரும் சொல்லிட்டு இருப்பது தான். சார் கொஞ்சம் மாத்தி எடுங்கனு சொல்லுவாங்க. ஆனா இப்ப உங்கள மாதிரி படம் எடுக்கத்தான் ஆள் இல்ல சார், நீங்க ஏன் காமெடி படம் எடுக்குறீங்கனு கேக்கறாங்க. சமீப காலமா ரிலீஸாகுற எல்லாப்படங்களையும் பாக்க முடியாட்டாலும் முக்கியமான படங்கள பார்த்துட்டு தான் இருக்கேன். மக்கள் எப்படி படங்கள அணுகுறாங்க, ஊடகங்கள் எப்படி பாக்குறாங்கனு பார்துட்டு தான் இருக்கேன். இதுக்கு முன்னாடி காலக்கட்டட்த்துல பார்த்தீங்கன்னா வாழ்வியல் தொடர்பான, அதுக்கான சம்பவங்கள், அதில் நடந்த ஒரு பாதி சம்பவங்களாவது கதைகளாக மாற்றப்பட்டது. இப்ப இருக்க காலக்கட்டத்துல அதெல்லாம் இல்லவே இல்ல, முற்றிலும் வேற மாதிரி இருக்கு. இப்ப இருக்க சினிமா வேற மாதிரி இருக்கு, மக்களுடைய வாழ்க்கை முறை வேற மாதிரி இருக்கு. இப்ப இந்த படம் நான் அப்படிதான் எடுத்திருக்கேன். நம்ப மட்டும் ஏன் நடந்ததையே எடுக்கனும்னு ஆரம்பிச்சதுதான் இந்த படம்.

ஒரே ஒரு நல்லவர் இருந்தாரு. இப்ப அவரும் இப்படி மாறிட்டாரே?

அதுக்காகவே “டக்கு முக்கு டிக்கு தாளம்”னு பேர் வச்சேன். எனக்கென்ன வேற தலைப்பா வைக்க தெரியாது. இனி நம்பள வேற யாரும் கேள்வியே கேட்கக் கூடாதுன்னு தான் இந்த தலைப்பையே வச்சேன். இது வேற மாதிரி படம்ங்கறத மக்கள் கிட்ட பதிவு பண்றேன். மக்களை ஏமாத்திடக் கூடாதுன்னு இத முன்கூட்டியே தெரியப் படுத்திக்கறேன்.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர பத்தி சொல்லுங்க?

இந்தப் படத்த PSN entertainments PVT LTD நிறுவனம் தயாரிச்சிருக்காங்க. PSN அப்டீன்னா “பொன்னியின் செல்வன்”. இவங்க வந்து கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக கிராபிக்ஸ் தொழில் நுட்பத்த கற்றுக் கொடுக்கும் “அரேனா” என்ற கல்லூரிய நடத்திக்கிட்டு வர்றாங்க. அனிமேஷன், CG பண்ற பெரும்பாலான தொழில் நுட்ப கலைஞர்கள் அந்த கல்லூரியில படிச்சிட்டு வந்தவங்கதான். நான்கு வருடங்களுக்கு முன்னாடியே பொன்னியின் செல்வன் என்ற 2D அனிமேஷன் படத்த எடுத்து தயாரா வச்சிருக்காங்க. PSN நிறுவனம் சார்பா ஜார்ஜ் டயஸ் “டக்கு முக்கு டிக்கு தாளம்” படத்தின் மூலமா தயாரிப்பாளரா காலடி எடுத்து வைக்கறாங்க. சரவண ராஜா என்ற நண்பருடன் இனைந்து இந்த படத்த தயாரிச்சிருக்காங்க.

இந்தப் படத்துல நடித்திருக்கும் நடிகர்கள்?

