நான் என்ன செய்தேன் :ஆவணப்பட வெளியீட்டு விழாவில்சூர்யா பேச்சு!

IMG_0863பழம்பெரும் படத்தயாரிப்பாளர்களான கிருஷ்ணன்பஞ்சு அவர்களின் ஆவணப்பட வெளியீட்டு விழா! 
 
 பஞ்சு அவர்களின் மூத்தமகன் ப்ருத்விராஜ்,விழாவிற்கு வந்த அனைத்து சிறப்பு விருந்தினரையும் வரவேற்றார். தன் தந்தையின் 33ஆம் ஆண்டு நினைவு நாள் என்று கூறினார். இவர் 40 ஆண்டுகளாக அமெரிக்காவின் புற்றுநோய் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இயக்குநர் விக்ரமன், ” கிருஷ்ணன்பஞ்சு அவர்கள் தமிழ் சினிமாவிற்கே பெருமை என்றும், புராண படங்கள் வெளிவந்து கொண்டிருந்த வேளையில், பராசக்தி மாதிரியான ஒரு படத்தை தைரியமாக வெளியிட்டு சாதனை படைத்தனர். அதுமட்டுமின்றி, இயக்குநர் என்றாலே ஈகோ கண்டிப்பாக இருக்கும். இயக்குநராக இருந்தாலும் இதை சொல்ல நான் வெட்கப்படவில்லை. அப்படியிருக்கையில், இருவரும் இத்தனை ஆண்டுகாலம் ஒற்றுமையாக இருந்து தமிழ் சினிமாவிற்கு வைர கிரீடம் சூட்டியிருக்கிறார்கள். பஞ்சு அவர்களின் இரண்டாவது மகன் சுபாஷ் எனது நண்பர், மிகவும் உதவும் குணம் படைத்தவர் ”என்று கூறினார்.
 
குட்டி பத்மினி பேசுகையில்,” நடிப்பை வெளிக்கொண்டு வருவதில் பஞ்சு அவர்களை விட சிறந்த இயக்குநர் வேறு எவரும் இருக்க முடியாது. எனக்கு அறுபது வயதானாலும் குழந்தையும், தெய்வமும் படத்தைப் பற்றி இன்னும் எல்லோராலும் பேசப்படுவதற்கு காரணம் கிருஷ்ணன்பஞ்சு அவர்கள்தான் ” என்று கூறினார்.
 
குகநாதன் அவருடன் ஒன்றாக வாழ்ந்ததற்கு மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.
 
AVM குமரன் அவர்கள், ” நான் Line Producerஆக கிருஷ்ணன் பஞ்சுவிடம் பணியாற்றியிருக்கிறேன். என்னிடம் காட்சிகளை காண்பித்து அதைப் பற்றி என்னிடம் கருத்துக்களை கேட்டுதான் தேர்வு செய்வார். நிறை குறை எதுவாக இருந்தாலும் நான் அவரிடம் கூறிவிடுவேன். அதை அவர் ஒரே மாதிரியாகத்தான் எடுத்துக் கொள்வார். அதுமட்டுமல்லாமல் பஞ்சு அவர்கள் படப்பிடிப்புக்கு முதல்நாளே படப்பிடிப்பு தளத்திற்கு வந்து மறுநாள் எடுக்கப் போகும் காட்சிகளை பற்றி நன்றாக திட்டமிட்டு எல்லாம் சரியாக இருக்கிறதா என்று மேற்பார்வை செய்து விட்டுதான் படப்பிடிப்பு எடுக்க ஆரம்பிப்பார்.”
 
இயக்குநர் கே.பாக்யராஜ்,  ” இந்த ஆவணப்படம் ஒரு பொக்கிஷம் என்று கூறினார். எந்தவிதமான கதையாக இருந்தாலும் அதை நன்றாக செய்வதே அவர்களின் பலம் என்றும் பாராட்டினார். மேலும் குடும்பத்தில் கணவன், மனைவி அன்யோன்யம் இருந்தால் தான் இவ்வளவு பெரிய சாதனைகளை செய்ய முடியும் ”என்று அவருக்கே உரிய பாணியில் கலகலப்பாக பேசினார்.
 
IMG_0888இயக்குநர் மகேந்திரன் பேசுகையில், ”தந்தைக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்த ஆவணப்படத்தை தயாரித்த பஞ்சு அவர்களின் மகன்களை பாராட்டினார். கிருஷ்ணன் பஞ்சு அவர்களிடம் பணிபுரிந்தது கடவுள் கொடுத்த வரம்” என்றும் கூறினார்.
 


