நடிகர் ஆதியின் பெருந்தன்மையைப் பாராட்டும் படக்குழு!

12நல்ல படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுக்கும் முயற்சியில் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்து கடந்த வாரம் வெளியான படம் தான் ‘மரகத நாணயம்’. ஆதி, நிக்கி கல்ராணி, ஆனந்தராஜ், முண்டாசுப்பட்டி ராம்தாஸ், டேனி ஆகியோர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான இந்த படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் ஒருமித்த பாராட்டில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வாரம்  புதுப்படங்கள் வெளியாகி இருந்தாலும் அதே அளவு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது மரகத நாணயம். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.

“உறுமீன் படத்தை தொடர்ந்து நாங்கள் எடுக்கும் அடுத்த படம் வயது வரையறையின்றி அனைத்து மக்களாலும் ரசிக்கப்படுகிற படமாக இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தோம். அதற்காக நிறைய கதைகளை கேட்டேன். அதில் ஒன்று தான் சரவண் சொன்ன கதை. ஆக்‌ஷன் ஹீரோவாக இருக்கும் ஆதி எப்படி இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வார் என்ற நான் யோசித்தேன். அவர் கதை மீது வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை. ஒரு ஆண் குரலில் பேசும் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு சிறப்பாக நடித்தும் கொடுத்தார் நிக்கி கல்ராணி. ஒட்டு மொத்த குழுவின் உழைப்பும் இந்த வெற்றியை கொடுத்துள்ளது “என்றார் தயாரிப்பாளர் டில்லி பாபு.

“என் அப்பா இறந்த மூன்றாவது நாளில் இந்த கதையை கேட்டேன். இறந்தவர்கள் ஆவியாக வந்து நம்மோடு பேசுவார்கள் என்று சரவண் கதை சொன்னார். செண்டிமெண்டாக எனக்கு நெருக்கமான படம் இந்த மரகத நாணயம். இந்த வெற்றி விழாவிலும் என் அப்பா இங்கே அமர்ந்து என்னை பார்த்துக் கொண்டிருப்பார் என நம்புகிறேன் ” என எமோஷனலாக பேசினார் நடிகர் டேனியல்.

14“கதை தான் முக்கியம், பெரிய பெரிய ஹீரோக்கள், இயக்குனர்கள் ஹிட் கொடுக்க முடியாமல் திணறும் வேளையில் இப்படி ஒரு உண்மையான ஹிட் கொடுத்திருக்கிறார் இயக்குநர். இந்த மாதிரி நிறைய படங்கள் வர வேண்டும் ” என்றார் நடிகர் முருகானந்தம்.

”எந்த ஒரு ஹீரோவும் தன்னுடன் நடிக்கும் மற்ற நடிகர்களுக்கு பெரிய ஸ்கோப் கொடுக்க மாட்டார்கள். ஆனால் ஆதி மற்ற கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்களுக்கும் கதையில் பெரிய முக்கியத்துவத்தை கொடுத்தார். அது மிகப்பெரிய விஷயம். என் நண்பன் திபு இசையமைப்பாளராக பெரிய அங்கீகாரம் பெற்றது எனக்கு பெருமையாக உள்ளது ”என்றார் அருண்ராஜா காமராஜ்.

”தயாரிப்பாளர் டில்லி பாபு மிகவும் பிஸியான தொழிலதிபர். அவ்வளவு பிஸியிலும் நிறைய பேரிடம் கதை கேட்டு, அவற்றை ஆராய்ந்து, கதையை நம்பி என்ன வேண்டுமானாலும் செய்து கொடுப்பவர். இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் முதன் முதலில் கதை சொன்னது ஆதியிடம். கதை மீது நம்பிக்கை வைத்து இன்று வரை என்னோடு பயணித்து வருபவர். படத்தின் மிகப்பெரிய முதுகெலும்பு திபு நினன் தாமஸின் இசை தான். படத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போனது அவரின் இசை தான். சின்ன பட்ஜெட்டிலும் சிறப்பாக உழைத்த படக்குழுவால் தான் இந்த வெற்றி சாத்தியமானது. ஹாலிவுட் படங்களுக்கு சிஜி செய்யும் ஃபேண்டம் நிறுவனம் இந்த படத்திற்கு சிஜி செய்தது பெரிய பலம் ”என்றார் இயக்குநர் சரவண்.

”சமீபத்தில் ரஜினிகாந்த் அவர்களை நேரில் சந்தித்தேன். அவர் என்னை பார்த்து எப்படி இன்னும் இப்படியே இளமையாக இருக்கிறீர்கள் என்று கேட்டார். மது, சிகரெட்டை தொட்டதில்லை. அது தான் காரணம். 30 வருடங்களாக நடித்து வருகிறேன். இப்போது இளம் நடிகர்களோடு தொடர்ந்து நடித்து வருவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இன்னும் தொடர்ந்து 20 வருடங்கள் நடிக்கவே ஆசைப்படுகிறேன் ” என்றார் நடிகர் ஆனந்தராஜ்.

”வழக்கமான ஒரு ஹீரோ, ஹீரோயின் காதல், குத்துப்பாட்டு போல இல்லை இந்த படம். ஒரு வித்தியாசமான முயற்சி. நான் இல்லாமல் கூட இந்த படம் சாத்தியமாகியிருக்கும், ஆனால் ராம்தாஸ், மற்ற கதாப்பாத்திரங்கள் இல்லாமல் இந்த படம் சாத்தியமே இல்லை. அது தான் எல்லா கதாப்பாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வைத்தது. மொத்த குழுவும் உண்மையாக உழைத்தது தான் வெற்றிக்கு முக்கிய காரணமும் கூட” என்றார் நாயகன் ஆதி.

விழாவில் நாயகன்  நாயகி நிக்கி கல்ராணி, நடிகர்கள் முண்டாசுப்பட்டி ராம்தாஸ், இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ், எடிட்டர் பிரசன்னா, கலை இயக்குந ர் ராகுல், ஆடை வடிவமைப்பாளர் கீர்த்தி ஆகியோரும் கலந்து கொண்டு நன்றி தெரிவித்து பேசினர்.