பாரதிராஜாவுக்கு பாலா பகிரங்க எச்சரிக்கை !

IMG_0733yyநீண்ட இடைவெளிக்குப் பிறகு பாரதிராஜா ‘குற்றப்பரம்பரை’ என்கிற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் தொடக்கவிழா சமீபத்தில் நடந்தது. இந்த படம் ஆங்கிலேயர் காலத்தில் நடந்த உண்மை சம்பவத்தை நாவலாக படித்து விட்டு படம் இயக்குகிறார் பாரதிராஜா. இதற்கிடையில் இந்த கதையை பாலாவும் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியானது.

இதைத்தொடர்ந்து கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து பாலா  ஊடகங்களிடம் கூறியதாவது:-

‘வேல ராமமூர்த்தி எழுதிய ‘குற்றப்பரம்பரை’ நாவலை நான் படித்தேன். எனக்கு பிடித்தது. பாரதிராஜா இதை படமாக்க இருப்பதால் நாவலில் உள்ள சிறு பகுதியை வைத்து அந்த காலகட்டத்தில் வேறு படம் எடுக்க திட்டமிட்டேன். இதையறிந்த பாரதிராஜா, என்னிடம் போன் செய்து ‘குற்றப்பரம்பரை’ படத்தை இயக்க வேண்டாம். அது என்னுடைய கனவு படம். நான் எடுக்க போகிறேன்’ என்று கூறினார்.

மேலும் பத்திரிக்கைகளில் என்னைப்பற்றி தவறாக விமர்சித்திருக்கிறார் பாரதிராஜா. இதைக்கேட்டு நான் மிகவும் வருந்தினேன். ‘குற்றப்பரம்பரை’ என்பது ஒரு வரலாற்று சம்பவம். இதை யார் வேண்டுமானாலும் இயக்கலாம். அவர்மட்டும் தான் இயக்குவேன் என்று கூறுவது குழந்தைத் தனமாக இருக்கிறது.

பாரதிராஜா வரலாற்றை படமாக எடுக்கிறார். நான் கதையை படமாக எடுக்க இருக்கிறேன். என் படத்திற்கும் பாரதிராஜா இயக்கும் படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

ரத்தினகுமார் கூறிய கதையை மையமாக வைத்து பாரதிராஜாவும் இயக்க இருக்கிறார். ரத்தின குமார் என்னை கதை திருடன் என்று கூறி இருக்கிறார். மேலும் அறிவு இல்லை என்றும் கூறியிருக்கிறார். பிதாமகன் படப்பிடிப்பின் போது பாரதிராஜாவை தரக்குறைவாக பேசியவர் ரத்தினகுமார். இன்று பாரதிராஜா பின்னால் நின்று கொண்டு என்னை தவறாகப் பேசி வருகிறார். பொறுமையை இழந்துதான் தற்போது பேச வந்திருக்கிறேன்.

நான் பாரதி ராஜா, ரத்தினகுமார் இருவரையும் எச்சரிக்கிறேன். என்னைப்பற்றி இருவரும் தவறாக பேசினால், உங்களுக்கு நல்லது இல்லை’’ என்றார்.