தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ‘நட்சத்திரக் கலைவிழா’ வருகிற 2018 ஜனவரி ‘ 6 -ல் மலேசியாவில் நடைபெறவுள்ளது !

வருகிற ஜனவரி 6 2018 அன்று மலேசியாவில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நட்சத்திர கலை விழா பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இவ்விழாவில் கலை நிகழ்ச்சி , நடனம் , நகைச்சுவை நிகழ்ச்சி மற்றும் புகழ்பெற்ற நடிகர்களின் பேச்சு என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இது தவிர ஆறு அணிகள் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது.

இந்தக் கிரிக்கெட் போட்டிக்கு வழக்கம் போல் சூர்யா , விஷால் , கார்த்தி , ஜெயம்ரவி , ஜீவா ஆகியோர் தலைமை தாங்குவார்கள். ரஜினி , கமல் உட்பட 100க்கும் மேற்பட்ட நடிகர் , நடிகைகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்வில் மலேசிய நடிகர்கள் பங்கேற்கும் FootBall போட்டி ஒன்றும் நடைபெறவுள்ளது. FootBall போட்டியில் மலேசிய நடிகர்கள் நமது தமிழ் சினிமா நட்சத்திரங்களுடன் மோதவுள்ளனர். எதிர்காலத்தில் மலேசிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தமிழ் படங்களில் பணியாற்ற வாய்ப்பு எற்படுத்தித்தரப்படும்.

இந்நிகழ்ச்சி மலேசிய அரசின் உதவி மற்றும் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெறவுள்ளது. சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் நட்சத்திர கலை விழா பற்றி அறிவிக்கப்பட்டது. பத்திரிகையாளர் சந்திப்பில் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் , நடிகர் சங்க நிர்வாகிகள் கார்த்தி , கருணாஸ் மற்றும் பூச்சி முருகன் , மனோபாலா , குட்டி பத்மினி , ரோகிணி , பசுபதி , ரமணா , நந்தா , உதயா , ஹேமசந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பை அறிவித்தார்கள்.

நடிகர் சங்க நிர்வாகிகள் மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்கை சந்தித்து நட்சத்திர விழாவில் கலந்து கொள்ள அழைப்புவிடுத்தனர். இவ்விழா மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்கின் தலைமையில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.இவ்விழா மலேசிய புக்கிஜாலி அரங்கில்   நடைபெறவுள்ளது. இதில் 80,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது.