நடிகர் சங்கத்தின் தீபாவளி சிறப்பு பரிசு வழங்கும் விழா!

nadigarsangam1தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தீபாவளி சிறப்பு பரிசு வழங்கும் விழா இன்று நடிகர் சங்க வளாகத்தில் தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்றது

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குநரும் நடிகருமான R.சுந்தர்ராஜன் பேசியது ,

“நான் இயக்குநராக இருந்தும் என்னை விழாவை சிறப்பிக்க அழைத்த நடிகர் சங்க தலைவர் நாசருக்கு நன்றி. நேற்று என்னை தொலைப்பேசி மூலமாக தொடர்பு கொண்டு “ நீங்கள் விழாவை சிறப்பிக்க வேண்டும் வர வேண்டும் என்று கூறினார் “ நான் அதற்க்கு நாளை காலை நினைவுபடுத்துங்கள் கண்டிப்பாக வருகிறேன் என்று கூறினேன். இன்று காலை தொலைப்பேசி மூலமாக என்னை மீண்டும் தொடர்பு கொண்டு நினைவுபடுத்தினார். விட்டால் என் வீட்டிற்கு காரை அனுப்பி என்னை அழைத்து வந்திருப்பார் தலைவர் நாசர். அவர் மனதளவில் எப்போதும் நல்ல எண்ணங்களை கொண்டவர். எப்போதும் அவர் நல்லதே நினைப்பதால் அவருக்கு எப்போதும் நல்ல பெயரே இருந்து வருகிறது. இது தான் அவரை பற்றி கிசுகிசு வராததற்கு முக்கிய காரணம். தலைவராக இருப்பதற்கு நாசருக்கு எல்லா தகுதியும் உள்ளது” என்றார் R.சுந்தர்ராஜன்.

nadigar7விழாவில் நடிகர் சங்க தலைவர் நாசர் பேசியபோது ,

“அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள் , இந்த தீபாவளியை அனைவரும் மாசற்ற தீபாவளியாக கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நடிகர் சங்கத்தில் எங்களுக்கு டீ வேண்டும் என்றால் கூட எங்களுடைய காசில் தான் நாங்கள் வாங்கி சாப்பிட வேண்டும். அந்த அளவுக்கு நாங்கள் சிக்கனமாக நடிகர் சங்கத்தில் இருந்து வருகிறோம். இந்த தீபாவளிக்கும் சென்ற தீபாவளியை போன்று சிறப்பாக அனைவருக்கும் சிறப்பு பரிசு வழங்கப்படுகிறது அதற்க்கு முக்கிய காரணம் நமது நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் , பொருளாளர் கார்த்தி , நடிகர் பாபி சிம்ஹா , சூரி ஆகியோர் தான். நாடக நடிகர்கள் பலர் நாங்களும் நிர்வாகத்துடன் இணைந்து தீபாவளி பரிசு வழங்குகிறோம் என்று கூறி எங்களிடம் கோரிக்கை வைத்தனர். அவர்கள் அவ்வாறு கூறியது எனக்கு மிக்க மகிழ்ச்சி” என்றார் தலைவர் நாசர்.

விழாவில் நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் பேசியபோது , ”தீபாவளிக்கு அனைவருக்கும் சிறப்பு பரிசு வழங்குவது மகிழ்ச்சியாக உள்ளது. சென்ற வருடம் கொடுத்தது போல் இந்த வருடமும் அனைவருக்கும் தீபாவளி சிறப்பு பரிசு வழங்க உறுதுணையாக இருந்த ராம்ராஜ் நிறுவனத்தினருக்கு நன்றி. பொருளாளர் கார்த்தி ,
​ சுந்தர்.சி , குஷ்பூ ,​
நடிகர் பாபி சிம்ஹா , சூரி ஆகியோரும் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி சிறப்பு பரிசு வழங்க உறுதுணையாக இருந்தனர். ராம்ராஜ் நிறுவனத்தினரின் உதவியால் தான் நாங்கள் இப்போது நடிகர்சங்கத்தின் 3000 உறுப்பினர்களுக்கு வேஷ்டி சட்டையை வழங்கியுள்ளோம். நாங்கள் ஸ்டார் கிரிக்கெட்டில் ஊழல் செய்துள்ளோம் என்று கூறுபவர்கள் எங்கள் மீது தேவையில்லாமல் வீண் பழி சுமத்தி பணத்தை செலவழிக்க வேண்டாம். நாளை நடிகர் சங்கத்தின் பொருளாளர் கார்த்தி ஸ்டார் கிரிக்கெட் பற்றிய அனைத்து தகவலையும் நடிகர் சங்கத்தின் இணையதளம் மூலம் அனைவரின் பார்வைக்கும் வெளியிடுவார். இதை பொது மக்கள் உள்ளிட்ட அனைவரும் நாளை முதல் பார்க்கலாம். தமிழக முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் விரைவாக குணமடைய நாங்கள் இறைவனை பிரார்த்திக்கிறோம்” என்றார் பொது செயலாளர் விஷால்.