நம்ம சென்னைக்கு நன்மை செய்ய ஒன்று கூடுவோம்!

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், விவசாயம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ,தவறான பிளாஸ்டிக பிரயோகத்தைத் தடுக்கவும், நீர் வளம் பாதுகாக்கவும் ,சென்னையைச் சுத்தமாக்கவும் ,சுற்றுச்சூழல் நகரமாக உருவாக்கவும் மாணவர்களிடம் இவை சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ‘நம்ம சென்னை’ என்கிற தன்னார்வலர் அமைப்பு ‘இயற்கையோடு இணைவோம்’ என்கிற ஒரு முன்னெடுப்பை நடத்துகிறது.

சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5ஆம் தேதி டாக்டர் ராஜலட்சுமி மோகன், அருணா ராஜ் மற்றும் திருமதி அனிதா ராஜலட்சுமி, அவர்கள் தலைமையிலும் இந்த முன்னெடுப்பு நடத்தப்படுகிறது.

நமக்கு எல்லாமும் கொடுத்த இந்த சென்னை மாநகரத்திற்கு நாம் என்ன கொடுத்திருக்கிறோம் ?

வெறும் குப்பைகளும் கழிவுகளும் மாசுகளும் மட்டும்தானா ?யோசிக்க வேண்டாமா? எதிர்காலத் தலைமுறையினருக்கு நம்ம சென்னையை இப்படியேதான் நாம் விட்டுச் செல்ல வேண்டுமா?

வருங்காலத் தலைமுறைக்கு நாம் படிப்பு, வசதி, கார் வீடு என்று கொடுத்தால் மட்டும் போதுமா?
ஆரோக்கியத்தைக் கொடுக்க வேண்டாமா ?

நம்ம சென்னையைச் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் சுற்றுச்சூழல் வளம் கொண்ட நகரமாக மாற்றும் முயற்சிக்கான தொடக்கமே இந்த ‘இயற்கையோடு இணைவோம்’ இயக்கம்.

ஜூன் 5ல் நம்ம சென்னை முன்னெடுக்கும் செயல்பாடுகள் பலவற்றில் ஒன்றாக பெசன்ட் நகர் கடற்கரையில் உள்ள குப்பைகளை காலை 6 மணி முதல் 8 மணி வரை அகற்றும் பணியை செய்கிறார்கள் .இந்த தூய்மைப் பணியில் பள்ளி, கல்லூரி மாணவர்களும் பங்கு பெறுகிறார்கள் .

அக்னி தொழில்நுட்பக் கல்லூரி, தாழம்பூரில் காலை 10 மணி முதல் 8 மணி வரை பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

அப்போது சுழல் ஆர்வலர்கள் சுற்றுச்சூழலை செழுமையாக வளர்க்கும் சாத்தியங்களையும் விவசாயத்தில் விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களையும் வருங்கால சுற்றுச்சூழல் முன்னெடுப்புகளை மேம்படுத்தும் திட்டங்களையும் ஆராய்கிறார்கள்; விவாதிக்கிறார்கள்.

மாலை 4 மணி முதல் 8 மணி வரை பசுமை மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில் சுற்றுச்சூழலை வளர்ப்பது பற்றியும் நம்ம சென்னையைப் பசுமை நகரமாக மாற்றுவது பற்றியும் விவசாய உற்பத்தி ஊக்குவிப்புகள் பற்றியும் பேசப்படும் .அதுமட்டுமல்ல ஏற்கெனவே பசுமைப் பணிகளில் சுற்றுச்சூழல் இயக்கங்களில் தன்னலம் கருதாது இயங்கி வரும் நிறுவனங்களின் சுற்றுச்சூழல் நாயகர்களையும் ஊக்குவிக்கும் வகையில் விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்படும் . சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு மரம் நடுவிழா இயக்கமும் அக்னி கல்லூரியில் நூறு மரங்களை நட்டு தொடங்கி வைக்கப்படும் .

உயிர் வாழும் ஒரே கிரகம் பூமி மட்டும்தான் .
இருக்கிற ஒரு பூமியை மரங்கள் வளர்த்துப் பசுமை போர்த்திக் காப்பாற்றுவோம். ஏனென்றால் நம் பூமிக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது .

இந்த இயக்கத்தில் பல பிரபலங்களும் தங்களை இணைத்துக் கொண்டு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்களும் இணைந்து “இயற்கையோடு இணைவோம்” என்கிற முழக்கத்தின் குரலை உரத்து ஒலிக்க உதவுமாறு கேட்டுக் கொள்கிறார்கள் நம்ம சென்னை இயக்கத்தினர்.

மேலும் விவரங்களுக்கு:
8220865671,8110996026