தமிழர்களின் தலைநிமிர்வு ஜெயகாந்தன் : இளையராஜா புகழாரம்

jk-ilayaraja கம்பீர எழுத்தாளர் ஜெயகாந்தன்  மறைவையொட்டி இளையராஜா வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

”நான் அண்ணன் பாஸ்கர், பாரதிராஜாவோடு முதன் முதலாக சென்னைக்கு வந்தபோது நாங்கள் போய் நின்ற இடம் ஜெயகாந்தனின் வீடுதான் “நாங்கள் உங்களை நம்பிதான் வந்திருக்கிறோம் என்று சொன்ன போது “ என்னை நம்பி எப்படி நீங்கள் வரலாம்” என்று கேட்டு எனக்குள் நம்பிக்கை விதையை விதைத்தவர் ஜெயகாந்தன்.

தன்னுடைய எழுத்துக்கள் மூலம் எளிய மனிதர்களின் குரலை ஒலிக்கச்செய்தவர். தமிழ் எழுத்துலகில் மட்டுமில்லாமல் திரையுலகிலும் தன்னுடைய அடையாளத்தை பதித்தவர் ஜேகே.

தமிழ் எழுத்துலகின் புத்தெழுச்சிக்கு பெரிதும் காரணமாக இருந்தார். புதிய படைப்பாளிகளின் கலங்கரை விளக்கமாகவும் திகழ்ந்தார். தற்கால தமிழ் இலக்கியத்திற்கும், தமிழர்களுக்கும் அவர் செய்த தொண்டு மறக்க முடியாதது. தமிழர்களின் தலை நிமிர்வு ஜெயகாந்தன். அவர் என்றென்றும் தமிழர்களின் நெஞ்சத்தில் நீங்காமல் நிலைத்து நிற்பார்.

ஜெயகாந்தன் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இன்று மாலை திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றுகிறேன்” என்று இளையராஜா கூறியுள்ளார்.