இயக்குநர் P.வாசு , ”நான் இயக்குநராக பேசுவதைவிட மாணவனாக பேசவே ஆசைப்படுகிறேன். இன்று நான் இங்கு நிற்பதற்கு கிருஷ்ணன்பஞ்சு அவர்களை பார்த்து வளர்ந்ததே காரணம் என்றும், நான் படித்த படிப்பு சினிமா, என் கல்லூரி கிருஷ்ணன்பஞ்சு என்றும் அவர்களுக்கு பெருமை சேர்த்தார். Editing King பஞ்சுவின் ஆவணப் படத்தை எடுத்ததற்கு தனஞ்செயனை பாராட்டினார்.
 
எழுத்தாளர் ஞாநி, ” ஒரு சினிமா படம் எப்படி எடுக்க வேண்டும் என்று வழிமுறையை கற்றிக் கொடுத்தவர்கள் கிருஷ்ணன்பஞ்சு. அவர்கள் சினிமாவிற்கு அளித்த பங்களிப்பை அவர்கள் ஆவணப்படம் மூலம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தற்கு மகிழ்ச்சி. இதே மாதிரி திரைத்துறையை சார்ந்த மேதைகளை பற்றி திரைப்பட சங்கம், இயக்குநர் சங்கம் போன்றவர்கள் தயாரிக்க வேண்டும். மேலும், அப்படி எடுக்கப்படும் படங்கள் மேதைகளை வாழும் காலத்திலேயே எடுக்க வேண்டும்” எனவும் கூறினார்.
 
இயக்குநர் சசி கூறுகையில்,” தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம் இவற்றைத் தாண்டி தொழில்முறையிலும் ஒன்றாக இருப்பது அரிதான விஷயம் என்றும் அதை இரண்டு மணி நேரத்தில் அழகாக காட்டிய தனஞ்செயனுக்கு பாராட்டு ” என்று கூறினார்.
 
 
நடிகர் சிவகுமார் பேசுகையில், 40 வருடங்களாக 4 தலைமுறையை வைத்து படம் எடுத்த கிருஷ்ணன்பஞ்சு அவர்களை பற்றி 2 மணி நேரத்தில் அழகாக கொடுத்த தனஞ்செயனை பாராட்டிப் பேசினார். மேலும் உயர்ந்த மனிதன் படப்பிடிப்பின் போது நடந்த சுவாரஸ்யமான நினைவுகளையும் பகிர்ந்து  கொண்டார்.
 
நடிகர் சூர்யா பேசுகையில்,” உலகில் உள்ள சினிமா படம் எடுக்கும் பல இடங்களுக்கு சென்றிருக்கிறேன். ஆனால் இந்த ஆவணப்படத்தை பார்க்கும் போது நான் என்ன செய்தேன்? என்ற கேள்விதான் என்னுள் எழுகிறது. அதுமட்டுமின்றி, கிருஷ்ணன் பஞ்சு அவர்களின் மடியில் விளையாடி இருக்கிறேன் என்று நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது “”என்று தெரிவித்தார்.
 
ஆவணப்பட இயக்குநர் தனஞ்செயன்  பேசுகையில், “இப்படம் எடுப்பதைப் பற்றி பஞ்சு அவர்களின் மூன்றாவது மகன் அபிமன்யு முதலில் என்னிடம் பேசினார். இப்படத்தை முடித்த பிறகு, இன்னும் பல சாதனையாளரின் ஆவணப்படங்களை இயக்க ஆவலாக உள்ளேன்  இயக்குநர் சுபாஷ் அவர்களும் இந்த ஆவணப்படத்தில் கிருஷ்ணன்பஞ்சு அவர்களை பற்றி பகிர்ந்திருக்கிறார். ஆனால், இன்று அவர் நம்மிடையே இல்லை. இப்படம் எடுத்து முடிக்கும் முன்பே அவர் இம்மண்ணை விட்டு மறைந்து விட்டார். அவருக்கும் இந்த நேரத்தில் அஞ்சலி செலுத்திக் கொள்கிறேன் “என்று கூறினார்.
 


