கமல்ஹாசன் திறந்து வைத்த ‘ஜி’ஸ்டுடியோ!

g-studiosகலை நயத்தோடு மிக பிரம்மாண்டமாக சென்னையில் உருவாக்கப்பட்டிருக்கும் ‘ஜி ஸ்டுடியோ’வைக்  கமல் ஹாசன்  திறந்து வைத்தார்

தமிழ் திரையுலகின் முதகெலும்பாய் செயல்பட்டு வந்த பல ஸ்டுடியோக்கள் கால போக்கில் மெதுவாக மறைந்து விட்டாலும், தற்போது  பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள வேலப்பன் சாவடியில்    நிறுவப்பட்டிருக்கும் பிரமாண்டமான G STUDIO, தமிழ் திரையுலகிற்கு புத்துயிர் அளித்திருக்கின்றது.

 

இந்த ஸ்டுடியோவை நேற்று பல திரையுலக பிரமுகர்கள் முன்னிலையில் கமல் ஹாசன்   திறந்து வைத்தார். உலகத்தரத்தில் மிக பிரம்மாண்டமாக நிறுவப்பட்டிருக்கும் இந்த ஸ்டுடியோ, சென்னை மாநகரத்திற்கு புதியதொரு அடையாளத்தை பெற்றுத் தந்திருக்கிறது என்பதை உறுதியாகவே சொல்லலாம்.  இசைஞானி இளையராஜா குத்து விளக்கு ஏற்றி, சர்வேதச திரையுலகின் கவனத்தை ஈர்க்கும்  இது போன்ற ஸ்டுடியோக்களின் முக்கியத்துவத்தை பற்றி எடுத்து கூறினார்.

கோகுலம் குழுமத்தின் நிறுவனர்   கோபாலன் அவர்களோடு இணைந்து பணியாற்றிய அனுபவங்களை பற்றியும் இந்த விழாவில்  கமல் ஹாசன்  பேசியது குறிப்பிடத்தக்கது. “எனது இல்லத்திற்கு பிறகு நான் அதிகமாக வாழ்ந்த இடம் ஸ்டுடியோக்கள் தான். தென் திரையுலகின் பெருமைக்குரிய பல ஸ்டுடியோக்கள் மூடப்பட்டதை கேள்விப்பட்டு நான் மிகவும் மன வேதனை அடைந்தேன். திரையுலகிற்கு திரு கோபாலன் செய்திருக்கும் இத்தகைய அர்ப்பணிப்பை ‘தர்மா’ என்று தான் நான் சொல்லுவேன். ஒரு காலத்தில் எப்படி ஆற்காடு சாலை ஸ்டுடியோக்களின் அடையாளமாக திகழ்ந்ததோ,  அதே போல் இந்த ஜி – ஸ்டுடியோ மூலம் விரைவில் பூந்தமல்லி நெடுஞ்சாலையும் தமிழ் சினிமாவின் மையமாக திகழும். வர்த்தகம் என்பதை தாண்டி சினிமா மீது  காதல் இருந்தால் தான் இத்தகைய பிரம்மாண்ட ஸ்டுடியோவை திரையுலகிற்கு அர்ப்பணிக்க முடியும்” என்று பெருமையாக  கூறினார் கமல்ஹாசன்.

நடிகர் சங்கத்தின் பொது செயலாளரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான விஷால், திரு கோபாலன் அவர்களை தமிழ் திரைலகிற்கு மேலும் நல்ல திரைப்படங்களை வழங்க வரவேற்றார். “சென்னையில் உள்ள ஸ்டுடியோக்களில், தலை சிறந்த ஸ்டுடியோ ஒன்று  தற்போது நிறுவப்பட்டிருக்கிறது. இனி மற்றவர்களை விட நாங்கள் ‘உள்கட்டமைப்பில்’  எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை என்பதை பெருமையோடு சொல்லலாம்” என்று உற்சாகமாக கூறினார் விஷால்.