சினிமா கற்கலாம் வாங்க: யூடிவி தனஞ்ஜெயனின் தைரிய முயற்சி!

boftaயூடிவி தனஞ்ஜெயனின் முனைப்பான முன்னெடுப்பில் உருவாகியுள்ள சினிமா பயிற்சி நிலையமே பாஃப்டா ,அதாவது ப்ளூ ஓஷன் ஃபிலிம் & டெலிவிஷன் அகாடமி (பாஃப்டா – BOFTA)

இங்கே திரையுலகில் புகழ்பெற்ற சாதனை படைத்தவர்களைக் கொண்டு பாடங்கள் கற்பிக்கப்படவுள்ளன.

பாஃப்டா தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களால் மார்ச் 4 ,முதல் 2015 தொடங்கிவைக்கப்படுகிறது

பாஃப்டா – BOFTA) புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு நிறுவனம். சினிமாவிலும் தொலைக்காட்சியிலும் 20 வருடங்களுக்கும் மேல் அனுபவமும் திறனும்கொண்டவர்களால் நடத்தப்படும் கல்வி நிறுவனம். துறை சார்ந்த நிபுணர்கள் சிறப்பு விரிவுரையாளர்களாகவோ அல்லது வருகை தரு ஆசிரியர்களாகவோ இருக்கும் கல்வி நிறுவனங்களைப் போல அல்லாமல் தலை சிறந்த வல்லுநர்கள் பாஃப்டா-வில் முழுநேர ஆசிரியர்களாக இருக்கிறார்கள். இவர்கள் மாணவர்களுடன் உரையாடி திரைப்படத் தயாரிப்பு மற்றும் தொலைக்காட்சி  நிகழ்சித் தயாரிப்பு குறித்த நுணுக்கங்களை அவர்களுக்குக் கற்றுத் தருவார்கள்.

பாஃப்டா-வில் நவீன யுக ஊடகத் துறையைச் சேர்ந்த ஜாம்பவான்கள் மற்றும் வல்லுநர்கள் மூலம் கற்றுக்கொள்ளும் அரிய வாய்ப்பை இந்த அகாடமி மாணவர்களுக்கு வழங்குகிறது. தலைசிறந்தவர்களிடம் கற்றுக்கொள்ளும் ஒரு சிறந்த வாய்ப்பாக இது மாணவர்களுக்கு அமையும். மாணவர்கள் தங்கள் படைப்புத்திறனை மேம்படுத்திக்கொண்டு, அவற்றை வெளிப்படுத்தி, சினிமா மற்றும் தொலைக்காட்சித் துறைகளில் பொருத்தமான வாய்ப்புகளைப் பெறுவதற்கான தகுதிபெற வைப்பதுதான் பாஃப்டா-வின் நோக்கம்.  கற்றுக்கொள்வது என்பது சுவாரஸ்யமாகவும் நடைமுறை சார்ந்ததாகவும் இருக்க வேண்டும். அந்தச் சூழலில்தான் மாணவர்களின் தலை சிறந்த படைப்பாற்றல் திறன் வெளிப்படும் என்பதால் பாஃப்டா-வின் பாடத்திட்டங்கள் இந்த முறையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த அகாடமியில் படித்து முடிக்கும் மாணவர்கள் உடனடியாக திரைத்துறை மற்றும் தொலைக்காட்சித் துறையில் பணியமர்த்தப்படும் தகுதியோடு இருக்க வேண்டும் என்கிற தெளிவாக நோக்கத்துடன் பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இங்கு வழங்கப்படும் பெரும்பாலான வகுப்புகள் தற்போதைய தொழில்நுட்ப, சமூக, கலாசார மற்றும் பொருளாதார மாற்றங்களை மனதில் கொண்டு, நிபுணர்களிடம் கற்கும், நடைமுறை கற்றல் முறையில் வடிவமைக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டுள்ளன.

திரைத் துறையின் வல்லுநர்கள் மற்றும் நிபுணர்களின் ஆதரவுடனும் அவர்களின் வழிகாட்டுதலுடனும் தென்னிந்தியாவின் புகழ் வாய்ந்த சினிமா மற்றும் தொலைக்காட்சி அகாடமியாக மாற வேண்டும் என்பதுதான் பாஃப்டா-வின் லட்சியம். மாணவர்களுக்கு நடைமுறை சார்ந்த அறிவை வழங்கி, அவர்களுக்குச் சிறந்த முறையில் பயிற்சி அளித்து, திறனை மேம்படுத்தி திரைப்படத் துறை சார்ந்த தங்களது கனவை நனவாக்கிக்கொள்ள அவர்களுக்கு உதவுவதே எங்கள் நோக்கம்.

பாஃப்டா-வின் ஆசிரியர் குழு

இயக்குநர் பாடத்தின் துறைத் தலைவர்: இயக்குநர் மகேந்திரன்
திரைக்கதை பாடத்தின் துறைத் தலைவர்: இயக்குநர் கே. பாக்யராஜ்
நடிப்பு பாடத்தின் துறைத் தலைவர்: நடிகர் நாஸர்
ஒளிப்பதிவு பாடத்தின் துறைத் தலைவர்: ஒளிப்பதிவாளர் மது அம்பாட்
எடிட்டிங் பாடத்தின் துறைத் தலைவர் : எடிட்டர் பி லெனின்
திரைப்பட இதழியல் பாடத்தின் துறைத் தலைவர்: கார்ட்டூனிஸ்ட் மதன்
தொலைக்காட்சித் தயாரிப்பு பாடத்தின் துறைத் தலைவர்: நடிகை குட்டி பத்மினி
திரைப்படத் தயாரிப்பு மேனேஜ்மன்ட் பாடத்தின் துறைத் தலைவர்: தயாரிப்பாளர் டி. சிவா
மேற்கண்ட துறைகளின் மூத்த ஆசிரியர் குழு:
இயக்கம் மற்றும் திரைக்கதை எழுதும் பயிற்சி: இயக்குநர்கள் ஆர். பார்த்திபன், மனோபாலா, ஞான ராஜசேகரன், கே. ராஜேஷ்வர், சசி, வெங்கட் பிரபு, விஷ்ணுவர்த்தன், விஜய், பாண்டிராஜ், ராம், கார்த்திக் சுப்பராஜ், ஆர். எஸ். பிரசன்னா, எழுத்தாளர் கருந்தேள் ராஜேஷ் மற்றும் வரலாற்று ஆசிரியர் அறந்தை மணியன்.