விஜித் பச்சான் இந்தப் படத்துல கதாநாயகனா நடிச்சிருக்கார். மிலனா நாகராஜ், அஷ்வினி சந்திரசேகர், முனீஸ் காந்த. மற்றும் இந்தப் படத்துல மூன்று வில்லன்கள் நடிச்சிருக்காங்க ஒருத்தர் ஸ்டன்ட் சில்வா, மற்றொருவர் மன்சூர் அலி கான். அடுத்து முக்கியமா சொல்லனும்னா யோகி ராமநாதன். ஸ்டன்ட் சில்வா இந்த படத்துல 13 நாட்கள் நடிச்சிருக்கார். ஸ்டன்ட் மாஸ்டரா மட்டுமில்லாம ஒரு முக்கிய கதாப்பாதிரத்துலயும் நடிச்சிருக்கார்.

அப்படியே தொழில் நுட்ப கலைஞர்களைப் பற்றியும் சொல்லிடுங்க?

இன்றைய தலைமுறையோடு ஒன்றியிருக்கிற இசையமைப்பாளர் தரன் குமார் இப்படத்துக்கு இசையமைச்சிருக்கார். படத்தொகுப்பு வந்து சாபு ஜோசப். என்னுடைய உதவியாளரா பணியாற்றிய பிரபு தயாளன், பிரபு ராஜ் மற்றும் சிவ பாஸ்கர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செஞ்சிருக்காங்க. அப்பறம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி நானே இந்த படத்த இயக்கியிருக்கேன்.

விஜித் இந்தப் படத்துல என்ன ரோல் பண்ணிருக்கார்?

இந்தப் படத்தோட கதை பார்த்தீங்கன்னா முழுக்க முழுக்க சென்னைல நடக்கக் கூடிய கதை. ஒரு சில காட்சிகளை தவிர நான் அதிகமா சென்னைல படம் எடுத்தது இல்ல. முதல் முறையா முழு நகரத்து சினிமா எடுத்திருக்கேன். களவாடிய பொழுதுகள் சிட்டி படமா இருந்தாலும் சில காட்சிகள் கோயம்பத்தூர் போன்ற இடங்கள்ல எடுத்திருக்கேன். இந்தப் படத்தோட கதை பார்த்தீங்கன்னா, இது ஒரு ரெண்டு பேருடைய கதை. இதுல விஜீத் பார்த்தீங்கன்னா கீழ் நிலையில இருக்குற ஒரு குப்பத்து ஏழைப் பையன். எந்த எதிர்கால திட்டமும் இல்லாத அடுத்த வேலை சாப்பாட்டிற்கு உத்தரவாதம் இல்லாத ஒரு பையன். அவனுக்கும் ஏகப்பட்டக் கோடி சொத்து இருக்கிற பணக்காரன், இவங்க இரண்டு பேருக்கும் இடையில நடப்பதுதான் கதை. இதுல பணக்காரனா முனீஸ் காந்த் நடிச்சிருக்கார். நிறைய பணத்த வச்சிக்கிட்டு வாழ பிடிக்காத முனீஸ் காந்த், பணத்தை தேடிக்கிட்டிருக்க விஜித். இவங்க இரண்டு பேருக்கும் இந்த பணம் எதை கற்றுத்தருது. அதான் இந்த படத்தோட கதை.

இதுவே தங்கர் பச்சான் கதை மாதிரிதானே இருக்கு? இதுக்கும் தங்கர் பச்சான் கதைக்கும் எப்படி வேறுபடுது?

வழக்கமாக என் படத்தில் வரும் ஒரு வசனம் கூட இந்த படத்தில் இருக்காது. இந்தக் காலத்திற்கு தேவையான எதார்த்த வசனங்கள் எழுதியிருக்கேன். மக்கள் பேசும் வார்த்தைகளைத்தான் வசனங்களாக எழுதியிருக்கேன். அதேதான் பாடலாவும் வந்திருக்கு. இப்ப இந்த பாட்ட நீங்க விமர்சனம் பண்ணா… மக்களை தான் விமர்சனம் பண்ணனும். நான் இதுக்காக எதுவும் மெனக்கெட்டு எழுதலை. இது முழுக்க முழுக்க ஒரு குடும்ப பொழுது போக்கு சித்திரம். 100 % family entertainment.

இந்த கதை உருவான விதம்?

