நடிகர் மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ராக்கெட்ரி’

நடிகர் R.மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள “ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட்” திரைப்படம் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் முதல் முறையாக பிரத்யேகமாக திரையிடப்படுகிறது !

ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட் திரைப்படத்தை கண்டுகளிக்கும் நேரம் இறுதியாக வந்துவிட்டது: உலக சினிமா வரலாற்றில் இந்தியாவை பெருமை கொள்ள வைக்கும் நிகழ்வு அரங்கேறவுள்ளது. புகழ்பெற்ற இஸ்ரோ விண்வெளி விஞ்ஞானி நம்பி நாராயணனின் கதையை சர்வதேச அரங்கில் எடுத்துரைக்கும் அருமையான படைப்பு. நடிகர் R மாதவன் இயக்குநராக அறிமுகமாகும், வாழ்க்கை வரலாற்று திரைப்படமான ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’, 75வது கேன்ஸ் திரைப்பட விழாவில், உலக அரங்கேற்றத்தைப் பெறவுள்ளது. மே 19 வியாழன் அன்று இரவு 9 மணிக்கு ப்ரைம் டைம் ஸ்லாட்டின் போது, இந்த ஆண்டு கேன்ஸ் ஃபிலிம் மார்க்கெட்டில் இந்தியாவை அதிகாரப்பூர்வ நாடாகக் கொண்டாடுவதன் ஒரு பகுதியாக நடைபெறும் ‘பாலைஸ் டெஸ் ஃபெஸ்டிவல் பிரீமியர்’ பிரிவில் இப்படம் திரையிடப்படவுள்ளது. இந்த ஆண்டு அறிமுகமாகும் இந்நிகழ்வு எதிர்காலத்தில் பாரம்பரியமாக தொடரவுள்ளது குறிப்பிடதக்கது. இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் 75 வது ஆண்டு திருவிழா பாரம்பரியத்தின் துவக்கமாக இது நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்த அம்சமாகும். இந்தியாவின் கலாச்சார அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ திரைப்படத்தை கேன்ஸ் விழாவின் ரெட் கார்பெட் வேர்ல்ட் பிரீமியருக்கு தேர்வு செய்துள்ளது.

நடிகரும், திரைப்படத் இயக்குநருமான R.மாதவன், இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி மற்றும் விண்வெளிப் பொறியாளரான நம்பி நாராயணன் என்ற பெயரிடப்பட்ட இந்திய விஞ்ஞானியாக நடிக்கிறார், மேலும் படத்தை இயக்கி, தயாரித்து மற்றும் எழுதியுள்ளார். கேன்ஸ் திரைப்பட விழாவில் ராக்கெட்ரி: நம்பி எஃபெக்டின் உலக அரங்கேற்றம் பற்றிப் பேசிய R.மாதவன், “நான் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறேன்! நான் நம்பி நாராயணனின் கதையை மட்டுமே சொல்ல விரும்பினேன், ஆனால் தற்போது நடப்பதையெல்லாம் என்னால் நம்ப முடியவில்லை. கடவுளின் கிருபையுடன், நாங்கள் நீண்ட காலம் காத்திருந்தோம், படத்திற்கு நடக்கும் அனைத்து நல்ல விஷயங்களையும் பார்க்க நான் நன்றியுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கிறேன். ஒரு அறிமுக இயக்குநராக, என் அதிக பதட்டத்தை தருகிறது. இப்படம் இந்தியாவை பெருமைப்படுத்தும் என்று நான் நம்புகிறேன்!”

இஸ்ரோ விண்வெளி விஞ்ஞானி நம்பி நாராயணின் உறுதியான போராட்டம், மற்றும் வெற்றியின் கதையை படம்பிடித்து காட்டும், “ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட்”, இந்தி, தமிழ் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது. ஜூலை 1 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படம் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் வெளியாகிறது.

பிரம்மாண்டமான அளவில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படம் இந்தியா, பிரான்ஸ், கனடா, ஜார்ஜியா மற்றும் செர்பியா ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. ஃபிலிஸ் லோகன், வின்சென்ட் ரியோட்டா மற்றும் ரான் டோனாச்சி போன்ற புகழ்பெற்ற சர்வதேச நடிகர்களுடன், இந்திய சூப்பர் ஸ்டார்களான ஷாருக்கான் மற்றும் சூர்யா ஆகியோர் சிறப்புத் தோற்றங்களில் நடித்துள்ளனர்.

ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட் திரைப்படம், TriColour films, Varghese Moolan Pictures மற்றும் 27th Investments நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை இந்தியாவில் UFO Moviez மற்றும் Red Giant Movies ஆகிய நிறுவனங்கள் இணைந்து விநியோகம் செய்கின்றன. Yash Raj Films மற்றும் Phars Film Co மூலம் இத்திரைப்படம் சர்வதேச அளவில் விநியோகிக்கப்படுகிறது.