‘திருட்டுப்பயலே 2’ விமர்சனம்

இணையம் வழியே உள்ளம் நுழைந்து இல்லம் கெடுத்துக் குடும்பம் குலைக்கும்  நவீன சமூக அவலம் பற்றிய கதைதான் ‘திருட்டுப்பயலே 2’ .

ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில், சுசி கணேசன் இயக்கத்தில் பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலா பால், நடித்துள்ள படம்.

பாபி சிம்ஹா ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி. அதனாலேயே பலமுறை டிரான்ஸ்பராகிறார். அப்படி ஒரு டிரான்ஸ்பரின் போது அமலா பாலை காதலித்து திருமணம் செய்து கொள்பவர், தனது காதல் மனைவியுடன் வாழ அரசு கொடுக்கும் சம்பளம் போதவில்லை.  பணத்துக்காகத் தடுமாறுகிறார். 

நேர்மையாக இருந்தால் எதுவும் செய்ய முடியாது, என எண்ணுகிறார். இதற்கிடையே தனது மேல் அதிகாரியின் ஆணையின் பேரில் பெரிய மனிதர்களில்

 தனிப்பட்ட போன்  உரையாடல்களை ஒட்டுக் கேட்கும் பாபி சிம்ஹா, அமைச்சர் எம்.எஸ்.பாஸ்கரின் போனை ஒட்டுக்கேட் கிறார். அதன்மூலம்அவருக்கு கிடைக்க வேண்டிய லஞ்ச பணம் ரூ.10 கோடியைப்பறித்துவிடுகிறார். இப்படி தொடர்ந்து பலரின் பேச்சை ஒட்டுக் கேட்கும் பாபி, அவர்களிடம் இருந்து பணம் பிடுங்கி வருகிறார்.

எப்போதும் பேஸ்புக்கும், செல்போன் கையுமாக இருக்கும் அமலா பாலிடம் பேஸ்புக் மூலம் நட்பாக பழகுகிறார் பிரசன்னா. திருமணமான பெண்களை தனது பேச்சால் கவர்ந்து பிறகு அவர்களை அடைவதையே பிரசன்னா வேலையாக செய்பவர். அப்படிப்பட்ட அவரது பேச்சை பாபி சிம்ஹா ஒட்டுக் கேட்கிறார். அப்போது அந்த உரையாடலில்  அமலா பால்   குரல் கேட்க அதிர்ச்சியடையும் பாபி சிம்ஹா தொடர்ந்து பிரசன்னாவின் பேச்சை ஒட்டுக் கேட்டு அவரது நோக்கத்தை அறிகிறார். ஒருகட்டத்தில்  தனது போலீஸ் படையை வைத்து அவரை வெளுத்து வாங்குகிறார்.

பாபி சிம்ஹா செய்யும் ஏமாற்று வேலைகளை தெரிந்துக் கொள்ளும், பிரசன்னா, அதற்கான ஆதாரங்களைத் திரட்டி அவரது இன்னொரு முகத்தை காவல் துறைக்கு காட்ட  முயல்கிறார். அமலா பாலையும் அடைய நினைக்கிறார். அவரது முயற்சியில் வெற்றி பெற்றாரா இல்லையா, பிரசன்னாவிடம் இருந்து பாபி சிம்ஹாவும், அமலா பாலும் தப்பித்தார்களா இல்லையா என்பதே ‘திருட்டுப்பயலே 2’ படத்தின் மீதிக்கதை.

பாபி சிம்ஹா நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடிப்பில் கம்பீரத்தை காட்டியிருக்கிறார். தவறு செய்யும் போதும், மற்றவர்களின் பேச்சை ஒட்டு கேட்கும் போதும் எக்ஸ்பிரஷன்களில் அசத்துகிறார். பாபி சிம்ஹா , பிரசன்னா இவர்கள் இருவரும் போட்டிபோட்டு நடித்துள்ளனர்.

 குடும்ப பெண்ணாக நடித்திருக்கும் அமலா பால், பாடல் காட்சிகளில் கவர்ச்சியில் தாராளம் காட்டியிடுக்கிறார்.

தொழில்நுட்பங்கள் மூலம் வீட்டுக்குள் நுழையும் வில்லன்கள் குறித்து அலசியிருக்கும் இயக்குநர் சுசி கணேஷன், காவல்துறை பற்றி அடிக்கும் கமெண்டுகளும் ரசிக்கும்படி உள்ளது.நமது போன் ஒட்டுக்கேட்பதை அறியும் தகவலையும் கூறியுள்ளார். 

வித்யாசாகரின் இசையில் பாடல்கள் கேட்கும்படி உள்ளன. செல்லதுரையின் ஒளிப்பதிவில் காட்சிகள்   அழகு நிறைந்தவை.

மொத்தத்தில் படம் விழிப்பணர்வு என்கிற பெயரில் எடுக்கப்பட்டுள்ள கிளுகிளு படம் எனலாம்.