நான் நடித்த படங்களிலேயே ‘கண்ணாடி’ படம் தான் தயாரிக்கத் தூண்டியது – நடிகர் சந்தீப் !

 கண்ணாடி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் அப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பேசியதாவது :-

பாடலாசிரியர் கோ ஷேஷா பேசும்போது:-

இந்த திரைப்படத்தில் பாடல் எழுத வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி. ஏற்கனவே தெலுங்கில் நட்சத்திர அந்தஸ்து பெற்ற சந்தீப், இப்படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். தெலுங்கு படைப்பை தயாரிக்கிறார். த்ரில்லர், காதல் போன்ற வணிக ரீதியாக மட்டுமல்லாமல் இயல்பாகவே இப்படத்தை இயக்கியிருக்கிறார். இயற்கையாகவே எல்லா அம்சங்களும் ஒரு கதம்பமாக அமைந்திருக்கும். ஆகையால், குடும்பத்தோடு கண்டு களிக்கும் வகையில் இருக்கும். தமனின் இசை இப்படத்திற்கு தூணாக அமைந்திருக்கிறது. அவருடன் பணிபுரிந்தது உணர்வுமிக்க அனுபவமாக இருந்தது என்றார்.

கலை இயக்குநர் விதேஷ் பேசும்போது:-

இயக்குநருக்கு சந்தீப் செட்டில் ஜாலியாக இருப்பார். படக்குழுவினருடன் சேர்ந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி என்றார்.

ஒளிப்பதிவாளர் வர்மா பேசும்போது:-

இயக்குநர் கார்த்திக் அனைவரையும் ஊக்கப்படுத்துவார். இரண்டு மொழிகளிலும் 45 நாட்கள் உழைத்து படத்தை முடித்திருக்கிறோம். இது என்னுடைய முதல் த்ரில்லர் படம் என்றார்.

நகைச்சுவை நடிகர் கருணாகரன் பேசும்போது:-

‘ஜீவி’ படத்திற்கு ஆதரவு கொடுத்ததற்காக பத்திரியாளர்களுக்கு நன்றி. ‘ஜீவி’ படத்தைப் போலவே இப்படத்திலும் அனைவரும் என்னை ரசிக்கும் வண்ணம் என் கதாபாத்திரம் அமைந்திருக்கும் என்றார்.

உமையாள் ஜெகன் பேசும்போது:-

விஜய் சாரே என்னை மாப்பிள்ளை என்று அழைக்க வைத்த என் மச்சான் முரளிக்கு நன்றி. மென்மேலும் இதுபோன்ற தரமான படங்களை கொடுப்போம் என்றார்.

நாயகி அன்யா சிங் பேசும்போது:-

இப்படம் எனக்கு முதல் தமிழ் படம். தமிழ் படத்தில் அறிமுகமாவதில் மகிழ்ச்சியடைகிறேன். இப்படத்தில் காதல், த்ரில்லர், நகைச்சுவை, அனைத்தும் கலந்திருக்கும் என்றார்.

இயக்குநர் கார்த்திக் ராஜு பேசும்போது:-

உள்குத்து வெளியான பிறகு சரியாக போகவில்லை. இதுபற்றி என் நண்பர்களுடன் கலந்தாலோசிப்பேன். அப்போது தான் இந்த கதை உதித்தது- 3 நாட்களிலேயே எழுதி முடித்து விட்டேன். சுப்பு சாரிடம் கதையை கொடுத்தேன். அவர் படித்து முடித்ததும் இப்படத்தைத் தயாரிக்க ஒப்புக் கொண்டார். தெலுங்கில் கொண்டு போக வேண்டும் என்று சந்தீப் விரும்பினார். ஆனால், எனக்கு தெலுங்கில் ஒரு வார்த்தைக் கூட தெரியாது என்றேன். அதற்கு அவரே உதவிபுரிந்து தெலுங்கில் தானே தயாரிப்பதாகவும் கூறினார். சண்டை காட்சிகள் சவாலாகவே இருக்கும். சந்தீப் மற்றும் கருணாகரனின் காட்சிகள் அனைவரும் ரசிக்கும்படியாக இருக்கும். இப்படத்தில் கடினமாக உழைத்தது நாயகி அன்யா சிங் தான். தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளும் தெரியவில்லையென்றாலும் ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளிலும் மாற்றி மாற்றி நடித்தார்.

