‘புஷ்பா’ விமர்சனம்

நடிகர் அல்லு அர்ஜுன்,நடிகை ராஷ்மிகா மந்தனா,இயக்குநர் சுகுமார் பந்த்ரெட்டி,இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்,ஓளிப்பதிவாளர் மிரோஸ்லாவ் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம்.

செம்மரக் கடத்தல் கும்பல் தலைவரான அஜய் கோஷ்யுடன் வேலை செய்கிறார் நாயகன் அல்லு அர்ஜுன். செம்மரங்களைப் போலீசாருக்குத் தெரியாமல் லாவகமாக கடத்திச் செல்லும் தைரியம் அல்லு அர்ஜுனுக்கு உண்டு. அதனால் அவருக்குப் பொறுப்புகளையும் பணத்தையும் கொடுக்கிறார் அஜய் கோஷ்.

ஒரு கட்டத்தில் அல்லு அர்ஜுனைக் கூட்டாளியாகவும் சேர்த்துக் கொள்கிறார் அஜய் கோஷ். இதன் பிறகு அஜய் கோஷின் இன்னொரு பார்ட்னரான சுனில் மூலம், அல்லு அர்ஜுனுக்குச் சிக்கல் வருகிறது. இறுதியில், அந்த சிக்கலை அல்லு அர்ஜுன் எப்படிச் சமாளித்து மீண்டார்?என்பதே படத்தின் மீதிக்கதை.

தெலுங்கில் கதாநாயகனைப் பிரதானமாக்கி மையப்படுத்தித்தான் படங்கள் வரும்.புஷ்பராஜ் கதாபாத்திரத்தில் இதில் வரும் அல்லு அர்ஜுன் திரை முழுவதும் ஆதிக்கம் செலுத்தி இருக்கிறார். தோளை ஒரு பக்கமாகச் சாய்த்து நடக்கும் மேனரிசம், பன்ச் வசனங்கள், தைரியம் என நடிப்பில் மாஸ் காண்பித்து இருக்கிறார்.

நடனக் காட்சிகள், ஸ்டண்ட் காட்சிகள் ஆகியவற்றில் கவனிக்க வைத்திருக்கிறார்.

நாயகியாக வரும் ராஷ்மிகா மந்தனா கவர்ச்சியில் ரசிகர்களைக் கவர்கிறார். மற்றொரு பக்கம் பாடல் காட்சியில் வந்து அசத்தி இருக்கிறார் சமந்தா. அஜய் கோஷ் மற்றும் சுனில் ஆகியோரும் வில்லத்தன நடிப்பில் மிரட்டி இருக்கிறார்கள்.

தெலுங்கில் பெரிய வணிக இயக்குநரான சுகுமார் வழக்கமான கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார். திரைக்கதையில் சுவாரஸ்யம், ரசிகர்களுக்கு ஏற்ற வணிக அம்சங்கள் எனக் கலந்து கொடுத்து இயக்கி இருக்கிறார். 2ஆம் பாகம் இருப்பதால் வேண்டுமென்றே திரைக்கதையின் நீளத்தை நீட்டி வைத்ததுபோல் இருக்கிறது.

கேங்க்ஸ்டர் படத்துக்குத் தேவையான ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார் மிரோஸ்லா . தேவிஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்குப் பலம். குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளில் மிரட்டி இருக்கிறார்.

மொத்தத்தில் ‘புஷ்பா’காஸ்ட்லியான சரவெடி.