செப் 30 ரிலீஸ்: இறுதிக்கட்ட பணிகளில் ‘பொன்னியின் செல்வன்’ !

சுபாஸ்கரன் லைகா புரொடக்‌ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து வழங்கும்,
மணி ரத்னம் இயக்கியுள்ள “பொன்னியின் செல்வன்” படம் வரும் 30-ம் தேதி வெளியாகிறது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெறுகின்றன.

படத்தின் வேலைகள் ஒருபுறம் நடைபெறும் நிலையில், இன்னொரு புறம் படத்தை பிரபலப்படுத்தும் வேலைகளில் நடிகர் நடிகைகள் இறங்கியுள்ளனர்.

ஆதித்த கரிகாலனாக நடித்துள்ள விக்ரம், வந்திய தேவனாக நடித்திருக்கும் கார்த்தி, குந்தவையாக வரும் த்ரிஷா ஆகியோர் பொன்னியின் செல்வன் படத்தை சமூக வலைதளங்கள் மூலமும் தீவிரமாக பிரபலப்படுத்துகின்றனர்.

விக்ரம் தன்னுடைய ட்விட்டர் பகுதியில் இருந்த பெயரை ஆதித்த கரிகாலன் என மாற்றியுள்ளார். அதேபோல் 55 லட்சம் Follower-களை கொண்ட த்ரிஷா தன்னுடைய பெயரை குந்தவை என பதிவிட்டுள்ளார். மேலும் Profile புகைப்படங்களையும் பொன்னியின் செல்வன் படத்தில் வரும் தங்கள் கதாபாத்திரதின் புகைப்படங்களை வைத்துள்ளனர்.

இதுதவிர டிவிட்டர் பதிவுகளை பொன்னியின் செல்வன் கதையோட்டத்துடன் கூடிய உரையாடல் பாணியில் நிகழ்த்துகின்றனர்.

இந்தப் படத்தில் ஆதித்த கரிகாலன் விக்ரமின் நண்பன் வந்திய தேவனாக கார்த்தி நடித்துள்ளார். அதேபோல் தங்கை குந்தவையாக த்ரிஷாவும், தம்பி அருண்மொழியாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர்.

நடிகர் விக்ரம், “சரி. தஞ்சைக்கு வருகிறேன். எட்டித்திக்கும் புலிக்கொடி திரைப்பயணம் தொடங்கும் முன், பெருவுடையார் ஆசி வேண்டுமல்லவா? குந்தவை உடன் வருகிறாயா? வந்திய தேவன் வருவான். என்ன நண்பா, வருவாய்தானே? அப்படியே அந்த அருண்மொழியையும் இழுத்து வா!” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.

விக்ரமின் பதிவுக்கு பதிலளித்து வந்திய தேவன் கார்த்தி பதிவிட்டுள்ளார். அதில், “இளவரசே உங்களுக்காக தஞ்சை முதல் லங்கை வரை சென்ற களைப்பே இன்னும் போகவில்லை. As I am suffering from fever I want work from home. வீடியோ காலில் இளவரசியிடம் பேசி sorry சொல்லி விடுகிறேன். Pls excuse me” என கூறியுள்ளார்.

அதை தொடர்ந்து விக்ரம் தன் பதிவில் சில போர்களை தனியாகதான் வெல்ல வேண்டும் என கூறியுள்ளார். இதை தொடர்ந்து அவர்களின் பதிவுகள் அடுத்தடுத்து சுவாரஸ்யமாக வருகிறது.

இவர்களின் உரையாடல்களால் அடுத்து என்ன என்று ரசிகர்கள் குஷியாகிவிட்டனர் . இவை அனைத்தும், டிவிட்டர் உரையாடலாக இருந்தாலும், படத்தின் கதை தன்மையிலும், கதாபாத்திரங்களின் பின்னோட்டத்துடனுமே இருக்கிறது.

இந்த வகையிலான புரமோஷனுக்கு முதல் அடித்தளமிட்டவர் கார்த்தி. குந்தவை கதாபாத்திரத்தை அறிமுகம் செய்த அன்று, நடிகர் கார்த்தி “இளவரசி..
Please send me live location,
உங்கள் அண்ணனின் ஓலையை drop off பண்ணனும்!” என பதிவிட்டார். அதற்கு த்ரிஷா, “Sorry அரண்மனையில் smart phones and smart people not allowed” என பதிலளித்தார்.

இவர்களின் இந்த இரண்டு பதிவுகளும் பொன்னியின் செல்வன் படத்தை சமூக வலைதளங்களில் பிரபலப்படுத்த அடிதளமாக அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதள புரமோஷன் தவிர, சென்னை, கேரளா, கர்நாடகா, ஐதராபாத், கொல்கத்தா, மும்பை, டெல்லி, துபாய் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகமாக்குகின்றனர். எங்கு சென்றாலும், செப் 30 ரிலீஸ் அன்று சென்னையில் தான் இருப்போம் என்று அனைவரும் கூறியுள்ளனர்.