‘மட்டி’ விமர்சனம்

பிரேமா கிருஷ்ணதாஸின் பிகே 7 கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில், டாக்டர் பிரகபல் இயக்கியுள்ள படம் ‘மட்டி’.
முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்க ஆறு மொழிகளில் பிரமாண்டமாக எடுக்கப்பட்டிருக்கிறது. தமிழிலும் உருவாகியுள்ளது.

மட்டி படத்தின் கதை மிகவும் எளிமையானது. அண்ணன் தம்பி இருவரும் ஒரு பிரச்சினையால் பிரிந்து வாழ்கிறார்கள். தம்பி கல்லூரியில் வில்லனை ஒரு விவகாரத்தில் சீண்ட, அந்த வில்லன் உன்னை மட்டி ரேஸில் தோற்கடித்து எப்படி அழிக்கிறேன் பார் என சபதம் எடுக்கிறான். இந்த நிலையில் தம்பியைக் காக்க அண்ணன் வருகிறான். அண்ணன் தம்பி இருவரும் இணைந்து வில்லனை மட்டி ரேசில் முட்டி மோதி ஜெயித்து எப்படி வெல்கிறார்கள் என்பதே படம்.சுருக்கமாகச் சொன்னால் பகைமை உணர்ச்சியின் நீயா நானா விளையாட்டுதான் என்று தோன்றலாம்.

இதுவரை ஹாலிவுட் படங்களில் மட்டுமே இது மாதிரியான ரேஸ் காட்சிகளின் பிரமாண்டத்தைப்பார்த்திருக்கிறோம். தமிழில் இதைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. இந்தியாவின் முதல் மண் சாலைப் பந்தய-மட்டி ரேஸ் படமாக வந்திருக்கிறது இந்தப் படம்.

மட்டி ரேஸ் என்பதே இங்கு பலர் அறிந்திராத புதிதான ஒன்று, ஆனால் அதைச் சரியாகத் திரைக்கதையில் கோர்த்து, ஒரு பரபரப்பான ஆக்ஷன் படமாக உருவாக்கி இருக்கிறார்கள். நடிகர் ரிதன் கிருஷ்ணா மற்றும் கார்த்திக்கிருஷ்ணா இருவரும் அண்ணன் தம்பியாக வந்து கலக்கியிருக்கிறார்கள். புதுமுகம் என்று நம்பமுடியாத அளவுக்கு நடிப்பில் மிளிர்கிறார்கள்.

நாயகனாக ரிதன் மலைகளில் கார் ஓட்டும் காட்சிகளிலும், வில்லனுடனான சண்டைக்காட்சிகளிலும் அசத்தியிருக்கிறார். தம்பிக்காக நிற்கும் காட்சிகளில் மனதைக் கவர்கிறார். தம்பியாக வரும் கார்த்திக்கிற்கு நாயகனுக்கு இணையான பாத்திரம். அண்ணனை முறைப்பதும், முரண்படுவதும் என்றிருந்தவர், க்ளைமாக்ஸில் அண்ணனுடன் இணைந்து வில்லனை ஜெயிக்கும் இடங்களில் ஈர்க்கிறார்.

நாயகிகளாக வரும் அனுஷா சுரேஷ், அமித் சிவதாஸ் நாயர் ஆகியோருக்குப் பெரிதாக வேலை ஒன்றும் இல்லை. தங்களுக்குத் தரப்பட்ட பாத்திரத்தைச் சிறப்பாகச் செய்து ரசிகர்களைக் கவர முயன்றிருக்கிறார்கள். வில்லன் டோனி, தான் வரும் இடங்களில் எல்லாம் மிரட்டியிருக்கிறார்.

காதல், காமெடியை விட பரபர விறுவிறு ஆக்ஷன் காட்சிகள் தான் படத்தில் மேலோங்கி இருக்கின்றன. ஆனால் அந்த அனைத்துக் காட்சிகளும் ரசிகர்களைக் கவரும்படி உள்ளன. அதிலும் க்ளைமாக்ஸ்ஸில் இறுதி 20 நிமிடங்கள் பார்ப்பவரை சிலிர்க்க வைத்துக் விரைப்பேற்றும் ரகம். எப்படி இந்த ரேஸைத் திரையில் கொண்டு வந்தார்கள் என ஆச்சர்யமாக இருக்கிறது.காடு மலைமுகட்டில் முனையில் தாறுமாறாக வேகமாகப் பறந்து செல்லும் கார்களை கே.ஜி. ரதீஷின் கேமரா பின்தொடர்ந்து துரத்தித் துரத்திப் பயணித்து படம்பிடித்திருக்கிறது. அவ்வகையில் ஒளிப்பதிவு செய்திருக்கும் கே. ஜி. ரதீஷுக்கு தனியே பூங்கொத்து தரலாம். ‘ கே.ஜி. எஃப்’ புகழ் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார். அனைத்து இடங்களிலும் கே ஜி எஃப் வாடை பலமாக அடிக்கிறது. ஆனால் அது படத்திற்கு நன்றாகப் பொருந்தியிருக்கிறது.
ஷான் லோகேஷ் படத்தொகுப்பில் படம் பரபரப்பாகச் செல்கிறது.

‘புலி முருகன் ‘ புகழ் ஆர்.பி.பாலா இப் படத்திற்குத் தமிழில்
வசனம் எழுதி இருக்கிறார். ஆக்ஷன் படங்களில் பேச்சைவிட செயலுக்குத் தான் முக்கியத்துவம் இருக்கும் எனவே அளவோடு அழகாக வசனம் எழுதி இருக்கிறார்.படம் மேலும் ஐந்து மொழிகளில் எடுக்கப்பட்டிருக்கிறது. ஆக்ஷன் படம் என்பதால் இயக்குநர் காதல் காமெடி காட்சிகளில் கவனம் செலுத்தவில்லை.

மண் சாலை பந்தயத்தினை மட்டும் பிரதான பொருளாக எடுத்து காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். எனவே திரைப்படங்களில் இடம்பெறும் நெகிழ்வு ஊட்டும் உணர்ச்சிகள் போன்ற மற்ற அம்சங்களில் ஒரு போதாமை தெரிகிறது .இருந்தாலும் படத்தில் விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லை. க்ளைமாக்ஸில் இருக்கும் பரபரப்பு, படம் முழுவதும் இருந்திருந்தால் இன்னும் ரசிக்கும்படி இருந்திருக்கும்.

‘மட்டி’ பரபரப்பு விரும்பும் ஆக்ஷன் ரசிகர்களுக்கான விருந்து.