சாக்கு தைக்கும் தொழிலாளியின் சினிமா கனவு !

gopikanth1சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் “முதல் மாணவன்”. இதில் கதாநாயகனாக அறிமுகமானார் கோபிகாந்தி. அவர் இப்போது” வீரக்கலை”என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார்.

இந்நிலையில் அவரது ரசிகர்கள் “கோல்டு ஸ்டார் கோபிகாந்தி மக்கள் சேவை இயக்கம்” என்ற பெயரில் ரசிகர் மன்றம் தொடங்கியுள்ளனர்! இது பற்றி கோபிகாந்தி கூறியதாவது…
” நான்  நாமக்கல் ஆளு! எளிய குடும்பத்தில் பிறந்தேன்.தந்தை சுப்ரமணி ஒரு சாக்குதைக்கும் தொழிலாளி,தாய் ராஜம் பூ வியாபாரம்  செயது குடும்பத்துக்கு உதவினார்.குடும்ப வறுமையால்படிப்பு எனக்கு எட்டாவதுக்கு மேல் எட்டாக்கனியானது!அப்பாவைப்போல நானும் சாக்கு தைக்கும் தொழிலாளி யானேன்!சிறு வயதிலிருந்தே எனக்கு சினிமா கனவு இருந்தது, வானத்தில் இருக்கும் நிலாவை பிடிக்க ஆசைப்படும் குழந்தை மாதிரி திரைவானில் நானும் ஒரு நட்சத்திரமாக மின்ன ஆசைப்பட்டேன்!எனது லட்சிய கனவை நோக்கி சென்னைக்கு படையெடுத்தேன்.
கடுமையாக  உழைத்து, கணிசமான தொகையை சேர்த்து,என் லட்சியக்கனவை நனவாக்கும் முயற்சியில் இறங்கி,RSG PICTURES என்ற பட நிறுவனம் தொடங்கி முதலில் சில குறும்படங்கள் எடுத்து அதில் நாயகனாக நடித்தேன்.சமூக விழிப்புணர்வு உள்ள அப்படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது! அத்துடன் அகில உலக சமூக சேவை மையம் என்ற தன்னார்வ அமைப்பு தொடங்கி அதன் மூலம் பல நற்பணி செய்தேன்.இவை நாமக்கல் வட்டாரத்தில் எனது செல்வாக்கை உயர்த்தியது!
ஆனால் என்னை யாருமே கண்டுகொள்ளவில்லை! ஊருக்கு திரும்பி சாக்கு தைக்கும் தொழிலை தொடர்ந்தேன்!ஆனாலும் எனக்குள் இருந்த நடிப்பு தாகம் அடங்கவேயில்லை!மீண்டும் படவுலகை நோக்கி படையெடுத்தேன் நான் ஏறாத படக்கம்பெனியோ,பார்க்காத இயக்குநர்களோ இல்லை!எந்த பலனும் இல்லை! இனி யாரிடமும் வாய்ப்பு கேட்ககூடாது,என் போல புறக்கணிக்கப்பட்ட  இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்குவேன் என சபதம் எடுத்தேன்!
இந்த நிலையில் என் மீது அன்பு கொண்ட பலர் ரசிகர் மன்றம் தொடங்க முன்வந்தனர்.”கோல்டு ஸ்டார் கோபிகாந்தி மக்கள் சேவை இயக்கம்” என்ற பெயரில் எனக்கு ரசிகர் மன்றம் ஆரம்பித்துள்ளனர். வழக்கமான ரசிகர் மன்றம் போல இல்லாமல் மக்களுக்கு ஏதாவது செய்யும் இயக்கமாக இது இருக்கும்!
இந்த சமூக சேவையை பார்த்து சென்னை கலை மன்றம் எனக்கு “கோல்டு ஸ்டார்” என்ற பட்டத்தை கொடுத்தது! இந்த உற்சாகத்துடன் “முதல் மாணவன்” படத்தை தொடங்கி, நாயகன் ஆக நடித்து, தயாரித்தேன். அதில் பல புதுமுகங்களுக்கு வாய்ப்பும் கொடுத்தேன்! மாணவ சமுதாயத்தின் மீது மரியாதை ஏற்படுத்திய அப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. இந்த தெம்பில் “வீரக்கலை” படத்தை ஆரம்பித்தேன். மலை வாழ் இளைஞன் பற்றிய அப்படத்தில் நாயகனாக நடித்துள்ளேன். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்திலும் ஏராளமானவர்களை அறிமுகம் செய்கிறேன்.”என்றார் கோபிகாந்தி.