நாட்டின் தூதரான நடிகை சுஹாசினி : கிராண்ட் டச்சி ஆப் லக்சம்பர்க் நாட்டின் அதிகார பூர்வ தூதரானார்!

suhasini1பிரபல நடிகையும், சமுக ஆர்வலருமான திருமதி சுஹாசினி மணிரத்னம் “கிராண்ட் டச்சி ஆப் லக்சம்பர்க்” நாட்டின் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலத்தின் அதிகாரப்பூர்வ தூதராக நேற்று நியமிக்கப்பட்டார்.

கிராண்ட் டச்சி ஆப் லக்சம்பர்க் நாட்டின் அம்பேஸடர் திரு. சாம் ஸ்ரீநர் முறைப்படி சுஹாசினி மணிரத்னம் அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க, விழாவில் அதிகாரப்பூர்வ தூதர்கள் மற்றும் கார்ப்பரேட் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். சென்னையில் உள்ள நட்சத்திர ஒட்டலில் இந்த பதவியேற்பு விழா நேற்று நடை பெற்றது.

விழாவைக்  குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்த சாம் ஸ்ரீநர், திருமதி சுஹாசினி மணிரத்னம் அவர்களை தங்கள் நாட்டின் அதிகாரப்பூர்வ தூதராக நியமித்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் சுஹாசினி மணிரத்னம் அவர்கள் 350 படங்களுக்கும் மேல் நடித்த ஒரு சிறந்த நடிகை மட்டுமல்ல, அவர் பெண்கள் நலனிலும் ஆர்வம் கொண்ட பன்முக சிந்தனையாளர் என்றார். சுஹாசினி மணிரத்னம் அவர்களை அதிகாரப்பூர்வ தூதராக நியமித்ததால் இந்தியா மற்றும் கிராண்ட் டச்சி ஆப் லக்சம்பர்க் நாட்டுடனான உறவு மேலும் மேம்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

பதவியேற்ற பின் பேசிய திருமதி சுஹாசினி மணிரத்னம் அவர்கள், தன்னை தூதராக நியமித்ததற்கு நன்றி கூறினார். தான் பிறந்த பரமக்குடி என்ற சிறிய ஊருடன் கிராண்ட் டச்சி ஆப் லக்சம்பர்கை ஒப்பிட்ட பேசிய சுஹாசினி மணிரத்னம், தனக்கு அளித்த பொறுப்பை செவ்வனே செய்வேன் என்று உறுதியளித்தார்.

ஒரு நடிகர் மற்றொரு நாட்டின் அதிகாரப்பூர்வ தூதராவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத் தக்கது.