ஒளிப்பதிவாளர் பயிற்சி: ஒளிப்பதிவாளர் பி. கண்ணன், மகேஷ் முத்துஸ்வாமி மற்றும் சிஜே. ராஜ்குமார்.

நடிப்பு பயிற்சி: நடிகர் ஷண்முகராஜா மற்றும் சந்திர மோஹன். நடிகர்கள் ராஜேஷ், ‘தலைவாசல்’ விஜய், ஜீவா மற்றும் ரோஹிணி ஆகியோரும் இந்த அகாடமிக்கு ஸ்டார் சிறப்பு ஆசிரியர்களாக வர ஒப்புக்கொண்டுள்ளார்கள்.

திரை இதழியல் பயிற்சி: மோஹன் ராமன், ஸ்ரீதர் பிள்ளை மற்றும் கேபிள் சங்கர்.
திரைப்படத் தயாரிப்பு பயிற்சி: தயாரிப்பாளர்கள் கோ. தனஞ்ஜெயன், ஜே. சதீஷ் குமார், இயக்குநர் கேபிள் சங்கர் மற்றும் புரொக்‌ஷன் டிசைனர் ஆர். வெங்கட்.

6 மாதப் படிப்புகளான திரைப்படத் தயாரிப்பு மற்றும் திரை இதழியல் பாடங்கள் தவிர மற்ற 6 பாடங்களும் 12 மாத கால பாடங்கள்.

2015, ஜூலை 1 தேதியில் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. இவற்றுக்கான அட்மிஷன்கள் இப்போதே தொடங்கிவிட்டன. காலை 9.30 முதல் மாலை 4.30 வரை திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இந்த வகுப்புகள் நடைபெறும்.

தமிழ் திரைப்படத் துறையின் மையத்திற்கு (கோலிவுட்) வெகு அருகில்,

பாஃப்டா, ரவி பிரசாத் ஃபிலிம் லாப்ஸ், எண்.8 -11, வி.ஓ.சி. முதல் மெய்ன் தெரு, ராம் தியேட்டருக்கு முதல் சந்து, கோடம்பாக்கம், சென்னை- 600 024

என்கிற முகவரியில் மூன்று மாடிக் கட்டடத்தில் இந்த அகாடமி உருவாக்கப்பட்டுள்ளது.
நவீன வகுப்பறைகள், ஒரு ப்ரிவ்யு தியேட்டர், டப்பிங் தியேட்டர், எடிட்டிங் சூட், படப்பிடிப்புத் தளங்கள், புத்தகங்களும் டி.வி.டி.க்களும் கொண்ட ஒரு நூலகம், மாணவர்கள் பார்ப்பதற்காக இரண்டு ஸ்க்ரீனிங் அறைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை இந்த அகாடமி மாணவர்களுக்கு வழங்குகிறது.

பாஃப்டா-வைப் பற்றி இதன் இணை நிறுவனர் கோ. தனஞ்ஜெயன் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “திரைத் துறை மற்றும் தொலைக்காட்சித் துறையைச் சேர்ந்த ஜாம்பவான்கள் மற்றும் வல்லுநர்களிடம் நேரடியாக பயிற்சி பெற்று, அதன் மூலம் திரைப்படம் மற்றும் தொலைகாட்சித் துறையில் சுலபமாக வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படும் மாணவர்களின் கனவை நனவாக்குவதுதான் இந்த அகாடமியின் நோக்கம். இதைப் பற்றிக் கேள்விப்பட்டு இங்கு சேர விரும்புவதாக ஏராளமான மாணவர்கள் கூறியுள்ளனர். அவர்களை விரைவில் சந்திக்க இந்த அகாடமி ஆவலுடன் காத்திருக்கிறது. தாங்கள் விரும்பும் கோர்ஸ்களை அவர்கள் தேர்ந்தெடுக்கலாம்.”

இந்த பா ஃப்டா அறிமுகவிழா நேற்று மாலை மியூசிக் அகாடமியில் நடைபெற்றது. திரையுலகப் பிரமுகர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

தங்கள் துறை பற்றியும் பகிரப்போகும் அனுபவங்கள் குறித்தும்இயக்குநர்கள் மகேந்திரன்,கே.பாக்யராஜ்,  நாசர், கார்த்திக் சுப்பராஜ், சசி, ஏ.எல்.விஜய், மனோபாலா, ஆர்.எஸ்.பிரசன்னா, பார்த்திபன், கே.ராஜேஷ்வர்,   தயாரிப்பாளர்கள் டி.சிவா,  ஜே.சதிஷ்குமார்,குட்டிபத்மினி,ஆகியோர் பேசினர்.

நிறுவனர் தனஞ்ஜெயன் அனைவரையும் வரவேற்றதுடன் ஒத்துழைப்பையும் கோரினார்.இந்த அகாடமியில் சேர முன்வந்துள்ள மாணவர்களுடன் பாஃப்டா-வின் ஆசிரியர் குழுவினரும்கூட இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.