நடிகர் சங்கத்தின் 2-வது செயற்குழு கூட்டம்!

nadigarsangam-ecபுதிய நிர்வாகம்  பொறுப்பேற்றபின் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் இரண்டாவது செயற்குழு கூட்டம் சென்னை  தி நகரில் அமைந்துள்ள அக்கார்ட் ஹோட்டலில் மாலை 6.30 மணி அளவில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் திரு.நாசர் தலைமையேற்றார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு.விஷால்  வரவேற்புரை நிகழ்த்தினார்.

 
          கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் கோரப்பட்ட. அவை ,
 
முதலாவதாக , அனுதாபத்தீர்மானத்தில் நடிகர் திரு.விவேக் அவர்களின்  மகன் மறைந்த செல்வன்.பிரசன்னா அவர்களுக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பின் நமது உறுப்பினர்கள் வழங்கிய மருத்துவ உதவி கடிதங்களை பொது செயலாளர் வாசிக்க அதனை பரிசீலனை செய்து , முடிவாக அவர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்குவதாக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் , பாலாஜி மருத்துவ கல்லூரியின் வேந்தர் திரு.ஜெகத்ரட்சகன் அவர்களும் , இந்திரா கல்வி குழுமத்தின் வேந்தர் திரு.வி.ஜி.ராஜேந்திரன் அவர்களும் சேர்ந்து  மாதந்தோறும் தென்னிந்திய நடிகர் சங்கத்தை சேர்ந்த நலிந்த உறுப்பினர்களுள் நூறு  பேருக்கு மாதந்தோறும் தலா ஆயிரம் (1,000)  ரூபாய்   ஓய்வூதியமாக கொடுக்க முன்வந்துள்ளனர்.
தென்னிந்திய நடிகர் சங்கத்திர்க்கு நடிகர் திரு.சூர்யா அவர்கள் நன்கொடையாக பத்து லட்சம் ( 10,00,000) ரூபாய் வழங்கியுள்ளார் . தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முதற்கட்ட பணிகள் இந்த தொகையினை கொண்டு துவுங்கப்பட்டுள்ளது .நன்கொடை வழங்கிய திரு. சூர்யா அவர்களுக்கும் , நடிகர் சங்கத்தின் அறக்கட்டளையில் உறுப்பினராக சேர்வதற்கு சம்மதம் தெரிவித்த பத்மஸ்ரீ.திரு.கமல்ஹாசன் , திரு. ஐசரி கணேஷ் மற்றும் திரு. எஸ்.வி.சேகர் ஆகியோருக்கு பொருளாளர் திரு. கார்த்தி , தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார். 
 
பாலாஜி மருத்துவ பல்கலைகழகத்தின் வேந்தர் திரு. ஜெகத்ரட்சகன் அவர்களும் , இந்திரா கல்வி குழுமத்தின் வேந்தர் திரு. வி.ஜி.ராஜேந்திரன் அவர்களும் நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.