சூர்யாதான் என் உலகம் : ஜோதிகா பூரிப்பு

jothika-mkநீண்ட இடைவெளிக்கு பின் ஜோதிகா நடித்து வெளிவர உள்ள படம் 36 வயதினிலே. இப்படத்தை சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீடு  சென்னையில் நடைபெற்றது.

இப்படத்தின் பாடல்களை சூர்யாவின் மகள் தியா வெளியிட, அவருடைய மகன் தேவ் பெற்றுக் கொண்டான். படத்தின் முன்னோட்ட கட்சிகளை நடிகர் கார்த்தி வெளியிட்டார்.

இவ்விழாவில் நடிகை ஜோதிகா பேசும்போது, “சூர்யாவைக் கணவனாக அடைந்தது என் பாக்கியம். என் ஆசைகள், கனவுகளின் படி வாழ்கையை நடத்திச் செல்வதில் அவர் உறுதுணையாக இருக்கிறார்.கணவருக்கு நன்றி சொல்லக்கூடாது என்று சொல்வார்கள். சூர்யாவை கணவராக அடைந்ததை பெருமையான விஷயமாக கருதுகிறேன். சூர்யாதான் என்னுடைய உலகம். நான் சென்னை வந்ததும் முதன்முதலில் சந்தித்த நபர் சூர்யாதான்.

சினிமாவில் சிறந்த, நல்ல இயக்குநர்களின் படங்களில் நடித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.வஸந்த் சார் வழிநடத்தலில் எனக்கு மேலும் பெருமையை தேடிதந்தது. மேலும் எனக்கு ஆதரவாக இருக்கும் மாமா அத்தைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அதுமட்டுமின்றி இந்த படத்தை என்னால் பண்ண முடியும் என்று ஊக்குவித்த என்னுடைய நண்பர்களுக்கும் நன்றி” என்றார்.

“என் ரசிகர்கள் என்னைப் பார்க்கும்போதெல்லாம் ஏன் ஜோதிகாவை சினிமாவில் நடிக்க வைக்க விரும்பவில்லை..? என்ற கேள்வியை எதிர்கொண்டேன். ஒரு நல்ல வாய்ப்புக்காக நாங்கள் காத்திருந்ததை அப்போதெல்லாம் சொல்லியும் வந்தேன். அது இப்போது நடந்திருக்கிறது..!” என்றார் சூர்யா ..

கோயம்புத்தூரிலிருந்து விமானம் பிடித்து நேராக விழாவுக்கு வந்த கார்த்தி, “நான் ஜோதிகா அண்ணியின் மிகப்பெரிய ஃபேன். மற்ற ரசிகர்களைப் போலவே நானும் ’36 வயதினிலே’ படத்தைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன். பெண்களுக்கு ஒரு நல்ல செய்தியைச் சொல்ல வருகிறது இந்தப்படம். இதில் வரும் ‘வாடி ராசாத்தி’ பாடல் கேட்டதும் மனதில் ஒட்டிக்கொண்டது. இதனை என் மகளுக்காக நான் டெடிகேட் செய்கிறேன்..!” என்றார்.

சிவகுமாரோ, “ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்பார்கள். ஆனால், இங்கு ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு ஆண் இருக்கிறார்…!” என்றார்.
இயக்குநர் பாலா பேசுகையில், ”நான் இந்த விழாவுக்கு சூர்யாவுக்காக வரவில்லை. ஜோதிகாவிற்காக வந்துள்ளேன். ஏனெனில் நான் அவருடைய தீவிர ரசிகன் ”என்று கூறினார்

இயக்குநர் வெங்கட் பிரபு ”, சூர்யாவும் ஜோதிகாவும் மீண்டும் இணைந்து நடிக்க வேண்டும். இதை நான் ரசிகர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

இந்நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகா மற்றும் மகன், மகளுடன் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.மேலும் நடிகர் ரகுமான், இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார்,பாண்டிராஜ், ராதாமோகன், தரணி, தயாரிப்பாளர்கள் ஞானவேல்ராஜா, தனஞ்செயன், நடிகை அபிராமி உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர்.jo-family