‘ஜோக்கர்’ திரைப்படத்தை பாராட்டும் அரசியல்வாதிகள்!

jokerஜோக்கர் திரைப்படத்தை பார்த்த பின் தி.க தலைவர்   கி. வீரமணி அவர்கள் பேசியது :-

”திரைப்படங்களுக்கு அதிகமாக செல்லாத ஒருவன் இந்த திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்று விரும்பி ஜோக்கர் குழுவின் அன்பு அழைப்பை ஏற்று பார்த்த நேரத்தில் இது போன்ற ஒரு சமூதாய யதார்த்தத்தை அப்படியே சமூதாய எக்ஸ்ரே வாக எடுத்து காட்டி மிகப்பெரிய ஒரு அறிவு புரட்சியை அமைதி புரட்சியை , பசுமை புரட்சியை இந்த திரைப்படம் ஒரு காவியமாக ஆக்கி இருக்கிறது இது வெறும் படமல்ல சமூதாயத்துக்கும் பல்வேறு நிலைகளில் இருக்க கூடியவர்களுக்கும் ஒரு பாடம். இந்த பாடத்தை சரியாக படித்தால் நிச்சயமாக புதியதொரு சமூதாயத்தை தோற்றுவிக்கலாம்.

அதற்காக சிறப்பாக இதை எழுத்து இயக்கம் செய்த இளைஞர் ராஜு முருகன் மிகப்பெரிய அளவுக்கு சிறப்பாக செய்திருக்கிறார். தனியே இப்படத்திற்கு ஒரு பாராட்டு விழா எங்களால் நடத்தப்படும்.”

ஜோக்கர் திரைப்படத்தை பற்றி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  தலைவர்  நல்ல கண்ணு அவர்கள் பேசியது :-

”இந்திய நாட்டினுடைய எல்லா துயரத்தையும் , மக்கள் படும் துயரத்தையும் அப்படியே படம் பிடித்து காட்டியுள்ளார் இயக்குநர். வெறும் படமாக அல்லாமல் பார்க்கிறவர்கள் அந்த துயரத்தை உணரவைத்து சிந்திக்க வைக்கக்கூடிய ஒரு படைப்பாக இருக்கிறது. இது போன்ற படங்கள் மக்களை சிந்திக்கத் தூண்டும் இதைப் போன்ற படங்கள் தொடர்ந்து வரவேண்டும். இப்படத்தை இயக்கிய ராஜு முருகனுக்கும் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.”

ஜோக்கர் திரைப்படத்தை பற்றி மே 17 இயக்க தலைவர்  முருகன் பேசியது :- ”சிறந்த அரசியல் படம் ஒன்று வந்திருக்கிறது இது கல்வியில் இருந்து நாம் வாழும் வாழ்க்கை முறை வரை எல்லாவற்றையும் விரிவாக பேசியுள்ளது. தமிழ்நாட்டில் அரசியல் என்பது பலதளங்களில் பேசி ரொம்ப காலம் ஆகின்றது. குறைந்த பட்சம் 40 வருடங்களில் தீவிர அரசியல் விவாதம் என்பது இங்கு இல்லவே இல்லை. இன்னும் சொல்வதென்றால் திரைப்படங்களில் இதை போன்ற ஒரு போக்கு நின்று போய் ரொம்ப காலம் ஆகின்றது. 7வது மனிதன் போன்ற படமெல்லாம் வந்து ரொம்ப காலம் ஆக கூடிய ஒரு சமயத்தில் அரசியல் விவாதம் என்பது ஒரு திரைப்படத்தின் மூலம் வருவது நன்றாக இருக்கிறது. தமிழர்களின் வாழ்வில் அரசியலும் , திரைப்படமும் முக்கியமான இடம் பிடித்துள்ள இரண்டு போக்குகள். திரைப்படங்களில் அரசியல் இல்லாத ஒரு குறையை இதை போன்ற சில படங்கள் வெளிவந்து நீக்கிகொண்டு இருக்கிறது. ஜோக்கர் படத்தின் வருகை ஒரு ஆரோக்கியமான விஷயமாகும்.

இப்படம் அரசியல் தளத்தில் செயல்படக்கூடிய ,ஈடுபாடுடையை சிலருக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இப்படம் வந்துள்ளது. திரைப்படத்தின் மூலம் அரசியலை கொண்டு வர வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு இது உற்சாகத்தை அளிக்கும் ஒரு படமாக இருக்கும். எங்களுக்கு இது மிகப்பெரிய உற்சாகத்தை அளித்துள்ளது.”

