டாப்ஸிக்கு ஆங்கிலக் குரல் கொடுத்த நடிகை பிரியாலால் : ‘அன்னா பெல்லே சேதுபதி’

விஜய் சேதுபதி, டாப்ஸி நடித்த “அன்னா பெல்லே சேதுபதி” ஒ டி டி பிளாட்ஃபாமில் வெளியானது. படத்தில், வெளிநாட்டு பெண் வேடம் ஏற்று நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார், டாப்சி. அதிலும், ஆங்கில உச்சரிப்பில் டாப்சி பேசும் அழகு அந்த கதாபாத்திரத்திற்கு மேலும் உயிரூட்டியது. அந்த குரலுக்கு உயிரூட்டியவர், தென்னிந்திய நடிகை பிரியா லால்.
ஆம், சுசீந்திரன் இயக்கிய ஜீனியஸ் மற்றும் தெலுங்கில் ராம் கோபால் வர்மாவின் உதவியாளர் மோகன் இயக்கிய ” குவா கோரின்கா “(Love Birds) ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்த அதே பிரியாலால் தான் டாப்சிக்கு ஆங்கிலத்தில் குரல் கொடுத்துள்ளார்.


இந்த கதா பாத்திரத்திற்காக பல நடிகைகள் மற்றும் டப்பிங் கலைஞர்களை வரவழைத்து டப்பிங் செய்து பார்த்தனர் . ஆனால் எந்த குரலும் பிரிட்டிஷ் பாணியில் உச்சரிப்புடன் கதாபாத்திரத்திற்கு பொருந்தவில்லை. அந்த வேளையில் தான் வெளிநாட்டு பெண்ணான பிரியலால் குறித்தும் அவரது குரல் வளம் மற்றும் துல்லியமான ஆங்கில உச்சரிப்பு பற்றியும் தெரியவந்தது. ஆனால் தமிழ் -தெலுங்கு பாடங்களில் ஹீரோயினாக நடித்து வரும் அவர் டப்பிங் பேச சம்மதிப்பாரா என்ற சந்தேகம் பட குழுவினருக்கு. இருந்தாலும் படத்தின் தன்மை உணர்ந்து பட குழுவினரின் வேண்டுகோளுக்கு இணங்கி பிரியாலால் குரல் கொடுக்க ஒப்பு குரல் கொடுத்துள்ளார்.


பிரியாவின் குரல், அவ்வளவு துல்லியமாக பிரிட்டிஷ் பாணியில் பேசி அசத்தியதை படத்தின் இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் மற்றும் அனைவரும் பாராட்டினார்கள். இப்பொழுது ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.

துபாயிலுள்ள ராசல் கைமாவில் பிறந்து லண்டனில் படித்து வளர்ந்த பிரியா லாலுக்கு நடிப்பும் நடனமும் தான் உயிர் மூச்சு. தமிழ் , மலையாளம், தெலுங்கு படங்களில் ஹீரோயினாக நடித்து தன் திறமையை வெளிப்படுத்திய பிரியா லால், ஹீரோயினாக நடிக்கும் தனது அடுத்த படத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார். நடிப்புன் மீது இருக்கும் ஆர்வத்தால் தமிழில் சொந்த குரலில் பேசி நடிப்பதற்காக தமிழ் மொழியும் கற்று கொண்டுள்ளார். லண்டன் வாசியாக இருந்த பிரியாலால் கொச்சியில் தங்கி கொண்டு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.