தமிழினத்தின் மீது பழியா ? புலன் பெயர்ந்த சேரனுக்கு…. புலம் பெயர்ந்த தமிழனின் கோபம் !-நார்வேயிலிருந்து ஒரு கோபக்குரல்!

IMG_7361இலங்கைத் தமிழர்கள்தான் திருட்டு விசிடிக்கு துணைபோகிறார்கள்; இலங்கை தமிழர்களுக்காக போராடியதை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது என்று நேற்று  சேரன்’ கன்னாபின்னா’ படவிழாவில் பேசியதற்கு நார்வேயிலிருந்து புலம் பெயர்ந்த தமிழனிடமிருந்து வந்துள்ள ‘புலன் பெயர்ந்த சேரனுக்கு…. புலம் பெயர்ந்த தமிழனின் கோபம்’  என்கிற  கோப மடல் இதோ!இதை எழுதியுள்ள வசீகரன் என்பவர் நார்வேயில் சர்வதேச திரைப்படவிழாக்கள் நடத்தி தமிழ்த் திரையுலகினரை ஊக்கப்படுத்தி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

vasee1புலன் பெயர்ந்த சேரனுக்கு…. புலம் பெயர்ந்த தமிழனின் கோபம்!

சேரன் வாயில வந்தா
என்னவும் பேசுவீங்களா ?
என்ன பேச்சுப் பேசுறீங்கள்
எப்படி இப்படிப் பேசுவீங்கள் ?

அறுவது வருடப்  போரை
அடுத்த தலைமுறையும்
சுமக்கிற இனத்தை பார்த்து
என்ன சொல்லுறீங்கள் ?

இங்க குருதி வலியோட
வாழுற  எங்களுக்கு
உங்களுக்கு பொங்குற அதே உணர்வு
நல்லா பொங்கும் சார்!

பொது மேடையில
தமிழினத்தின் மீது பழியா !
என்னது எங்களுக்காக
போராடியது உங்களுக்கு அருவருப்பா ?!

என்ன நூறு வருசமா
நீங்கள் போராடினீங்களா ?
கேள்வி கேட்க ஆளில்லாம
பேசுறீங்கள் ரெம்ப பேசுறீங்கள்!

என்னங்க சார் உங்க நியாயம் ?
உங்க மீது வைச்சிருந்த
மதிப்புக்கு நீங்களே
செருப்பால அடிக்கிறீங்களே !

உங்கள் சுய சிந்தனை
கழிவுகளை கொட்டிட
எங்கள் மக்கள் மனசு
குப்பைத் தொட்டியில்லை சார் !

பத்து வருசத்துக்கு மேல
நல்லா தான் படம் எடுத்தீங்க
உங்கள் மேல மரியாதையும்
இருந்திச்சு இன்னும் இருக்கு சார்!

எட்டு  கோடி தமிழரை
எட்டி வெட்டி பிரியாதையுங்கோ
திட்டம் போட்டு திருடுற  கூட்டம்
திருடிக் கொண்டே இருக்கும் சார்!

தமிழ்நாட்டில 18 ஆயிரம்
திருட்டு விசிடி கடைகளா?
எல்லாத்தையும் முதல கொளுத்துங்க
தமிழ் சினிமா வாழும் சார்!

நெட்டில திருட்டுத்தனமா
படம் காட்டுறவன்  எல்லாம்
ஈழத்தமிழனா ?
எதை வைச்சு சொல்லுறீங்க சார்!

நீங்கள் ஒன்றுசேர்ந்து
குரல் கொடுத்ததா சொன்னீங்களே
அப்ப அது  வியாபார நோக்கமா ?
அவ்வளவு தான் உங்க உணர்வா?

ஒரு கருத்து சொல்ல முதல்
புதுசா யோசியுங்கோ சார் !
ஒன்லைன் விலாசத்தை பிடியுங்கோ
உங்க அருவருப்பை கொட்டுங்க சார்!

உலகம் முழுவதும் தமிழ் சினிமாவுக்கு
விளம்பரம் செய்யிறவன்
வியாபாரம் செய்யிறவன்
விருதும் கொடுக்கிறவன்
அதே ஈழத்தமிழன் தான்!

ஒன்று சொல்ல மறந்திட்டேன்
படம் பிடிச்சா படம் நல்லா இருந்தா
‘கபாலி’ படத்தையும்  மூவாயிரம் பேர்
நோர்வேயில திரையில பார்ப்பினம் சார்!

உங்கள் திரைப்படங்களை
உங்கள் விழிப்புணர்வுகளை
உங்களை எண்ணங்களை மதிச்சு
உங்களுக்கு மதிப்பளித்தவனின் கோபம்!

-வசீகரன்