இப்படம் பெற்றோர்களுக்கு மிகவும் பிடிக்கும் விதமாக திடமான கருத்தைக் கூறும் படமாக இருக்கும்

என்னுடைய முதல் படமான ‘திருடன் போலீஸ்’ படத்தைப் பார்த்துவிட்டு என் அப்பா, படம் நன்றாக இருக்கிறது. ஆனால், புகைப்பிடிப்பது மற்றும் மது அருந்துவது போன்ற காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம் என்று கூறினார். ஆனால் இப்படத்தில் காட்சிக்குத் தேவைப்பட்டதால் வைத்திருக்கிறேன் என்றார்.

தயாரிப்பாளர் விஜி சுப்புரமணியன் பேசும்போது:-

இந்த படத்தை தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்த பிறகு நாயகியாக யாரை தேர்வு செய்யலாம் என்று ஆலோசித்த போது, அன்யா சிங்கை சந்தீப் தான் பரிந்துரை செய்தார். இருப்பினும், ஆடிசன் வைத்துத்தான் அவரைத் தேர்வு செய்தோம். அவரும் நன்றாக நடித்திருக்கிறார் என்றார்.

நாயகன் சந்தீப் கிஷன் பேசும்போது:-

டீஸர் பார்த்த பலரும் நேர்மறையான கருத்துக்களைக் கூறியிருந்தார்கள். இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தான் படம் வெளியாகும் என்ற நிலை இருக்கிறது. நான் நடிக்க வந்து 12 வருடங்கள் ஆகின்றது. நான் எனக்காக படம் நடிக்கவில்லை. பார்வையாளர்களுக்காக தான் நடிக்கிறேன். ஆனால் இப்பொழுது படம் நடிப்பது என்றால் பயமாக இருக்கிறது. ஏனென்றால், ஒவ்வொரு படமும் வெளியிடுவதற்கு பெரும் போராட வேண்டியிருக்கிறது.

இப்டத்திற்காகவும் ஒவ்வொருவரும் போராடிக் கொண்டு தான் இருக்கிறோம். தரமான படமாக வரவேண்டும் என்பதற்காக கடினமாக உழைத்திக்கிறோம். இப்படம் நல்ல படமாக வரவேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டுமே இப்படத்தை எடுத்திருக்கிறோம்.

‘மாயவன்‘ படத்தை ஆன்லைனில் பார்த்த பலரும் நன்றாக இருக்கிறது என்று கூறினார்கள். இதன் பிறகு ‘கசடதபற’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இப்படம் வெளியாகும்போது எல்லோராலும் பேசும்படமாக இருக்கும்.

எல்லோரும் பேய் மற்றும் விலங்குகளை வைத்து படமெடுத்தால் வெற்றியாகும் என்றார்கள். ஆகையால் எந்த பின்னணியில் எடுத்தால் வெற்றியாகும் என்று கூறினாலும், அதை விடுத்து நான் எப்போதும் வித்தியாசமாகத் தான் நடிப்பேன் என்று கூறுவேன்.

இப்படத்தில் ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் கதையின் அடிப்படை மாறும். மேலும், 2043 வருடத்திலிருந்து ஆரம்பிக்கும். எதிர்காலத்தில் ஆரம்பித்து நிகழ்காலத்தில் முடியும்.

இதுவரை 24 படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் இப்படத்தைத்தான் தயாரிக்க வேண்டும் என்று தோன்றியது. இப்படத்தைப் பார்த்து முடித்ததும் இது பேய் படம் என்று யாராவது கூறிவிட்டால் இனிமேல் நடிப்பதையே விட்டுவிடுகிறேன் என்றார்.