தயாரிப்பாளர்களை அசிங்கப்படுத்துவதா? இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுக்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கண்டனம்

karthiksubbaraj4தயாரிப்பாளர்களை அசிங்கப்படுத்துவதா?  என்று இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுக்கு தயாரிப்பாளர்  சுரேஷ் காமாட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது முகநூலில் கார்த்திக் சுப்பராஜுக்கு பதிவிட்டுள்ள விவரம் வருமாறு:

‘இறைவி பார்த்தேன். படம் நன்றாக இருந்தது. எஸ் ஜே சூர்யாவின் நடிப்புக்கு ஒரு பூங்கொத்து.
சிறிய வயதிலேயே இயக்குநராகும் அதுவும் தயாரிப்பாளர் ஒருவர் மனது வைத்ததால் இயக்குநராகும் பாக்கியம்பெற்றவர் கார்த்திக் சுப்புராஜ். அதுவும் மூன்றாவது படத்திலேயே முக்கியத்துவம் பெற்றுவிட்ட இயக்குநராவது எவ்வளவு பெரிய கொடுப்பினை??

suresh-kamatchirs-305x175ஆனால் இதுக்கெல்லாம் காரணமான தயாரிப்பாளர் என்கிற ஒரு இனத்தை விஜி முருகன் என்பவரின் கதாபாத்திரத்தின் மூலம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தியுள்ளீர்கள்.

இதுக்கு முன்னாடி நான் என்ன பண்ணிக்கிட்டிருந்தேன்னு தெரியுமான்னு கேக்கிறதில் ஆரம்பித்து அவரின் கடைசி நிமிசம்வரை தயாரிப்பாளர் என்பவன் ஒரு கேவலமானவன் எந்த எல்லைக்கும் போவான். அவனால் ஒரு இயக்குநரோ படைப்பாளியோ அவன் குடும்பமோ வெகு சாதாரணமாக நசுக்கப்படும் என அடுக்கடுக்காக சேற்றை வாரியிரைத்துள்ளீர்கள்.

தயாரிப்பாளன் என்பவனுக்கு கதை ஞானமே கிடையாது என்பதைப் போன்ற எண்ணத்தை பார்ப்பவர்கள் மனதில் நன்றாகவே நஞ்சாகக் கலக்க முடிந்திருக்கிறது உங்களால் கா.சு.

கொலைகாரனாகவும் மாறுவான். எடுத்துவைத்த படத்தை வேறொருவனை வைத்து புதுப்படமாக கொண்டுவரும் ஈனத்தனத்தையும் செய்வான் என்றெல்லாம் பெருமைப்படுத்தி விட்டீர்கள் கார்த்திக்.
இந்த படத்தைப் பார்த்தவனிடம் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் கைகுலுக்கையில் நான் ஒரு தயாரிப்பாளர் என அறிமுகப்படுத்த நேருமானால் அவனின் என்மீதான மரியாதைக்குரிய எண்ணம் என்னவாக இருக்கும்??சொல்லுங்கள்.

எவனோ ஒருவன் உயிரைச் சிந்தி காசு எடுத்துட்டு வருவான். அவன் காசில் படமெடுத்துவிட்டு அவனையே காறி உமிழ்வது போன்ற காரியத்தை எப்படி செய்ய முடிந்தது உங்களால்??

இத்தகைய காட்சிகளையும் வசனங்களையும் வைக்க உங்களின் தயாரிப்பாளர்கள் எப்படி சம்மதித்தார்கள்??

ஏவிஎம் சரவணன் சார் மாதிரி பெரியவர்கள் இப்படத்தைப் பார்த்தால் எப்படி நொந்து போவார்கள்??

தயாரிப்பாளர்களுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தியதை ஒரு தயாரிப்பாளனாக வன்மையாகக் கண்டிக்கிறேன். எத்தனையோ பெரும் படைப்பாளிகளைக் கொண்டது இந்த இயக்குநர் சமூகம். அவர்கள் தயாரிப்பாளர்களை எப்படி மதித்து வந்திருக்கிறார்கள், இன்னமும் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை மனதில் கொண்டு இயங்குங்கள்.

இன்றைய சூழலில் கதை சொன்னவர்களை நம்பி பணம்போட்டு மீண்டும் வாழ்க்கையின் அடித்தட்டுக்கே வந்துவிட்ட தயாரிப்பாளர்கள் எத்தனை பேர் தெரியுமா?? ஆனால் ஒரு தயாரிப்பாளரால் கிடப்பில் போடப்பட்ட படம் அல்லது நடுத்தெருவுக்கு வந்த இயக்குநர்களைச் சொல்லுங்கள் பார்ப்போம்??

காட்சிப்படுத்துதல் முக்கியம் என்பதைவிடவும் காயப்படுத்துதல் கூடாது என்பதில் கவனமாக இருங்கள் கார்த்திக். அடுத்த படத்திற்கும் இன்னொரு தயாரிப்பாளரைத் தேடித்தான் போவீர்கள்.. என்பதுதான் இதில் மிகப்பெரிய முரண்.
போங்க. படம் பண்ணுங்க. ஆனால் கண்ணாடி வீட்டுக்குள்ளயிருந்து கல்லெறியாதீங்க. நல்லதல்ல!

அது சரி அதென்ன தமிழ் தமிழ்னு சொன்னவங்களுக்கு சரியான செருப்படின்னு வசனம்?? தமிழ்நாட்டுல தமிழை வைத்து வசனமெழுதி வாழ்ந்துட்டு தமிழ் தமிழ்னு சொல்றவங்களை செருப்பால அடிப்பீங்களோ?? படைப்பின் ஆக்கத்தை வைத்து வெகுஜன மக்களின் அடிப்படை போராட்டத்தை கிண்டல் செய்வதை அசிங்கப்படுத்துவதை இதோடு விட்டுவிடுங்கள்.’
இவ்வாறு தயாரிப்பாளர் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சுரேஷ் காமாட்சி  கூறியுள்ளார்.