தயாரிப்பாளர் சங்கத்திடம் கேள்வி கேட்பேன் பயமில்லை: விஷால்

vishal1தயாரிப்பாளர் சங்க தேர்தலில் எங்கள் சார்பாக ஒரு அணி போட்டியிடும் – நடிகர் விஷால் பேச்சு

ஊடகங்களிடம் விஷால் பேசினார். அவர் பேசும் போது,

“இப்போது தான் நான் கேள்விபட்டேன் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து என்னை நீக்கியதை. எனக்கு இது வியப்பளிக்கும் ஒரு விஷயமாக இருக்கிறது. எப்போதும் எந்த ஒரு சங்கத்தில் இருந்து கடிதம் அனுப்பும் போது முதலில் சம்பந்தபட்ட நபர்களுக்கு கடிதம் அனுப்பிவிட்டு தான் பின்னர் பத்திரிக்கையாளர்களுக்கு அனுப்புவார்கள். உறுப்பினர் பதவில் இருந்து நான் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது பத்திரிக்கை நண்பர்கள் மூலமாக தான் எனக்கு தெரியவந்தது. எனக்கு இப்போது வரை கடிதம் வரவில்லை.

போண்டா , பஜ்ஜி சாப்பிட்டு கொண்டு தயாரிப்பாளர் சங்கத்தினர் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் இருக்கிறார்கள் என்று நான் ஒரு வார இதழுக்கு பேட்டி அளித்துள்ளேன் என்று கூறுகிறார்கள். “ போண்டா , பஜ்ஜி “ என்பது கெட்ட வார்த்தையா ?? அது ஒரு தவறான உணவு இல்லை. நடிகர் சங்கத்தில் , எங்கள் படபிடிப்பில் நாங்கள் அதை தான் சாப்பிடுகிறோம். என்னை பொறுத்தவரை சின்ன தயாரிப்பாளர்கள் பெரிய தயாரிப்பாளர்கள் என்று இல்லை அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் நாங்கள் குரல் கொடுப்போம்.

தமிழ் திரையுலகம் எனக்கு சாப்பாடு போட்ட தெய்வம் , அதற்கு ஏதாவது தவறான விஷயம் நடந்தால் நான் நிச்சயம் குரல் கொடுப்பேன். கேள்வி கேட்பது தவறே இல்லை , எல்லா சங்கத்திலும் கேள்வி கேட்க முடியும் , கேள்வி கேட்டால் அதற்கு பதில் சொல்ல வேண்டும். நான் இப்போது என்னை எதற்காக நீக்கி இருக்கிறார்கள் என்ற காரணம் தெரியாமலேயே பேசி கொண்டு இருக்கிறேன். நான் இதை நிச்சயம் எதிர்கொள்வேன். இதற்கு சட்ட ரீதியான விஷயம் என்ன என்பதை நான் என்னுடைய வழக்கறிஞரிடம் ஆலோசித்து முடிவெடுப்பேன்.

ஜனவரி தயாரிப்பாளர் சங்க தேர்தல் வரப்போகிறது , தயவு செய்து தேர்தலை நடத்த விடுங்கள். முறையாக அந்த தேர்தல் நடைபெற வேண்டும். எல்லோருக்கும் வெவ்வேறு பார்வை இருக்கும். எல்லோருடைய பார்வைக்கும் மதிப்பளித்து தேர்தலை நடத்தவிடுங்கள். இளைஞர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுவார்கள் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நிச்சயமாக இந்த தயாரிப்பாளர் சங்க தேர்தலில் எங்கள் சார்பாக ஒரு அணி போட்டியிடும். அந்த மிகுந்த துடிப்புடன் போட்டியிடும்.

என்னைப் பொறுத்த வரை விஷாலுக்கும் தாணு அண்ணனுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை , விஷாலுக்கு தாணு அண்ணனிடம் சில கேள்விகள் இருக்கின்றன. நான் நடிகர் சங்கப் பொதுச் செயலாளராக வருவதற்கு முன்னர் கேள்வி கேட்டுள்ளேன் , இப்போது நான் பதவிக்கு வந்த பிறகு எல்லோரும் என்னிடம் கேள்வி கேட்கிறார்கள். பதில் சொல்ல வேண்டியது எனக்கு கட்டாயம் , அதே போல் அது என்னுடைய பொறுப்பு. அதே போல் தான் நானும் கேள்வி கேட்கிறேன். அவர்களுக்கு நான் எதிரி இல்லை , நான் ஜனநாயக முறையில் அவர்களிடம் கேள்வி கேட்டேன். எனக்கு பயமில்லை , கேள்வி கேட்கவும் பயமில்லை.

கேள்வி கேட்டால் பதில் வரவில்லை என்னும் பட்சத்தில் தேர்தலில் நிற்கவும் எனக்கு பயமில்லை. விஷால் என்ற தயாரிப்பாளருக்கே இந்த கதி என்றால் , சின்ன தயாரிப்பாளர்கள் எல்லாம் கேள்வியே கேட்க கூடாதா ?

விஷாலுக்கு இந்த முடிவு எடுத்திருக்கும் நீங்கள் , இதே முடிவை கருணாஸுக்கு எடுக்க முடியுமா ?? நிச்சயமாக எதிர் அணி என்பது இருக்கிறது வருகிற ஜனவரி மாதம் நடக்கவுள்ள தேர்தலில் அந்த அணி போட்டியிடும்.அந்த அணிக்கு நான் முழு ஆதரவு கொடுக்கிறேன். திருட்டு வி.சி.டி எங்கு பிடிபட்டாலும் என்னை தான் எல்லோரும் டேக் செய்கிறார்கள். தயாரிப்பாளர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் நான் நிற்பேன்.என்னை பொறுத்தவரை நான் முன்னரே கூறியது போல நான் யார்க்கும் எதிரான ஆள் இல்லை.நாம் அனைவரும் இனைந்து தயாரிப்பாளர்களின் நலனுக்காக பாடுபடுவோம்” என்றார் நடிகர் விஷால்.