இதுவரைக்கும் நான் இதப் பத்தி சொல்லலை. American cinematographer என்ற magazine ல ஒரு event ஒன்னு படிச்சேன். அதை பேஸ் பண்ணி இலக்கியங்கள்லாம் வந்திருக்கு. அதப் படிக்கும் போது என்னடா இப்படியெல்லாம் கூட நாட்டுல நடக்குமான்னு நினைச்சேன். சரீன்னு இத வச்சு கதை எழுதி படம் எடுத்தேன். அப்பறம் பார்த்தா உண்மையாவே அப்படி ஒன்னு நடந்துச்சு. அதுவும் இந்த படத்துல வரும். இந்த படம் முடிஞ்சதும் எல்லாரும் வாயை பிளந்து பார்ப்பாங்க!. அப்படியே நடந்திருக்கு, அதுவும் நம்ப ஊருல இந்தியாவுல நடந்திருக்கு. இது எல்லா பத்திரிக்கைளையும் வந்திருக்கு. எல்லாரும் ஆச்சரியமா இப்படியெல்லாம் நடக்குமா அப்படீங்கற ஒரு மாதிரியான விஷயம். இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக இருக்குற ஒரு கதை.நான் பண்ண கதை உண்மையா நடந்திருக்குன்னு தெரிஞ்சதும் எனக்கு துணிச்சல் அதிகமாகிடுச்சு. அதனால தைரியம்மா எடுத்து பண்ணிட்டேன்.

இது தமிழ் நாட்டுல நடந்ததா இல்ல வட இந்தியால நடந்ததா?

வட இந்தியால தான் நடந்தது அத இங்க நடக்கற மாதிரி கதை பண்ணியிருக்கேன்.

இந்த தலைப்புக்கு என்ன அர்த்தம்?

கண்ணதாசன் தயாரிச்ச ரம்பையின் காதல் படத்துல ஒரு பாடலின் தலைப்பு “டக்கு முக்கு டிக்கு தாளம்”னு இருக்கு. அப்பறம் எங்க ஊருல “டக்கு முக்கு டிக்கு”காரன்னு ஒரு ஆளே இருக்காரு. “டக்கு முக்கு டிக்கு”ன்னா ஆள் மாறிக்கிட்டே இருப்பான். ஆங்கிலத்துல சொல்லனும்னா “characterless”னு சொல்லுவாங்க. எடத்துக்கு தகுந்த மாதிரி ஆள் மாறிக்கிட்டே இருப்பான். “டக்கு முக்கு டிக்கு”னு ராகம் மாறுது இல்லையா, ஒரு முறை டக்குனு போடுற ராகம் அடுத்தமுறை முக்கு, அடுத்து டிக்குனு மாருது இல்லையா, அதுதான் “டக்கு முக்கு டிக்கு தாளம்” ஒவ்வொரு எடத்துக்கு தகுந்த மாதிரி ஒவ்வொரு மாதிரி பொய் சொல்றதுதான் அதுக்க அர்த்தம்.

ஏன் காமெடி படம் ?

காமெடி பண்றது தான் ரொம்ப கஷ்டம். ஒரு ஹீரோவ கூட்டி வந்து டான்ஸ் ஆட வெச்சிடலாம், சண்ட போட வச்சிலடலாம். சீரியஸ காட்டி ஏத்துக்க வச்சிடலாம் ஆனா காமெடி பண்ண வைக்க முடியாது. காமெடி பண்ண சென்ஸ் வேணும். காமெடி சென்ஸ் இருக்கிற ஹீரோ தமிழ்ல ரொமப கம்மி. எனக்கு ரொம்ப பிடிச்சது காமெடி படங்கள் தான். பெரிய இயக்குநர்களே காமெடி படங்கள் எடுத்திருக்காங்க. ஶ்ரீதர் எவ்வளவு பெரிய இயக்குநர் அவர் காதலிக்க நேரமில்லை எடுத்தாரு. பாலச்சந்தர் தில்லு முல்லு எடுத்தார். பாலுமகேந்திரா காமெடி படம் எடுத்திருக்காரு. மகேந்திரன் எடுத்திருக்கார். எல்லாப் படைப்பாளிகளும் ஒரு கட்டத்தில மாத்தி பண்ணனும். நம்ம தொழில் நேர்த்தி நம்ம கையில் வட்டுகிட்டு நாம் பண்ணலாம். இதுல பையனுக்காக அவர மனசுல வச்சு திரைக்கதை பண்ணியிருக்கேன்

பையன ஹிரோவா அறிமுகப்படுத்துற திட்டம் சின்ன வயசுல இருந்தே இருந்ததா ?

