பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திரையிட இளைய நடிகர்களுக்கு எத்தனை படங்கள் தேறும் ? வைரமுத்து கேள்வி

vaira-sivajiபத்து ஆண்டுகளுக்குப் பிறகு திரையிட்டுப் பார்க்க  இளைய நடிகர்களுக்கு எத்தனை படங்கள் தேறும் ? என்று  வைரமுத்து ஒரு படவிழாவில்  கேள்வி எழுப்பினார்.

புதிய தொழில்நுட்பத்தோடு உருவாகியிருக்கும் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தின் வெள்ளோட்ட விழா நேற்று நடந்தது. கலைப்புலி தாணு, நடிகர் சிவகுமார், ராம்குமார், பிரபு, விக்ரம் பிரபு, டாக்டர் கமலா செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்ட விழாவில் கவிஞர் வைரமுத்து சிறப்புரை ஆற்றினார். அவர்  பேசும் போது

”வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற வரலாற்றுக் கலைப்படத்தின் பெருமையைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் நிகழ்காலத் திரையுலகம் குறித்த தகவலறிவு வாய்த்திருக்க வேண்டும். இன்று வெள்ளிக்கிழமை வெளியாகும் ஒரு திரைப்படம் மூன்றாம் காட்சியில் நிலைத்திருந்தால் ஆகா என்கிறார்கள். சனி, ஞாயிறு நீடித்தால்  அபாரம் என்கிறார்கள். திங்கட்கிழமையும் மாற்றப்படாமலிருந்தால் வெற்றிப்படம் என்கிறார்கள்.  இப்படிப்பட்ட ஒரு திரைச்சூழலில், 56 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய தொழில்நுட்பத்தோடு தமிழர் வீட்டுக் கதவுகளை மீண்டும் தட்டுகிறதென்றால் வீரபாண்டிய கட்டபொம்மனின் புகழையும், நடிகர் திலகத்தின் பெருமையையும் நாம் உணர்ந்துகொள்ளலாம்.

தமிழ்த் திரைவரலாற்றின் நெடுங்கணக்கில் எத்தனையோ கதாநாயகர்கள் வந்து போயிருக்கிறார்கள். ஆனால் ஆண்மையை ஆர்ப்பரிக்கும் தமிழ்க்குரல் நடிகர் திலகத்தைப்போல் வேறெவர்க்கும் வாய்த்ததில்லை. அவரை ‘சிம்மக்குரலோன்’ என்று அழைத்தார்கள். சிங்கத்தின் கர்ஜனைக்குக்கூட ஒரே தொனிதான் உண்டு. ஆனால் நூறு குரலில் பேசிய சிம்மம் சிவாஜி கணேசன். மறைந்த பிறகும் ஒளியாக, ஒலியாக, உருவமாக, அசைவாக வாழ்ந்துகொண்டே இருப்பதனால் நடிகர்கள் சாகா வரம் பெற்றவர்கள்.

அன்று சிவாஜியின் உடல் கிடத்தப்பட்டிருந்தது எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது. இதோ இறந்து கிடக்கும் இந்த உடல் யார்…? வெறும் விழுப்புரம் சின்னையா பிள்ளை கணேச மூர்த்தி மட்டும்தானா…? இல்லை என்று சொல்லியது என் மனது. இதோ இந்த உடலுக்குள் சேரன் செங்குட்டுவன் இறந்து கிடக்கிறான்; அப்பர் இறந்து கிடக்கிறார்; ஜூலியஸ் சீசரும், ராஜராஜ சோழனும், வீரபாண்டிய கட்டபொம்மனும், கப்பலோட்டிய தமிழனும் இந்த ஒரே உடலுக்குள் இறந்து கிடக்கிறார்கள் என்றே என் நெஞ்சு துக்கம் கொண்டாடியது.

கலைஞருக்கும், சிவாஜிக்கும் நாங்கள் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். கலைஞரின் விரலும் – சிவாஜியின் குரலும் தான் எங்களுக்குத் தமிழ் சொல்லிக்கொடுத்தன. பொதுவாக நடிகர்கள் ஒப்பனையை அணிந்துகொண்டு நடிப்பார்கள். ஆனால் சிவாஜியோ ஒப்பனையை அணிந்துகொண்ட பிறகு பாத்திரத்துக்குள் புகுந்துகொண்டு நடித்தவர்.

இந்த வீரபாண்டிய கட்டபொம்மன் விழாவில் இளைய நடிகர்களுக்கும், இந்தியாவுக்கும் ஒரு சேதி இருக்கிறது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திரையிட்டுப் பார்ப்பதற்கு இளைய நடிகர்களுக்கு எத்தனை படங்கள் தேறும் என்ற கேள்வியை வீரபாண்டிய கட்டபொம்மன் எழுப்புகிறது.

கட்டபொம்மன் வரலாறு இந்தியாவுக்கு ஒரு கேள்வியை முன்வைக்கிறது. வெள்ளைக்காரன் வியாபாரம் செய்ய வந்தபோது பாளையப்பட்டுகள் எல்லாம் ஆற்காடு நவாபின் ஆளுகையின் கீழிருந்தன. ஆற்காடு நவாபுக்கு வெள்ளையர்கள் கடன் கொடுத்தார்கள்.  அதைத் திருப்பிக்கொடுக்க முடியாதபோது பாளையப்பட்டுகளையே ஆற்காடு நவாப் வெள்ளையர்களுக்குத் தாரை வார்த்தார். அந்நிய முதலீடுகள் எந்த நாளும் இந்தியாவுக்கு ஆபத்து என்பதைத் தான் இந்த வரலாறு நமக்குப் போதிக்கிறது. அந்நிய முதலீடு தேவைதான். அதை எந்த எல்லையில் நிறுத்திவைக்க வேண்டும் என்பது இந்திய அரசுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

இன்னொரு சுதந்திரப்போருக்கு இந்தியா தள்ளப்பட்டுவிடக்கூடாது. இதைத்தான் வீரபாண்டிய கட்டபொம்மன் நிகழ்காலத்தின் கன்னத்தில் அறைந்து சொல்கிறான்.
வீரபாண்டிய கட்டபொம்மனை நினைவு கூர்வதன் மூலம் கலாசாரப் பெருமையை, வரலாற்றுச் செழுமையை இளைய சமுதாயத்துக்குக் கொண்டு செல்வோம்.”இவ்வாறு  கவிஞர் வைரமுத்து பேசினார்.vpkb-trlr