கமல் பிறந்தநாளில் அன்னதானத் திட்டம் தொடக்க விழா!

நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு ‘ஐயம் இட்டு உண்’ என்கிற பெயரில் அவரது மக்கள் நீதி மய்யம் அமைப்பின் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது. அது பற்றிய செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

அனைவருக்கும் வணக்கம்,
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நம்மவரின் 67வது பிறந்த நாளை (நவம்பர் 7) முன்னிட்டு, நவம்பர் 1 முதல் 7 வரை நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் என்ற வகையில் மொத்தம் 7 லட்சம் பேருக்கு தமிழகம் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டமான ஐயமிட்டு உண்' அன்னதானத் திட்டத்தைச் செயல்படுத்த முடிவுசெய்து, இன்று காலை 11 மணியளவில்நம்மவர்’ திரு.கமல் ஹாசன் அவர்கள் கொடியசைத்து திட்டத்தைத் துவக்கிவைத்தார்.

இந்நிகழ்வில் கட்சித் துணைத் தலைவர் A.G.மௌரியா I.P.S., (ஓய்வு) மாநிலச் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
இன்று, முதல் தவணையாக 9 வாகனங்களில் சுமார் 7,000 பேருக்கான உணவுகள் நகரின் பல பகுதிகளில் விநியோகிக்க, தலைவரால் அனுப்பிவைக்கப்பட்டன. இந்த அன்னதானத் திட்டம், இன்றிலிருந்து தமிழகம் முழுவதும் ஏழு நாட்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை, அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் செய்துவருகின்றனர்.

காலகாலமாக உடல் தானம், உறுப்பு தானம், கண் தானம், ரத்த தானம் என நற்பணிகளை தொடர்ந்து செய்துவந்த நம்மவர், தற்போது நாட்டில் பெருகிவரும் ஏழ்மையையும், அதன் ஆபத்தையும் உணர்த்தும்வண்ணம் இந்த ஆண்டு தனது பிறந்தநாள் பணியாக அன்னதானம் செய்வதென்று முடிவெடுத்து, அதை இன்று துவக்கி வைத்துள்ளார்.

நன்றி!
ஊடகப்பிரிவு,
மக்கள் நீதி மய்யம், சென்னை.