நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு நாளை திருமணம் !

நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடக்கும் என்று முன்பே செய்திகள் வெளியான நிலையில், அவரது நிச்சயதார்த்தம் இந்த மாத தொடக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆயுத பூஜை தினத்தில் ஹரிஷ் கல்யாண் தனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது மட்டுமல்லாமல், தனது வருங்கால மனைவி நர்மதா உதயகுமாரையும் சமூக வலைதளத்தில் அறிமுகப்படுத்தினார். இந்நிலையில், நாளை அக்டோபர் 28-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை திருவேற்காட்டில் உள்ள ஜிபிஎன் பேலஸ் திருமண மண்டபத்தில் காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் திருமணம் நடைபெறும் என்று ஹரிஷ் கல்யாணின் தந்தை தெரிவித்தார். இன்று முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், திருமணத்திற்கு அனைவரையும் அழைத்ததோடு, ஹரிஷ் கல்யாணுக்கு அனைவரும் ஆசிர்வாதம் வழங்கும்படி கேட்டுக் கொண்டார். இதற்கிடையில், நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது திரை வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து ஆதரவளித்த ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, தனிப்பட்ட முறையில் அனைவரையும் திருமணத்திற்கு அழைத்தார்.

”இது ஒரு நிச்சயிக்கப்பட்ட திருமணம். அவர் பெயர் நர்மதா உதயகுமார். நாங்கள் எங்கள் குடும்பங்கள் மூலம் சந்தித்தோம், ஒருவரையொருவர் விரும்பினோம். அப்படித்தான் இந்த பயணம் தொடங்கியது. இப்படி ஒரு வாழ்க்கை துணை கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று தனது திருமணம் குறித்து தெரிவித்திருந்தார் ஹரிஷ்.

படங்களைப் பொறுத்தவரை, ‘நூறு கோடி வானவில்’ மற்றும் ‘டீசல்’ உள்ளிட்ட இரண்டு படங்களில் நடித்து வருகிறார் ஹரிஷ் கல்யாண்.