மறைந்த நடிகர் ஶ்ரீகாந்தின் நினைவலைகள்: நடிகர் சிவகுமார் பகிர்வு !

தமிழ் சினிமாவின் பழம்பெரும் மூத்த நடிகர் ஸ்ரீகாந்த் நேற்று காலமானார்.  

நடிகர் ஶ்ரீகாந்த் 1965 இல் இயக்குநர் ஸ்ரீதர் இயக்கிய  ‘வெண்ணிற ஆடை ‘ திரைப்படத்தில் அறிமுகம் ஆனார். இவர் நிறைய படங்களில் சிவாஜி கணேசன், சிவகுமார், முத்துராமன் , ஜெய்சங்கர் போன்ற நடிகர்களோடு துணைப் பாத்திரங்களில் நடித்தார். பின்னர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்களோடு எதிர்நாயகனாகத் தோன்றினார். தமிழ் சினிமாவின் பெரிய நட்சத்திரங்கள் கலைஞர்கள் போற்றக்கூடிய நடிகராக விளங்கினார்.

தற்போது 82 வயதான ‘தங்கப்பதக்கம் ‘ ஸ்ரீகாந்த் நேற்று காலமானார். தன் நண்பரின் மறைவையொட்டி நடிகர் சிவகுமார் அவர் குறித்து  நினைவுக்குறிப்புகளை பகிர்ந்துள்ளார்.

‘எனது அருமை நண்பர் திரு ஶ்ரீகாந்த் 1965 ஏப்ரலில் ஜெயலலிதாவின் முதல் ஜோடியாக ஶ்ரீதரின் ‘வெண்ணிற ஆடை ‘ படத்தின் கதாநாயகனாக அறிமுகமானார்.  ஈரோட்டில் பிறந்து, அமெரிக்க தூதரகத்தில் பணி புரிந்து, கே. பாலசந்தரால் மேடை நடிகராகப் பிரபலமடைந்த வெங்கி என்கின்ற ஶ்ரீதர் , மேஜர் சந்திரகாந்த் என்ற கதையின் நாடகத்தில் நடித்த கதாபாத்திரத்தின் பெயர் தான் ஶ்ரீகாந்த். திரைப்படத்தில் அறிமுகமாகும்போது அதே பெயரையே ஒப்புக் கொண்டு நடித்தார். நாகேஷ் நகைச்சுவையில் விஸ்வரூபம் எடுத்தார், வாலி கவிதையால் கரை கண்டார் , வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் துவக்க நாட்களில் சாப்பாட்டுக்கே திண்டாட்டம் போட்ட போது, தன் கையால் சமைத்துப் போட்டு, மாம்பலம் கிளப் ஹவுசில் இருவரையும் காப்பாற்றியவர் ஶ்ரீகாந்த். கதாநாயகனாக நிற்க முடியவில்லை என்றாலும் ‘சில நேரங்களில் சில மனிதர்கள் ‘ , ‘ராஜநாகம்’ போன்ற முக்கிய படங்களில் முத்திரை பதித்தார்.  என்னோடு இணைந்து, ‘மதன மாளிகை ‘, ‘சிட்டுக் குருவி, இப்படியும் ஒரு பெண், அன்னக்கிளி, யாருக்கும் வெட்கமில்லை , நவக்கிரகம்’ எனப் பல படங்களில் நடித்தவர். சமீபத்தில் 80 வயது பூர்த்தி அடைந்த விழா கொண்டாடினார். இன்று அவரது ஒரே மகள் மீரா வீட்டில் ஶ்ரீகாந்த் , லீலாவதி , மீரா கணவர் zach அலெக்சாண்டர், பேத்தி காவேரி ஆகியோரையும் சந்தித்து ஓவியம் , சினிமா என்று இரண்டு காஃபி டேபிள் புக்ஸை கொடுத்து வாழ்த்தி வந்தேன்” என்று தனது டைரிக்குறிப்பை எடுத்துக்காட்டி,
“இன்று அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் ” என்று இரங்கல் தெரிவித்துள்ளார் நடிகர் சிவகுமார்.