மலேசியாவில் படமாகும் ‘கில்லி பம்பரம் கோலி ‘

gilli3நாசர், அஞ்சலி நடித்த மகாராஜா என்ற படத்தை இயக்கிய மனோஹரன் இயக்கத்தில் அடுத்து உருவாகும் படத்திற்கு “ கில்லி பம்பரம் கோலி “ என்று பெயரிடப் பட்டுள்ளது. ஸ்ரீ சாய் பிலிம் சர்க்யூட் என்ற பட நிறுவனம்  இந்தப் படத்தை முழுக்க முழுக்க மலேசியாவிலேயே படமாக்க திட்டமிட்டுள்ளனர்.

கதாநாயகர்களாக நரேஷ், பிரசாத், தமிழ் ஆகியோர் நடிக்கிறார்கள். வில்லனாக புதுமுகம் சந்தோஷ்குமார்  நடிக்கிறார். கதாநாயகியாக தீப்திஷெட்டி என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். மற்றும் கஞ்சா கருப்பு, தலைவாசல் விஜய்  ஆகியோர் முக்கிய வேடமேற்கிறார்கள்.

நாக கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.

சினேகன் மனோஹரன் பாடல்களுக்கு Y.R.பிரசாத் இசையமைக்கிறார்.   எடிட்டிங் –  பி.சாய்சுரேஷ்  ,  கலை – பழனிவேல் ,தயாரிப்பு நிர்வாகம் –    எம்.செந்தில்

கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து இயக்குகிறார் மனோஹரன்.                              படம் பற்றி  மனோஹரன் என்ன சொல்கிறார்? gpg22

“நமது பாரம்பர்ய விளையாட்டுகளான கில்லி, பம்பரம், கோலி போன்ற விளையாட்டுக்கள் இன்றைய நவீன யுகத்தில் மறைந்து கொண்டிருக்கிறது.

தெருவில் இறங்கி விளையாடுவது என்பது இன்று குறைந்து விட்டது. செல்போன் டெலிவிஷன், இன்டர்நெட் போன்ற நவீனங்கள் தெரு விளையாட்டை மாற்றி விட்டது. கிரிகெட், புட்பால், ஹாக்கி போன்ற நவீன விளையாட்டுக்கள் கில்லி, பம்பரம் கோலி போன்ற விளையாட்டின் சக்தியை குறைத்து விட்டது.

கில்லி, பம்பரம், கோலி போன்ற விளையாட்டை முழுமையாக உணர்ந்து எக்ஸ்பர்ட்டான நான்கு பேர் தொழில் நிமித்தமாக மலேசியா சென்று அங்கே உருவான ஒரு பிரச்சனைக்கு இந்த விளையாட்டுக்களைப் பயன்படுத்தி எப்படி தீர்த்துக் கொள்கிறார்கள் என்பது கதை !

பெற்றோர்களால் புறக்கணிக்கப் பட்ட அந்த விளையாட்டுகள் அந்த நால்வரின் வாழ்க்கைக்கு எப்படி உபயோகமாகிறது என்பதை கலகலப்பாக உருவாக்கி உள்ளோம்” என்றார் இயக்குநர்.

படப்பிடிப்பு முழுவதும் மலேசியாவிலும், அதைச் சுற்றியுள்ள நாடுகளிலும் ஒரே கட்டமாக நடைபெற்று முடிவடைகிறது.