‘சுல்தான்’ விமர்சனம்

அப்பா செய்து கொடுத்த சத்தியத்தை மகன் நிறைவேற்றும் கதைதான் ‘சுல்தான்’

சென்னையில் பெரிய தாதாநெப்போலியன். அவரிடம் நூற்றுக்கணக்கான ரவுடிகள் வேலை செய்கிறார்கள். நெப்போலியனின் மனைவி அபிராமிக்கு இந்த ரவுடித் தொழில் பிடிக்கவில்லை. தன் மகன் ரவுடியாக இருக்கவே கூடாது என்று ஆசை. ஆனால், பிரசவத்தில் அவர் இறக்க மகன் பிறக்கிறான். அந்தக் குழந்தைதான் கார்த்தி. அவரை ரவுடிகள்தான் வளர்க்கிறார்கள்.

கார்த்தி  ரோபோட்டிக்ஸ் இன்ஜினீயர் ,இவர்கள் யாரும் ரவுடியாக இருக்கக் கூடாது என்று அவருக்குஆசை. அந்தச் சமயத்தில் சென்னையில் ரவுடிகள் என்கவுன்ட்டர் தொடங்குகிறது. தனது அப்பாவுடன் இருந்த ரவுடிகளைக் காப்பாற்ற முயற்சிகள் எடுக்கிறார் கார்த்தி. அப்போது அப்பா செய்து கொடுத்த சத்தியம் தெரியவருகிறது. அது என்ன சத்தியம், ரவுடிகளை என்கவுன்ட்டரிலிருந்து கார்த்தி காப்பாற்றினாரா என்பதுதான் மீதிக் கதை.

நல்லதொரு கமர்ஷியல் கதையைக் கையிலெடுத்துள்ளார் இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன். கதையின் நாயகன் சுல்தானாக கார்த்தி. காதல், ஆக்‌ஷன் என ஒட்டுமொத்தக் கதையையும் தோளில் சுமந்துள்ளார். அப்பாவின் சத்தியம், வில்லன்களுடன் ஆக்ரோஷமாக மோதுவது என அவருக்கு ஏற்ற களத்தை தனது நடிப்பின் மூலம் சிறப்பாகச் செய்திருக்கிறார். நாயகியாக ராஷ்மிகா மந்தனா. தமிழில் முதல் படம். கதைக்கு முக்கியமான கதாபாத்திரம்தான் என்றாலும், நடிப்பதற்குப் பெரிதாக வேலை இல்லை.

கார்த்தியின் அப்பாவாக நெப்போலியன். பெரிதாக மனதில் பதியவில்லை. அவரிடம் பணிபுரிபவராக லால். கார்த்திக்குப் பிறகு இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரம் இவருடையதுதான். தனது கதாபாத்திரத்தை உணர்ந்து பிரமாதமான நடிப்பை வழங்கியுள்ளார். சில இடங்களில் அவர் பேசுவது புரியவில்லை. அதற்குப் பிறகு பெரிய ரவுடிக் கூட்டம்தான் படத்தின் ஹைலைட். பலருக்கும் முக்கியத்துவம் இல்லை என்றாலும், சிலர் மனதில் பதிகிறார்கள். வில்லத்தனம் கலந்த அர்ஜய், சண்டை போடும் காமராஜ், காது கேட்காத சென்றாயன் , யோகி பாபு உள்ளிட்ட சிலரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

நிலப்பரப்பு, எக்கச்சக்க நடிகர்கள் சார்ந்த கதையில் ஒளிப்பதிவின் பங்கு அதிகம். படத்தின் பிரம்மாண்டத்தை ஒளிப்பதிவில் பிரமாதமாகக் கொண்டு வந்திருக்கிறார் சத்யன் சூரியன். விவேக் – மெர்வின் இசையில் பாடல்கள் கதைக்குப் பொருந்தியுள்ளன. 

இந்தப் படத்தின் களம் புதியது என்றாலும், திரைக்கதை அமைப்பில் வரும் காட்சிகள் பல படங்களை ஞாபகப்படுத்துகின்றன..நல்ல கமர்ஷியல் படம் பார்த்த திருப்தியைக் கொடுத்துவிடுகிறார்கள்.

 இரண்டாம் பாதியில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் ரசிக்கத்தக்கப் படமாக இருந்திருக்கும்.

 ‘சுல்தான்’. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் போனால் கண்டிப்பாக ரசிக்கலாம்.