இதற்கு அவரே பதில் சொல்வாரு என கேள்வியை தன் மகன் விஜித் பக்கம் திருப்பி விட அவர் அதற்கு…

இல்ல எனக்கு ஹீரோவாகுற திட்டமெல்லாம் கிடையாது. சினிமால ஆர்வம் இருந்தது. அப்பா கேமராங்குறதால கேமரா மேனா ஆகுறதா தான் இருந்தேன். விஸ்காம் முடிச்சப்புறம் நிறைய மனசு மாறிகிட்டே இருந்தது. டைரக்டர் ஆகலாம் நடிக்கலாம் அப்படின்னு. அப்புறம் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்கிட்ட நடிப்பு கத்துகிட்டேன் மூணு மாசத்துல நடிப்பு கத்துக்க முடியாதுனு அப்பதான் தெரிஞ்சது. அதற்கு சீரியஸா உழைக்க ஆரம்பிச்சேன் 3 வருஷம் கத்துகிட்டேன். அப்புறம் அப்பா நிறைய உதவி பண்ணார். நிறைய கதைகள் கேட்டேன் எதுவும் ஒர்க் அவுட் ஆகல. அப்புறம் அப்பா நம்ம பண்ணலாம்னு சொன்னது தான் இந்தப்படம்.

காமெடி சீரியஸ் பிஸினஸ்னு சொல்லுவாங்க ஏன் காமெடி தேர்ந்தெடுத்தீங்க ?

அப்பா எனக்கு முதல்ல பண்ணினது சீரியஸ் படம் தான். திடீர்னு இல்ல லைட் ஹார்ட்டட பண்ணலாம் உனக்கும் நல்லாருக்கும் எனக்கும் புதுசா இருக்கும்னு சொன்னார். அப்புறம் பொதுவா அப்பாங்களுக்கு தெரியும்ல நமக்கு எது சரியா வரும்னு, அவங்களுக்குதான் தெரியும். அவர் எப்பவும் என்ன குறை சொல்லிகிட்டே தான் இருப்பாரு ஆனா இப்ப படம் போட்டு பார்க்கும் போது நல்லாருக்கு. அவர் சரியாதான் சொல்லியிருக்கார்

அப்பாகிட்ட நடிப்பது கஷ்டம் உங்களுக்கு எப்படி இருந்தது ?

அப்பாகூட எனக்கு நெருக்கமான உறவு இருந்ததே கிடையாது. அவர் எப்பவும் ஷீட்டிங்லேயே தான் இருப்பார். அவர் கூட இந்தப்படத்தில தான் அதிக நேரம் செலவு பண்ணிருக்கேன். இந்தப் படத்தோட கதை கேக்கத்தான் அவர் கூட முதல் முறையா ரொம்ப நேரம் சேர்ந்து உட்கார்ந்தேன். இப்ப தான் அப்பாகூட நெருக்கமாயிருக்கேன்.

அப்பா தமிழ் காதலர் ஏன் விஜித்னு பேர் வச்சாங்க ?

அம்மா வயித்துல இருக்கும்போது அப்பா கனவுல எனக்கு பையன் பொறக்குறான் அப்படின்னு சொன்னார் அத வச்சு என் அம்மா வச்ச பேரு தான் விஜித். தாத்தா பேரு பச்சான் அதனால விஜித் பச்சான். நான் பேர் மாத்த முயற்சி பண்ணேன். வெற்றினு மாத்தி பார்த்தேன் கடைசில இந்தப்பேரே இருக்கட்டும்னு விட்டுட்டேன்.

