‘குடி மகான் ‘விமர்சனம்

விஜய் சிவன் ,சாந்தினி தமிழரசன், சுரேஷ் சக்கரவர்த்தி ,நமோ நாராயணன் ,ஜி எல் சேதுராமன், ஜி ஆர் கதிரவன், ஹானஸ்ட் ராஜ் நடித்துள்ளனர். பிரகாஷ் என் இயக்கியுள்ளார்.

கதாநாயகன் மதி பாத்திரத்தில் விஜய் சிவனும் மதுவின் அப்பாவாக சுரேஷ் சக்கரவர்த்தியும் மதியின் மனைவி பவித்ராவாக சாந்தினி தமிழரசனும் நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவு மகேந்திரன். இசை தனுஷ் மேனன்.

கதாநாயகன் விஜய் சிவன் ஏடிஎம் எந்திரங்களுக்குப் பணம் நிரப்பும் ஒப்பந்த நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.ஒரு ஏடிஎம் எந்திரத்தில் 100 ரூபாய் நோட்டுக்குப் பதிலாக 500 ரூபாய் நோட்டைத் தவறுதலாக வைத்து விடவே பிரச்சினை ஆகிறது. அது மட்டுமல்ல ஏடிஎம் எந்திரத்தில் பாஸ்வேர்டைத் திருடி பணம் எடுக்கப்படுகிறது.இப்படி சில்லறையாக திருடி பெரிய இழப்பு ஏற்படுகிறது.

அதனால் அவருக்கு வேலை போகிறது. திருடுகளால8 லட்சம் இழப்பு ஏற்படுகிறது. அதைக் கட்டினால் தான் வேலை என்று மிரட்டுகிறார்கள்.

வரவுக்கும் செலவுக்கும் போதாத ஒரு நடுத்தர குடும்பத்தில் அவர் அல்லாடிக் கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட அவருக்கு உடல் ரீதியாக ஒரு பிரச்சினை கார்போஹைட்ரேட் குளுக்கோஸ் போன்றோ எண்ணெய் பதார்த்தங்களோ இனிப்புகளோ அதிகம் சாப்பிட்டு விட்டால் அவருக்கு மது அருந்ததியதைப் போல் போதை வந்துவிடும். தன்னை மறந்து நடவடிக்கையில் ஈடுபடுவார். இதனால் அவர் குடும்பத்திற்குக தெரியாமல் குடிப்பதாக மனைவி சந்தேகப்படுகிறார். தனது உடல் பிரச்சினை என்பதை நிரூபிப்பதற்குப் படாத பாடுபடுகிறார். இதே நேரத்தில் அவர் அப்பாவான சுரேஷ் சக்கரவர்த்தி முதிர்ந்த வயதிலும் தனக்கு ஒரு பெண் தேடிக் கொண்டிருக்கிறார்.

இப்படிப்பட்ட நிலையில் அந்தச் கதாநாயகன் குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் அலுவலகத்திலும் என்று அல்லாடி, தன்னை நிரூபிக்க நடக்கும் போராட்டங்கள்,ஏடிஎம்மில் கைவரிசை காட்டிய திருடர்களை பிடிக்கும் தேடல்கள் என சுவாரசியமான கலகலப்பான திருப்பங்கள். இவை நகைச்சுவைத் தோரணங்களாக காட்சிகளாகி படத்தில் வந்துள்ளன.

பொதுவாகவே குடிகாரர்கள் என்றால் போதை சார்ந்த நகைச்சுவை என்பது வழக்கமான, பலராலும் யூகிக்கக் கூடியதாக இருக்கும்.
ஆனால் குடிக்காமலேயே ஒருவர் அப்படிப்பட்ட போதைக்கு இலக்காவது என்பது புதிய வகையான கற்பனையாக உள்ளது.
அப்படிப்பட்ட பிரச்சினை மருத்துவ ரீதியாக அரிதான ஒன்று என்றும் படத்தில் காட்டுகிறார்கள்.

படத்தில் கதாநாயகன் விஜய் சிவன்.வகை வகையான நடிப்புத் தருணங்களில் நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்கிறார்.

அவர் நடுத்தரக் குடும்பத்தில் ஒரு கணவனாக போராட்டத்தை சந்திப்பவராகவும்
நான் குடிகாரன் அல்ல என்று நிரூபிக்கவும் போராடும் நடுத்தர வர்க்கத்து மனிதராகவும் பல்வேறு வகையான முகபாவனை காட்டி நடிக்க நல்ல வாய்ப்பு. அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

அவரது மனைவியாக வரும் சாந்தினி ஒரு மிடில் கிளாஸ் மனைவியாகவும் அவர்களது ஏமாற்றம் தரும் வாழ்க்கைச் சூழலை வெளிப்படுத்தும் வகையிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

கதாநாயகன் தந்தையாக வரும் சுரேஷ் சக்கரவர்த்தி தன் பங்குக்கு நகைச்சுவை செய்கிறார் .அது மட்டும் அல்லாமல் நமோ நாராயணன், லவ்லி ஆனந்த் போன்ற பிற நடிகர்களும் சிரிப்பை மூட்டத் தவறவில்லை.கதை நிகழும் இயல்பிலேயே சிரிப்பை வர வைப்பது தான் இயக்குநரின் சாமர்த்தியம்.

ஒரு புதிய கற்பனையுடன் இந்த படத்தை எடுத்து அனைவரையும் ரசிக்கும் படி உருவாக்கி உள்ள இயக்குநர் பிரகாஷ் என் முதல் படத்திலேயே பாஸ்மார்க் வாங்கி விடுகிறார். குடிமகான் படத்திற்கு நம்பிப் போனால் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் கலகலப்பு நிச்சயம்.