‘கரையோரம்’ விமர்சனம்

Karaiyoramபணக்கார வீட்டுப் பெண் பிரியா தன் தங்கையின் காதல் திருமணத்துக்கு உதவியாக இருந்ததால் தன் அப்பாவின் கோபத்துக்கு ஆளாகிறாள். ஒருகட்டத்தில் அப்பாவும் இறந்துவிட வாழ்க்கையில் வெறுப்பு வரவே வீட்டை விட்டு வெளியேறி விடுகிறாள்.

மன நிம்மதி தேடி ஒரு பீச் ரிசர்ட்டில் தங்குகிறாள் .காற்றுக்காக கடற்கரைப் பக்கம் போன போது ஒரு வாலிபன் பழக்கமாகிறான். பெயர் ஜான் என்கிறான். அவனை காதலிக்க ஆரம்பிக்கிறாள் .ஒரு கட்டத்தில் அவன் காணாமல் போகிறான். அவனைப் பற்றி விசாரித்தால் அவன் இறந்து 10 ஆண்டுகளாகிறது என்கிறார்கள்.

ஜான் என்பவன் பொய்,நீபழகுவது எல்லாம் பொய், பிரமை அல்லது பேய் என்று எல்லாரும் அவளை நம்பவைக்கிறார்கள். அவளை மனநோயாளியாக் சித்தரிக்கிறார்கள் பிறகுதான் தெரிகிறது.இவையாவும் அவளது சொத்தைக் கைப்பற்ற தோழி ரம்யா செய்த சதி என்று.  போலீஸ் வந்து விசாரித்த பிறகுதான் தெரிகிறது .

இறுதியில் பிரியாவுக்கு என்னாகிறது? அவளது காதல் எனளாயிற்று என்பதே க்ளைமாக்ஸ்.

பிரியாவாக நிகிஷா படேல் வருகிறார் படத்தில் இளமை வழிய வருகிறார். பெரும்பகுதி கவர்ச்சி உடையில்தான் வருகிறார். எனவே கவர்ச்சிக்குப் பஞ்சமில்லை.பேயோ என்று பயப்படும் காட்சிகளில் நடிக்கவும் செய்கிறார்.அப்பாவாக ராதாரவி நடித்துள்ளார் .

தோழி ரம்யாவாக இனியா வருகிறார். எதிர்மறை நிழல்படியும் பாத்திரம்தான்.கடைசி காட்சியில் போலீசாக சிம்ரன் வருகிறார். குழப்பங்களை எல்லாம் உடைத்துக் கதையை முடிக்கிறார்.

ஜானாக வரும்  நடிகர் பரவாயில்லை. ப்ரியாவின் அப்பாவாக வரும் ராதாராவிக்கு சிறுவேடம்தான் கரையோரம் என்று பெயர் வைத்ததாலோ என்னவோ படத்தின் பெரும்பகுதி கடற்கரை, லைட்ஹைவுஸ் என்று காட்சிகள் உள்ளதால்  பிக்னிக் போனது போல் உணரவைக்கிறது.மனோபாலா,சிங்கம்புலி  செய்யும் காமெடிகள் ஐயோபாவம் ரகம்.

படத்தின் நாயகன் ஒளிப்பதிவாளர்தான் காட்சிகளில் இளமைத்துள்ளல்.. வண்ணமயமான காட்சிகளால் படம் முழுக்க கேமராவின் ஆட்சிதான்.  ஆனால் மிகவும் மெலிதான நூலிழை கதையை வைத்துக் கொண்டு கதை பின்னியிருக்கிறார்கள். காட்சிகளில் அழுத்தம் போதாது. பாடல்கள் படத்துக்கு வேகத்தடைகள். கைக்குட்டைக்கு தேவையான நூலில் புடவையே நெய்ததால்தான் ஆங்காங்கே ஓட்டை விழுந்துள்ளது.இது ஓர் இளமையான பொழுதுபோக்குப் படம்.