இடையில் மறித்த தங்கர் பச்சான் …

எனக்கு இந்த மாறி பேர் இருக்கறதே தெரியாது. ஆனா பதிவு பண்ணி வச்சிருக்காங்க. நான் நிறைய தடவ மாற்ற முயற்சி பண்ணேன். நான் ஒரு பேர் சொன்னேன் திருமா பையன் வாழ்க்கைய கெடுத்துறாதீங்கனு சொல்லிட்டாரு. அதோட விட்டுட்டேன்.

ஹீரோயின் பத்தி சொல்லுங்க ?

விஜித் பச்சான் ..
ஹிரோயின் பெங்களூர் அவங்க நிறைய படங்கள் பண்ணிருக்காங்க. அவங்க நிறைய சொல்லிக் கொடுத்தாங்க. வேலை செஞ்சுகிட்டு இருக்குற பொண்ணா வர்றாங்க. இந்தப்படத்தில எல்லாரும் தெரிந்த முகங்கள் தான் அவஙகளோட நடிச்சது நிறைய கத்துக்க முடிஞ்சது.

முனீஸ்காந்த் டைமிங் சூப்பரா இருக்கும் அவரோட நடிச்சது எப்படி இருந்தது ?

அவர் இந்தப்படத்தில மெயின் ரோல். அவர பார்த்து தான் நிறைய கத்துக்கிட்டேன். நிறைய சொல்லிக்கொடுத்தாரு. நான் தியேட்டர்ல இருந்து வந்ததால கேமரா பார்க்க மாட்டேன் நான் பாட்டுக்கு பண்ணிட்டு இருப்பேன் அவர் தான் இப்படிலாம் பண்ணக்கூடாது. எப்படி நிகக்னும், கேமரா முன்னாடி எப்படி நடிக்கனும்னு சொன்னார்.

பாடல்கள் வெளிநாட்ல எடுத்தீங்களா ?

இல்ல இங்கயேதான் ஆனா ஒவ்வொரு ஷாங்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். உங்க எல்லாருக்கும் பிடிக்கும்.

ஹீரொயின் பற்றி இயக்குநரா உங்க பார்வை எப்படி பண்ணிருக்காங்க ?

மிலனா நாகராஜ் அருமையான பொண்ணு. இப்படி பண்ணுங்கனு நான் சொல்லாத ஒரு நடிகை.
ஒரு ஷாட்டுக்கு கூட நான் சொல்லல அருமையா நடிச்சு கொடுத்துட்டு போயிட்டாங்க. வெளி மாநிலம்னு சொல்றோம் ஆனா ஷாயாஜி ஷிண்டே பாரதியாரா நடிக்க வந்தப்ப எங்கூட ரூம்ல தரையில படுத்திருந்தார். ஷூட்டிங் எவ்வளவு தூரம்னாலும் செருப்பு போடாம நடந்தே போவார். கேரக்டரா வாழ்ந்தார். இங்க இருக்கிற கதாநாயகர்களுக்கு கேரவன் வேணும் அப்புறம் எப்படி பாரதியார நடிக்க முடியும்.

நிறைய சமரசங்கள் பண்ணி இந்தப்படம் பண்ணிருக்கீங்க ஏன் ?

அப்படி இல்ல தாக்கத்தை உருவாக்குற படங்கள் பார்க்க யாரும் விரும்பல. அத விட்டு ஒதுங்கி இருக்கேன். இன்னக்கி கணவன் மனைவியே பேசிக்கிறதில்ல அண்ணன் தம்பி உறவே இல்ல. சினிமா மட்டும் என்ன செய்துடும். இயந்திரத்தோடதான் பேசிகிட்டு இருக்காங்க. தியேட்டர் போனா திரையில தெரியிற வெளிச்சத்த விட மொபைல் வெளிச்சம் அதிகமா இருக்கு. சீரியஸ் படங்கள் பார்க்க ஆள் இல்லை. நாம் சொல்றத மதிக்காத போக்கு இருக்கு. அதான் இப்படியும் படம் பண்ணுவோமேனு தான். உலகின் மிகச்சிறந்த ஃபிரான்ஸ் இயக்குநர் ஃபிரான்ஸிஸ் ஃத்ரூபா அவரே காமெடி படங்கள் நிறைய பண்ணிருக்கார். நாம ஏன் பண்ணக்கூடாது. மீண்டும் அழுத்தமான படங்கள் பண்ணுவோம். அத முழுசா விட மாட்டோம்.