ஜோக்கர் படத்தை பற்றி இயக்குநர் லிங்குசாமி பேசியது :-” நான் ஜோக்கர் படத்தின் போஸ்டரை முதன்முறையாக பார்த்தபோது சின்னதொரு Toilet-ன் பிளாட்பாரம் அருகே குரு சோமசுந்தரம் இருக்கும் அந்த ஸ்டில்லை மட்டும் தான் பார்த்தேன். இதெல்லாம் ஒரு போஸ்டராக எதற்காக பீல் பண்ணி இருக்கிறார். இதை போன்ற ஒரு போஸ்டரை ஏன் போட வேண்டும் வேறு ஏதாவது ஒரு டிசைன் பண்ணி இருக்கலாமே இதை ஏன் ?? அவர் போஸ்டராக வைக்க வேண்டும் என்று நான் நினைத்தேன்.

படம் பார்த்து முடித்த பிறகு இப்படி ஒரு படத்தை எடுக்க முடியுமா ?? இப்படி ஒரு கதை யோசிக்க முடியுமா ??என்பதை எல்லாம் தூக்கி போட்டு விட்டு எந்த ஒரு Formulaவிலும் சிக்காமல் ரொம்ப ஒரு முக்கியமான ஒரு படமாக இப்படத்தை என்னை பார்க்கவைத்துவிட்டார். என்னுடைய உதவி இயக்குநராக இருந்து அவர் என்னிடம் எதையும் கற்றுக்கொள்ளவில்லை. அவர் கற்றுக்கொண்ட இடம் வேறு அவர் சொல்ல வரும் விஷயம் வேறு. இப்படம் முழுமையாக புதுமையான ஒரு படைப்பாகும் , மிகவும் தைரியமான ஒரு படைப்பாகும் நான் தான் அவரிடம் இருந்து கற்று கொண்டுள்ளேன்.

அவர் என்னுடைய உதவி இயக்குநராக இருந்தது எனக்கு பெருமை. ஜோக்கர் மிக முக்கியமான ஒரு பதிவு. இப்படத்தை தைரியமாக தயாரித்த பிரபுவுக்கும் பிரகாசுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இது தான் ராஜு முருகனின் சரியான படம். இதை செய்வதற்கு அவருக்கு மிகப்பெரிய துணிச்சல் வேண்டும்.இந்த படம் நிச்சயம் இந்தியாவில் உள்ள மிக முக்கியமான மொழிகளில் மொழி பெயர்ப்பாகி போகும் என்று நான் நம்புகிறேன். அடுத்த கட்டமாக அமீர் கான் வரை இப்படத்தை பார்த்துவிட்டு படத்தை அங்கே எடுக்கலாம் என்ற நம்பிக்கை உள்ளது. இது வரை இதை போன்ற ஒரு படத்தை தமிழ் சினிமாவில் பார்க்கவில்லை என்று வார்த்தைக்காக பலதடவை கூறியுள்ளோம் இந்த படம் தான் அந்த படம்.

படத்தை பற்றி இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி  ஜி.ராம கிருஷ்ணன்  பேசியது :-

ஆட்சியாளர்களால் சமூகத்தில் ஏற்ப்படக்கூடிய அவலங்களை சரியாக படம்பிடித்து காட்டி இந்த அவலங்களுக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் கிளர்ந்தெழ வேண்டும் என இந்த படம் மூலமாக கலை இலக்கியம் மூலமாக மக்களுக்கு சொல்லப்படுகிறது. இந்த படத்தின் கிளைமாக்ஸ் எப்படி இருக்கும் என நாம் கணிக்க முடியாத அளவுக்கு படம் நன்றாக வந்துள்ளது. ஒரே விதத்தில் திரைப்படங்கள் வரக்கூடிய இன்றைய சூழலில் இத்தககைய சரியான கருத்தை சொல்ல கூடிய படம் என்பது பாராட்டுக்குரியது வழ்த்துக்குரியது. இந்த நாட்டு மக்களை நிச்சயமாக தட்டி எழுப்பும் அவர்களை சுய சிந்தனை உள்ள மனிதர்களாக மாற்றும் என நான் உறுதியாக நம்புகிறேன். இந்த நாட்டை ஆண்டு கொண்டிருப்பவர்களை பற்றி அம்பலபடுத்தும் ஒரு அற்புதமான திரைப்படம். இதை ஆக்கி இருக்க கூடிய அனைவருக்கும் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக இதயபூர்வமாக வாழ்த்துகிறேன். இந்த படம் வெற்றியடையட்டும் உலகம் முழுவதும் திரையிடப்படட்டும். இந்த நாடு எப்படி இருக்கிறது என்பதை இந்த உலகம் பார்க்கட்டும்.