‘ஜாக்சன் துரை ‘ விமர்சனம்

jacson1அயன்புரம் என்ற கிராமத்தில் பேயால் ஊர் மக்கள் அவதிப்படுகிறார்கள். போலீசுக்குப் புகார் வருகிறது. விசாரிக்க சென்னையில்  எஸ்.ஐ.ஆக பணிபுரிந்து வருகிற சிபிராஜ்  அங்கே அனுப்பப்படுகிறார். சிபியும் இந்த வழக்கை விசாரிக்க அந்த கிராமத்திற்குச் செல்கிறார்.

கிராமத்தில் ஊர்த் தலைவராக உள்ள  சண்முக சுந்தரத்தின் மகளான பிந்து மாதவியைப் பார்க்கிறார். பார்த்தவுடனே இவர் மேல் காதல் வயப்படுகிறார். அவரைப்பற்றி விசாரித்தால் அவர் இறந்து பல ஆண்டுகள் ஆகிறது எனக் கேள்விப்பட்டு அதிர்கிறார்.ஆனால் அது உண்மையல்ல எனத்தெரிகிறது.

யோகி பாபுவின் ஆலோசனை படி, பிந்து மாதவியை திருமணம் செய்ய சண்முக சுந்தரத்திடமே பெண் கேட்கிறார். அதே சமயம், பிந்து மாதவியின் தாய்மாமன் கருணாகரனும் பிந்து மாதவியை ‘நான் தான் திருமணம் செய்வேன்’ என்று கேட்கிறார்.

இரண்டு பேரும் ஒரே சமயத்தில் பெண் கேட்பதால், அந்த ஊரில் இருக்கும் பேய் பங்களாவில் 7 நாட்கள் தங்குபவருக்கே தன் பெண்ணைத் திருமணம் செய்து தருவதாக சண்முக சுந்தரம் கூறுகிறார். பிந்து மாதவியை திருமணம் செய்யும் ஆசையில் சிபிராஜும், கருணாகரனும் அந்தப் பயங்கர  பங்களாவிற்குள் செல்கிறார்கள்.

இறுதியில் பேய் பங்களாவில் என்ன நடந்தது? இருவரில் யார் பிந்து மாதவியை திருமணம் செய்து கொண்டார்கள்? ஊரே பயப்படும் அந்த பங்களாவில் இருப்பது யார்? அதன் ரகசியம் என்ன என்பதே படத்தின் மீதிக்கதை.

சிபிராஜ்  உதார் விடும் எஸ்.ஐ. கதாபாத்திரத்துக்கு சரியாகப் பொருந்துகிறார் . முந்தைய படங்களில் விட இந்த படத்தில் முன்னேற்றமான  வெளிப்படுத்தி இருக்கிறார். பயம், காதல் என்று உணர்வுகளில் சரியாக முகபாவம் காட்டியுள்ளார். வழக்கமான கதாநாயகி போல் வந்தாலும், ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் பிந்து மாதவி கண்களாலேயே  மிரட்டி உருட்டி மிரள வைக்கிறார்.

படத்தின்  மறுபாதியில் பேய் வேடத்தில் வரும் சத்யராஜின் நடிப்பு படத்திற்குப் பலம். ஆனால், சத்யராஜின் வழக்கமான  கலகலப்பு காட்சிகள் இல்லாதது குறை.. பிந்து மாதவியை திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசையும், சிபிராஜுடன் பங்களாவிற்கு செல்லும் காட்சிகளிலும் கருணாகரன் தன்னுடைய அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மொட்டை ராஜேந்திரன், யோகிபாபு ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.
jd1பேய் பங்களா மற்றும்  பற்றிய ப்ளாஷ் பேக் காட்சிகளில் கலை இயக்குநர் தெரிகிறார்.

பேய் படங்கள் சீசனில்  இந்த பேய்ப் படத்தை இயக்கி இருக்கிறார் தரணி தரன். வலிமையான நகைச்சுவை நடிகர்களை வைத்துக் கொண்டு படத்தில் காமெடிக்கு பஞ்சம் ஏற்படுத்தி இருக்கிறார். முதல் பாதியில் உள்ள காமெடி காட்சிகள் கைகொடுத்தாலும்  இரண்டாவது பாதியில் ஜாக்சன் துரை பற்றிய ப்ளாஷ் பேக் காட்சிகளில் காட்சிப் பொருத்தம் இல்லாததால் பெரியதாக எடுபடவில்லை.

நீளமான இழுவையான காட்சிகள் நெளிய வைக்கின்றன.வழக்கமான பேய் என்றாலும் அதிலும் சிறிது காமெடி கலந்து வித்தியாசமான முறையில் கொடுத்திருக்கிறார் இயக்குநர். இரண்டு மூன்று லொக்கேசன்களை வைத்து முழுப்படத்தை  திறமையாக முடித்துள்ளார் இயக்குநர்.

யுவாவின் ஒளிப்பதிவு குறையில்லாத பணி.  சித்தார்த் விபினின் இசையும் படத்திற்குப் பக்க பலம் . குறிப்பாக ஆரம்பத்தில் வரும் மோட்டார் பாடல் சரியான கமர்ஷியல் கலக்கல்.

மொத்தத்தில் ‘ஜாக்சன் துரை’ இலக்கு  நகைச்சுவை  வரை!