அழகி மாதிரி படங்கள் இனி வராதா ?

படம் வரும் ஆனா பாக்க மக்கள் இல்ல. இப்ப காதல்னா என்னன்னே தெரியாத தலைமுறை உருவாகிடுச்சு. நேரா காமத்துக்கு போயிட்டாங்க காதலே கிடையாது. காதல் உணர்வே இல்லாம இருக்காங்க. நான்கிறது மட்டும் தான் இங்க இப்ப இருக்கு.

அழகி 2 ரெடியா இருக்குறதா ஒரு செய்தி வந்ததே ?

உண்மைதான் கல்வெட்டு சிறுகதைய படமா எடுக்கும்போது அழகி 2 தான் முதல்ல எடுக்க வேண்டியது. அழகி கதை 1983 ல எழுதினது. இளையராஜா இத ஒரு தொடரா எடுக்க சொன்னார். முன்கதையா தான் அழகி எடுத்தோம். அழகி 2 ரெடியா இருக்கு அந்தப்படத்தில பார்த்திபன் பையனா வர்றவருக்கு 27 வயசுல கதை ஆரம்பிக்கும். இப்பவும் அழகி 2 எடுக்க தயாரிப்பாளர் தயாரா இருக்கார். நந்திதா கிட்ட இப்பவும் பேசிட்டு இருக்கேன். எல்லோரும் அவஙக வேலையை ஒதுக்கி வச்சுட்டு வரணும். ஆனா இப்ப இருக்குற தலைமுறை அழகி 2 புரிஞ்சுப்பாங்களாங்கிறது தான் பிரச்சனை. உறவுகளே இப்ப இல்லையே!

இந்தப்படத்தோட பாடல்கள் எப்படி வந்திருக்கு ?

என் படங்கள்ல நடனமே இருக்காது. ஆனா இந்தப்படத்துல இருக்கு. தரண்னு ஒரு இசையமைப்பாளர் இருப்பதே எனக்கு தெரியாது. என் பசங்க பாட்டு கேட்கும்போது ஒரு பாடல் நல்லாருக்கே யாருனு கேட்டேன் அப்படி தான் அவர தெரிய வந்தது. ஒரு பாடலுக்குள்ள ஒரு கட்டமைப்ப உருவாக்குற திறமை அவர்கிட்ட இருக்கு இந்தப்படத்தில பாடல்கள் எல்லாம் அருமையா இசையமைச்சிருக்கார். தினேஷ் மாஸ்டர் நடனம் அமைச்சிருக்கார். இந்தப்படத்தில் எல்லோருமே அவங்க சம்பளத்த குறைச்சு எனக்காக வேலை பார்த்திருக்காங்க. படமும் சூப்பரா வந்திருக்கு என்றார்.

டக்கு முக்கு டிக்கு தாளம் ஷூட்டிங் முடிந்து
போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு நடந்து வருகிறது. விரைவில் வெளியீட்டு தேதி பற்றிய அறிவிப்பு வரும்.

டக்கு முக்கு திக்கு தாளம் : தொழில்நுட்ப கலைஞர்கள்:-

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – தங்கர் பச்சான்
இசை – தரண்குமார். ஒளிப்பதிவு – பிரபு, தயாளன், சிவபாஸ்கரன் படத்தொகுப்பு – சாபு ஜோசப்
கலை – சக்தி செல்வராஜ்,
நடனம் – தினேஷ், சண்டைப்பயிற்சி – ஸ்டன்ட் சில்வா தயாரிப்பு நிறுவனம் – பிஎஸ்என் என்டர்டெயின்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட்.