சிங்கப்பூர் அருங்காட்சியகத்தில் ஸ்ரீதேவியின் மெழுகுச் சிலை!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மெழுகுச் சிலை கடந்த செப்டம்பர் 4ஆம் தேதியன்று சிங்கப்பூர் மேடம் டொசார்ட் அருங்காட்சியகத்தில் திறக்கப்பட்டது

லண்டனில் உள்ள மேடம் டொசார்ட் மெழுகுச் சிலை அருங்காட்சியம் அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் பிரபலங்களின் சிலைகளுக்காகவே சர்வதேச அளவில் புகழ்பெற்றது.
இதைப்போல் சிங்கப்பூரில் அமைக்கப்பட்டிருக்கும் மேடம்
டொசார்ட் அருங்காட்சியகம் தென்கிழக்கு ஆசிய நாடுகள் அளவில் மிகவும் புகழ் பெற்றதாகும்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மெழுகுச் சிலை கடந்த செப்டம்பர் 4ஆம் தேதியன்று சிங்கப்பூர் மேடம் டொசார்ட் அருங்காட்சியகத்தில் திறக்கப்பட்டது. ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் மகள்கள் ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் ஆகியோர் இந்தத் திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர். இந்திய ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் மிஸ்டர் இந்தியா படத்தில் இடம் பெற்ற ஹவா ஹவாய் பாடலில் நடித்த ஸ்ரீதேவியின் தோற்றத்தில் இந்த சிலை வடிவமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

விழாவின் உணர்ச்சிகரமான ஒரு தருணத்தில் போனி கபூர் பேசும்போது, “ஸ்ரீதேவிமீது மக்கள் எந்த அளவுக்கு அன்பையும் மரியாதையும் வைத்திருக்கிறார்கள் என்பது குறித்து நானும் என் குடும்பத்தாரும் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்கிறோம். மனைவி என்ற முறையில் அவரது கலை தாகத்தையும், சினிமா மீதான ஈர்ப்பையும், நடிப்பில் காட்டிய அர்பணிப்பு உணர்வையும் என்றென்றும் மதிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். நடித்த படங்கள் மூலம் என்றும் அவர் நம் நினைவில் நிலைத்திருப்பதைப்போல், கெளரவம் மிக்க இந்த மெழுகுச் சிலை மூலம் என்றென்றும் அவர் நம்முடன் வாழ்ந்து கொண்டிருப்பார்” என்று குறிப்பிட்டார்.