கார்த்தியின் உழவன் ஃபவுண்டேஷனின் ஓசைப்படாத பணிகள்

நடிகர் கார்த்தியின் உழவன் ஃபவுண்டேஷன் அமைப்பானது வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்து பல  அத்தியாவசியமான முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. ஏற்கெனவே உழவர் விருதுகள் என்ற பெயரில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட உழவர்கள்  ஐந்து பேரை தேர்ந்தெடுத்து உழவர்களை கெளரவப்படுத்தி அடையாளப்படுத்த அவர்களுக்கு தலா ஒரு இலட்சத்திற்கான காசோலையும் விருதுகளையும் வழங்கினர். அதேபோல் மரம் கருணாநிதி அவர்களின் சுற்றுச்சூழல் சேவைக்காக அவருக்கு 50 ஆயிரம் வழங்கினர், பிறகு உழவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பயன்படும் விதமாக திருவண்ணாமலையில் 83 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள விண்ணமலை ஏரியை சீரமைத்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் சிறு குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் விவசாயத்திற்கான கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு 1.50 இலட்சத்திற்கான  பரிசுப் போட்டி அறிவித்துள்ளது. தற்போது காற்று மாசுபாடுகளைக் குறைக்கவும் சுற்றுச்சூழலை மேம்படுத்தவும் தொழிற்சாலைகள் அதிகம் நிரம்பியுள்ள மறைமலைநகரில் மரக்கன்றுகள் நடுவதற்கான பணிகள் ஆம்பினால் ஆம்னிகனெக்ட் என்ற நிறுவனத்துடன் சேர்ந்து தொடங்கப்பட்டது.

இந்த மரக்கன்றுகள் நடும் பணியை மறைமலை நகராட்சி ஆணையர் துவக்கி வைத்தார். இதில்  நகராட்சி பொறியாளர், ஆம்பினால் கம்பெனியின் நிர்வாகிகள், உழவன் ஃபவுண்டேஷன் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்..