 
படத்தின் சிறு குறிப்புகள் :
 
     இந்திய சினிமாவின் பழம்பெரும் படத்தயாரிப்பாளர்களுக்கு அஞ்சலி
 
இந்திய சினிமாவின் முன்னோடிகளான கிருஷ்ணன்-பஞ்சு அவர்கள் தமிழ், தெலுங்கு ஹிந்தி மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளிலும் வெற்றிகரமாக படங்களை கொடுத்திருக்கிறார்கள். இரட்டையர் என்று சொல்லப்படும் இவர்களில், கிருஷ்ணன் திரைக்கதை மற்றும் வசனங்களையும், பஞ்சு படத்தயாரிப்பு மற்றும் எடிட்டிங்கையும் கவனித்துக் கொண்டனர். இந்த இருவரும் இணைந்து இந்திய சினிமாவின் பல்வேறு மொழிகளில் 40 ஆண்டுகளாக 56 படங்களில் பணியாற்றியிருக்கிறார்கள். ஆரம்பம் முதல் இறுதிவரையிலுமே ஒன்றாக இணைந்தே பணிபுரிந்தனர்.
 
இவர்கள் இணைந்து பணிபுரிய ஆரம்பித்த படம் M.G.ஆரின் சதிலீலாவதி (1936). இவர்கள் சிவாஜிகணேசனை அறிமுகப்படுத்திய முதல் படம் பராசக்தி (1952), தமிழ் படங்களிலேயே பெரிய சாதனை படைத்தது.
 
கிருஷ்ணன்-பஞ்சு அவர்கள், சிவாஜிகணேசன், S.S.ராஜேந்திரன், பானுமதி, சாரதா, M.N.ராஜம், M.K.முத்து, ஸ்ரீரஞ்சனி, மைனாவதி, `குலதெய்வம்’ ராஜகோபால் மற்றும் பல திறமையான நடிகர் நடிகைகளை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியுள்ளனர். M.R.ராதா அவர்களை ரத்தக்கண்ணீர் மூலம் மீண்டும் திரைப்படத்திற்கு கொண்டு வந்த பெருமை இவர்களை இருவரையே சாரும். M.R.ராமசாமி போன்ற முன்னணி நடிகர்கள் இருக்கையில், நகைச்சுவை நடிகர்களான, N.S.கிருஷ்ணன், நாகேஷ், `குலதெய்வம்’ ராஜகோபால், T.R.ராமச்சந்திரன் மற்றும் `தெங்கை’ ஸ்ரீனிவாசன் போன்றோர்களை கதாநாயகனாக்கிய பெருமையும் இவர்களுக்கு உண்டு. நடிகர் சிவக்குமாரை அறிமுகப்படுத்தி அவரை வெற்றிப்பெற வைத்தவர்கள் கிருஷ்ணன்-பஞ்சு அவர்கள்.
 
`பேரறிஞர் அண்ணா, மு.கருணாநிதி, `திருவாரூர்’ தங்கராஜு மற்றும் பல எழுத்தாளர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர்கள் இந்த இரட்டையர்கள். மேலும், `முரசொலி’ மாறன், K.S.கோபாலகிருஷ்ணன் மற்றும் கவிஞர் வாலி அவர்களை தங்கள் படங்களில் திரைக்கதை எழுதவும் வைத்தார்கள்.
 
A.பீம்சிங், SP.முத்துராமன், விட்டல், பட்டு, திருமலை மகாலிங்கம் போன்றவர்களுக்கு மத்தியிலும் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர்கள் கிருஷ்ணன்-பஞ்சு அவர்கள்.
இவர்கள் இருவரும் இணைந்து தமிழில் 41 படங்களும், ஹிந்தியில் 11 படங்களும், தெலுங்கில் 3 படங்களும் மற்றும் கன்னடத்தில் 1 படமும், பல ஆவணப்படங்கள் மற்றும் விளம்பரப்படங்களும் எடுத்துள்ளனர். 56 படங்களில் ஹிந்தியில் எடுத்த `பாபி’ படம் 50 வாரங்களை கடந்து வெற்றிகரமாக ஓடியது. 3 படங்கள் வெள்ளி விழா கொண்டாடியது. 21 படங்கள் 100 நாட்களையும், சில படங்கள் 100 நாட்களை நெருங்கியும், பல படங்கள் 50 நாட்களையும் தாண்டி ஓடியது.
 
ஐந்து முறை தேசிய விருதும் மற்றும் மாநில விருதுகளும் மேலும் பல விருதுகளையும் பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த ஆவணப்படத்தை தனஞ்செயன் இயக்கியுள்ளார். பஞ்சு அவர்களின் மூன்று மகன்களான பஞ்சு ப்ருத்விராஜ், பஞ்சு சுபாஷ் சந்திரன் மற்றும் பஞ்சு அபிமன்யு இப்படத்தை தயாரித்துள்ளனர்.  இப்படத்தை நாசர் விவரிக்கிறார். J.S.விக்னேஷ் எடிட்டிங் செய்திருக்கிறார். ஒளிப்பதிவினை BOFTA மாணவர்கள் செய்திருக்கிறார்கள்.