தெலுங்கானாவின் கலாச்சார திருவிழாவின் பாடலுக்காக, ஏ ஆர் ரஹ்மான் – கௌதம் மேனன் கூட்டணி!

தெலுங்கானாவின் பதுக்கம்மா ( Bathukamma ) கலாச்சார திருவிழாவின் பாடலுக்காக, ஏ ஆர் ரஹ்மான் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணி இணைந்துள்ளது !

இந்திய திரையுலகின் மிகச்சிறந்த திறமையாளர்களாக விளங்கும், தமிழின் முன்னணி இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் ஆஸ்கர் விருது நாயகன், இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இருவரும் இணைந்து, தெலுங்கானாவின் கலாச்சார வண்ணத்திருவிழாவான பதுக்கம்மா ( Bathukamma ) விழாவுக்காக, ஒரு சிறப்பு பாடலை உருவாக்கியுள்ளனர். MLC K கவிதா வழிநடத்தும் Telangana Jagruthi இப்பாடலை தயாரித்துள்ளது. மிட்டபள்ளி சுரேந்தர் இப்பாடலை எழுதி, பாடியுள்ளார். இப்பாடல் அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய திரையுலகின் பல பெரும் பிரபலங்கள் இப்பாடலில் இணைந்துள்ளதால், இம்முறை பதுக்கம்மா ( Bathukamma ) விழா உலகளவில் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படவுள்ளது.

ஏ ஆர் ரஹ்மான் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவாகும் பாடல்கள், எப்போதும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று, உலகளவில் பம்பர் ஹிட்டாகி வருகிறது. இவர்களது கூட்டணியில் விண்ணைத் தாண்டி வருவாயா, Ye Maaya Chesavo, Ek Deewana Tha, அச்சம் என்பது மடமையடா, படங்கள் மிகப்பெரிய வெற்றிகளை குவித்துள்ளது. தற்போது இவர்களது கூட்டணியில் உருவாகி வரும், சிலம்பரசன் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள “வெந்து தணிந்தது காடு “ இப்போதே ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவில் கொண்டாடப்படும் ( Bathukamma ) திருவிழா, பெண்கள் பூக்களைக் கொண்டாடும், ஒரு துள்ளலான, வண்ணமயமான திருவிழாவாகும். பூக்களைக் கொண்டு கொண்டாடப்படுவதால் தெலுங்கானாவின் ஒவ்வொரு இடங்களிலும் வித்தியாசமான பூக்களைக் கொண்டு, இத்திருவிழா வண்ணக்கோலகலமாகக் கொண்டாடப்படுகிறது. இத்திருவிழா தெலுங்கனாவின் கலாச்சார பெருமையை வெளிப்படுத்தும் அம்சமாக, அனைவராலும் போற்றப்படும் விழாவாகும்.